தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 februari 2015

யாழில் பா.உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவி எரிப்பு

யாழ் நகரில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை குறித்த போர்க்குற்ற விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா? உலகே உனக்கு கண்ணில்லையா?: கண்ணீரில் மிதக்கும் யாழ் நகர்
யாழில் காணாமற்போனோரின் உறவுகள் இன்று காலை பத்து மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
காணாமற் போனோரின் உண்மை நிலைமையை தெளிவுபடுத்தக் கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், ஐ நா மனிதவுரிமை விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தி்னை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் யாழ் நகரில் இருந்து பேரணியாக சென்று நல்லூர் வீதியில் உள்ள யு.என்.எச்.சி.ஆர் அலுவலகம் வரை சென்று, பின்னர் யு.என்.எச்.சி.ஆர் அலுவலகத்தில் மகஜரும் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா? உலகே உனக்கு கண்ணில்லையா? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கண்ணீர் மல்க தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி.பாஸ்கரா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
ஐ.நா சர்வதேச விசாரணை அறிக்கையினை மார்ச் மாதம் வெளியிடக் கோரியும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிகோரியும், காணாமல் போனவர்களை கண்டறியக்கோரியும் இன்றைய தினம் யாழ்.நகரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டம் ஒன்றிணை நடத்தியுள்ளனர்.
யாழ்.நகர பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டம் ஆஸ்பத்திரி வீதி வழியாக நகர்ந்து பின்னர் பிரதான வீதிக்குச் சென்று, அங்கு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின்  முன்பாகவுள்ள உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவிடத்தின் முன்பாக இடம்பெற்றது. 
இதன்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க தங்கள் பிள்ளைகளை விடுவிக்குமாறும் தங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலையினைக் கண்டறியுமாறும் கண்ணீர் மல்க உருக்கமான கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
மேலும் ஐ.நா சர்வதேச விசாரணை அறிக்கை உரியகாலத்தில், வெளியிடப்பட வேண்டும். எனவும் அவர்கள் அங்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப்பொம்மைக்கு தீயிட்டு தங்கள் எதிர்ப்பினைக் காண்பித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten