தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 februari 2015

சுதந்திரக் கட்சி இணங்க மறுத்தால் நிறைவேற்று அதிகாரம் முற்றாக ஒழிக்கப்படும்!- பிரதமர்



கிழக்கு மாகாண சபையில் முதன் முதலாக அமைச்சு பதவிகளை கூட்டமைப்பு பொறுப்பேற்கின்றது: யோகேஸ்வரன்
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 11:11.05 AM GMT ]
கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பு முதன்முதலாக அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கின்ற நிலையில், இதனை பலரும் விமர்சித்தாலும் இவ் அமைச்சு பதவிகளை பயன்படுத்தி மக்களின் கல்வியிலும் வாழ்வாதாரத்திலும் என்ன வழியில் உயர்த்தமுடியும் என்ற எண்ணத்தில் தான் எங்கள் செயற்பாடுகள் அமையவிருக்கின்றன என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திராய்மடு, நாவலடி நாமகள் வித்தியாலயத்தில் நேற்று வியாக்கிழமை மாலை நடைபெற்ற வருடாந்த மெய்வல்லுனர் போட்டியின் இறுதி நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கிழக்கு மாகாணசபையில் முன்னர் ஒரு தமிழர் முதலமைச்சராக இருந்தபோதும்கூட இந்த பாடசாலையின் தேவைகள் பூரணமாக நிறைவேற்றப்படவில்லை. அந்தக்காலத்தில் கல்வி சார்பான பல பொருட்கள் பல இடங்களிலிருந்து கிடைத்தன. அவை எந்தவகையில் பயன்படுத்தப்பட்டன என்பதை நாங்கள் விரைவாக ஆராயவுள்ளோம்.
முன்பு பாடசாலைகளின் நிலை தொடர்பாக ஆராய்வதற்கு எமது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது வேறு மக்கள் பிரதிநிதிகளோ அழைக்கப்படக்கூடாது என்ற நிலை காணப்பட்டது.
முன்னாள் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக இருந்த இராணுவ அதிகாரி இந்த கட்டளையை இட்டிருந்ததை கருத்தில்கொண்டு வலயக்கல்விப் பணிப்பாளர்கள் எமது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் பாடசாலை நிகழ்வுகளில் கலந்துகொள்ள இடமளியாத வகையில் சில தடைகளை செய்தார்கள்.
சில வலயக்கல்விப் பணிப்பாளர்கள் அதிபர் ஒன்றுகூடலை நடத்தி அதில் நீங்கள் எக்காரணம் கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை அழைக்கக்கூடாது என்று நேரடியாகவே சொன்னார்கள். ஆனால் அதிபர்களும் ஆசிரியர்களும் தமிழ்ப் பற்றின் காரணமாக எங்களை அழைக்க வேண்டும், எங்கள் குறைகளை அவர்களிடம் கூறி அதை நிவர்த்தி செய்யவேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தாலும் சில அதிகாரிகளின் அச்சுறுத்தல் காரணமாக அதை செய்ய முடியாமல் தங்கள் கவலைகளை தெரிவித்திருந்தார்கள்.
காலம் வெகுவாக மாறிவிட்டது. இன்று எங்களுக்கு பாடசாலை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு நேரமில்லை. காரணம் ஒரு நாளில் இரண்டு மூன்று விளையாட்டுப் போட்டிகள் நடந்தவண்ணம் உள்ளன. எங்களை பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைக்கக்கூடாது என உத்தரவிட்ட முன்ளாள் ஆளுநரான இராணுவ அதிகாரி இடமாற்றப்பட்டு இன்று புதிய மாகாண சபையில் இன்னும் ஒரு சில தினங்களில் நாங்கள் கல்வி அமைச்சு பொறுப்பை ஏற்கவுள்ளோம்.
கிழக்கு மாகாணசபையில் திருகோணமலையை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் கௌரவ தண்டாயுதபாணி அவர்களுக்கு கல்விஅமைச்சு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடவுள் எவ்வாறு திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றார் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
பாடசாலையின் குறைகளை இயன்றவரை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவிருக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னுமொரு அமைச்சர் கிழக்கு மாகாணசபையில் பொறுப்பேற்கவிருக்கின்றார்.
விவசாயம் சார்ந்த அமைச்சுப் பதவிகூட எங்களுக்கு கிடைத்திருக்கின்றது. அதனை விரைவில் பொறுப்பேற்று மக்களுக்கு சேவையாற்றவிருக்கின்றோம். கிழக்கு மாகாணத்தில் தமிழ்த்தேசியக் கூட்டடைப்பு முதன்முதலாக அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கின்ற நிலை தற்போதுதான் உருவாகியிருக்கின்றது.
எந்தக்கட்சியானாலும் சரி தங்கள் பதவிகளை பயன்படுத்தி இலஞ்ச ஊழலில் செயற்பட்டால் மக்களாகிய நீங்கள் அதனை தட்டிக்கேட்க வேண்டும். இலஞ்சம் ஊழலுக்கு எங்கள் கட்சி ஒருபோதும் இடமளிக்காது. அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
அவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்றால் நீங்கள் அதை முன்னிலைப்படுத்துங்கள். நான் அதற்கு நடவடிக்கை எடுப்பேன். கல்வி ரீதியாக இன்று பல பிரச்சினைகள் இருக்கின்றன. சில இடங்களில் அரசியல் காரணமாக பல ஆசிரியர்களும் அதிபர்களும் நிரந்தரமாக ஒரே பாடசாலையில் இருக்கின்றார்கள்.
அந்த நிலை மாற்றப்படவேண்டும். சகலரும் சகல இடங்களுக்கும் சென்று கல்வியூட்டக்கூடிய நிலை ஏற்படவேண்டும். அரசியல் பின்ணணி காரணமாக பாடசாலை நிர்வாகம் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படவேண்டும். இந்த நிலையை நாங்கள் ஏற்படுத்தவிருக்கின்றோம்.
இந்தப்பாடசாலையின் மேலதிக தேவைகளை உரிய இடங்களில் கதைத்து பெற்றுத்தர கடமைப்பட்டுள்ளேன். நாம் என்ன வறுமை வந்தாலும் கல்வி கற்பதில் ஊக்கம் காட்ட வேண்டும். அவ்விடயத்தில் பெற்றோர்களும் கரிசனை காட்ட வேண்டும்.
ஒரு காலத்தில் கல்வியில் உயர்ந்த நிலையிலிருந்த நாங்கள் இன்று பாதிக்கப்பட்டிருக்கின்றோம். கல்வியில் எங்கள் முன்னேற்றம் குறைவாக இருக்கின்றது. எங்கள் ஒற்றுமையின்மையே அதற்கு காரணமாகும். கல்வியில் நாங்கள் ஆர்வம் காட்டாமையும் ஒரு காரணமாகும்.
பெற்றோர்கள் ,ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், கிராமத்துச் சங்கங்கள், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து எமது சமூகத்தை கல்வியில் உயர்த்த வேண்டும். கல்வியில் உயரும்போது மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றி சகல துறைகளிலும் எமது மக்களை முன்னேற்ற முடியும்.
கடந்தகால யுத்தத்தாலும் சுனாமியாலும் பலவழிகளிலும் இழப்புகளை சந்தித்த நாங்கள் கல்வியிலாவது முன்னேற்றம் கண்டு எமது சமூகத்தை முன்னேற்றுவதற்கு அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும். வறுமையை காரணம்காட்டி பாடசாலைக்கல்வியை இடைநிறுத்துவதையோ பிள்ளைகளை வேறு வேலைக்கு அமர்த்துவதையோ பெற்றோர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
கல்வியென்பது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையை அவர்கள் சரியாக பயன்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டும். வறுமை காரணமாக பிள்ளைகளின் கல்வி ரீதியான தேவைகளை நிறைவேற்றமுடியாத பெற்றோர்கள் என்னை தொடர்பு கொள்ள முடியும்.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv6C.html

சுதந்திரக் கட்சி இணங்க மறுத்தால் நிறைவேற்று அதிகாரம் முற்றாக ஒழிக்கப்படும்!- பிரதமர்
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 11:12.59 AM GMT ]
நிறைவேற்று அதிகாரம் சம்பந்தமான விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு தேசிய நிறைவேற்றுச் சபையின் பொது நிலைப்பாட்டுக்கு எதிராக இருக்குமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய நிறைவேற்றுச் சபை நேற்று கூடிய சந்தர்ப்பத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை சம்பந்தமான விடயங்களை கலந்துரையாடிய போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொது நிலைப்பாட்டுக்கு எதிரான யோசனையை முன்வைத்துடன் 19வது திருத்தச் சட்டம் மூலம் 17வது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பான கருத்துக்களை முன்வைத்தது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்துச் செய்ய தேசிய நிறைவேற்றுச் சபை தீர்மானித்துள்ள போதிலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தில் மாத்திரம் அந்த அதிகாரங்களில் ஓரளவு அதிகாரங்களை அவருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது பதவிக்காலத்தின் பின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக ஒழித்து புதிய தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என தேசிய நிறைவேற்றுச் சபை பொது நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதற்கு இணங்கவில்லை என்றால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்கும் திருத்தம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் நாடாளுமன்றத்தில் அதற்கு இணக்கம் கிடைக்கவில்லை என்றால் அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல போவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் ஆணையை புறந்தள்ள முடியாது எனவும் மக்களின் ஆணைக்கு இணங்க மறுத்தால் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்ல வேண்டியேற்படும் எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv6D.html

Geen opmerkingen:

Een reactie posten