தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 februari 2015

ரணிலுக்கு எதிராக பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முறைப்பாடு ?

நாம் சிங்கங்கள் எம்மை சீண்டினால் விளைவுகள் மிக மோசமாகி விடும் : மகிந்த ஆதரவுக் ..

[ Feb 20, 2015 04:28:03 PM | வாசித்தோர் : 11925 ]
எம்மை இனவாதிகளென சித்திரித்துக்கொண்டு முஸ்லிம் அரசியல் தலைவர்களே இனவாதக் கருத்துக்களை பரப்புகின்றனர். அசாத்சாலி போன்ற முஸ்லிம் இனவாதிகளை அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டும் என தெரிவிக்கும் பொதுபலசேனா பௌத்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாம் சிங்கங்கள் எம்மை சீண்டினால் விளைவுகள் மிக மோசமாகி விடும் எனவும் எச்சரித்தார். பொதுபல சேனா பௌத்த அமைப்பினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதில் தொடர்ந்து அவர் கருத்து தெரிவித்ததாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து நுகேகொடையில் இடம்பெற்ற மக்கள் பொதுக்கூட்டத்தில் இனவாத செயற்பாடுகளோ அல்லது இனவாத கருத்துகளோ எதுவுமே பரப்பப்படவில்லை. ஆனால் அசாத் சாலி ஆரம்பத்தில் சவால் விடுத்தது மட்டுமன்றி இனவாதிகளாக சிங்கள மக்களை சித்திரித்திருப்பதும் கண்டிக்கத்தக்க விடயமே. எம்மை இனவாதிகள் என தெரிவிக்கும் இவர்கள் தாங்கள் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பது தொடர்பிலும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முஸ்லிம் மக்களின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்காக இத் தலைவர்கள் இனவாதக் கருத்துக்களை மட்டுமே பரப்புகின்றனர்.
முஸ்லிம் சமூகத்தினை உண்மையாக நேசிக்கும் அமைதியை விரும்பும் முஸ்லிம் அரசியல் தலைவர்களோ உண்மையான முஸ்லிம் அமைப்புக்கள் இங்கு இருக்குமானால் அசாத் சாலி போன்றோரை உடனடியாக அரசியலில் இருந்து வெளியேற்றி ஓரங்கட்டி விட வேண்டும். சிங்களவர்கள் யார் என்பது தெரியாது இவர்கள் எம்முடன் மோதிப் பார்க்கின்றனர். நாம் சிங்கங்களைப் போன்றவர்கள். நாம் அமைதியாக இருப்பதனால் எம்மை வேட்டையாட முயற்சிக்கின்றனர். ஆனால் எமக்கு கோபம் வருமாயின் அதன் பின்னர் நிலைமைகள் மிக மோசமானதாக அமைந்து விடும் என்பதை முஸ்லிம் பிரிவினைவாத தலைமைகள் தெளிவாக விளக்கிக்கொள்ள வேண்டும்.
மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்குகளை கொடுத்து அவரை ஜனாதிபதியாக்கி விட்டதால் முஸ்லிம் தீவிரவாத செயற்பாடுகளை நாட்டில் முன்னெடுக்கலாம் என எவரேனும் நினைத்தால் அதற்கு ஒரு போதும் சந்தர்ப்பம் கிடைக்காது. யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த கொள்கை அழியாது அழிக்க விடவும் மாட்டோம். பள்ளிவாசல்களில் இனவாதத்தை பரப்பி முஸ்லிம் சமூகத்தினை நாட்டில் வேறொரு தனித்த சமூகமாக மாற்றுவதன் காரணத்தினாலேயே அன்று முஸ்லிம் இனவாதம் என்ற ஒன்று நாட்டில் உருவாகியுள்ளது. இது மிகப்பெரிய பாதிப்பினையே நாட்டில் ஏற்படுத்தி விடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 http://www.athirvu.com/newsdetail/2344.html


ரணிலுக்கு எதிராக பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முறைப்பாடு ?

[ Feb 21, 2015 08:31:10 AM | வாசித்தோர் : 2850 ]
ப்ரொன்ட்லைன் சஞ்சிகையை இலங்கையில் விநியோகம் செய்ய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனமதித்தமைக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கள கடும்போக்குடைய அமைப்பு ஒன்று இவ்வாறு காவல் நிலையத்தில் பிரதமருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிங்கள தேசிய முன்னணி என்ற அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது. இந்த அமைப்பின் சார்பில் அதன் தலைவர் மெடில்ல பஞ்ஞாலோக்க தேரர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். பிரதமரின் சில தீர்மானங்கள் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கிற்கு பயணம் செய்யும் வெளிநாட்டு கடவுச்சீட்டு உடையவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கின் அதி உயர் பாதுகாப்பு வலயங்களைச் சேர்ந்த ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவிலிருந்து ஒரு லட்சம் அகதிகளை மீள அழைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ப்ரொன்ட்லைன் சஞ்சி;கைக்கு கடந்த காலங்களில் தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும், அந்த சஞ்சிகை சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் பிரதமரின் நேரடித் தலையீட்டின் அடிப்படையில் இந்த சஞ்சிகையை இலங்கையில் விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பிரதமரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துமாறு பஞ்ஞாலோக்க தேரர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கோரியுள்ளார். 1987ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினால் வழங்கப்பட்ட செவ்வியொன்றை ப்ரொன்ட்லைன் சஞ்சிகை மீள் பிரசூரம் செய்துள்ளது. இந்த சஞ்சிகையின் குறித்த செவ்வி தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதன் அடிப்படையில் முன்னதாக சஞ்சிகையின் பிரதிகள் சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர், பிரதமர் அந்த சஞ்சிகைகளினால் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை எனத் தெரிவித்து குறித்த சஞ்சிகையை இலங்கையில் விநியோகம் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். பிரதமருக்கு எதிராக இவ்வாறான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எவ்வித தகவல்களையும் இதுவரையில் ஊடகங்களுக்கு வழங்கவில்லை.
 http://www.athirvu.com/newsdetail/2353.html

Geen opmerkingen:

Een reactie posten