தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 februari 2015

இது கரும்புலிகளுக்கு சுதந்திரம் கிடைக்கும் யுகம்: ஊடகவியலாளர்களிடம் விமல் கூறிய கதை

அரசபுலனாய்வு சேவை வீழ்ச்சி: இராணுவ புலனாய்வு பிரிவு வளர்ச்சி
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 07:15.28 AM GMT ]
இலங்கையின் பிரதான புலனாய்வு அமைப்பான அரச புலனாய்வு சேவையை பார்க்கிலும் இராணுவ புலனாய்வு பிரிவு வளர்ச்சி கண்டுள்ளது என ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் இலங்கையின் இராணுவ கட்டமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இராணுவ புலனாய்வு பிரிவின் உயர் மட்டத்தில் இதுவரை மாற்றங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என குறித்த வார இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவில் படையினர்களின் எண்ணிக்கை ஒன்றிலிருந்து 7ஆக அதிகரித்துள்ளது எனவும், இராணுவ புலனாய்வு பிரிவு வடக்கில் பல்வேறு சர்ச்சைகளின் மையமாக காணப்பட்டு வருகின்றது எனவும் அவ்வார இதழ் தெரிவித்துள்ளது.
இதனால் அரச புலனாய்வுச் சேவைக்கு நிகராக இராணுவ புலனாய்வு சேவை செயற்படுகின்றது என கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுடன், பொலிஸ் துறையை கொண்ட அரச புலனாய்வு சேவை இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனவும் அவ் வார இதழ் குறிப்பிட்டுள்ளது.

கோத்தபாய விரட்டிய முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நாடு திரும்பல்
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 07:19.22 AM GMT ]
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, கொலை அச்சுறுத்தல் விடுத்து இலங்கையில் இருந்து விரட்டிய முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி நாளை நாடு திரும்பவுள்ளதாக தெரியவருகிறது.
பிரசாந்த ஜெயகொடி தற்போது அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்து வருகின்றார். 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரி ஜெயகொடி சிட்னியில் இருந்து வருகிறார்.
புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படாது என கருதும் அவர் மீண்டும் இலங்கை திரும்ப தீர்மானித்துள்ளார். கொழும்பு திரும்பியதும் கொழும்பு கலதாரி ஹொட்டலில், தான் நாட்டை விட்டு செல்ல காரணமாக அமைந்த விடயங்கள் குறித்து ஊடகங்களுக்கு தகவல் வழங்க உள்ளார்.
இதன் பின்னர், பிரசாந்த ஜெயகொடி மீண்டும் பொலிஸ் திணைக்களத்தில் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் தற்போது மந்தகதியில் முன்னெடுக்கப்படும் சில விசாரணைகள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான அவரிடம் கையளிக்கப்படவிருப்பதாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

துட்டகைமுனு போல் கதிர்காமத்தில் திரிசூலத்தை காணிக்கையாக செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றிய மகிந்த
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 07:30.33 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்று காலை 8.12 என்ற சுபநேரத்தில் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் தங்கத்தில் செய்யப்பட்ட ஆறு அங்குலம் உயரமான திரிசூலம் ஒன்றில் வெள்ளி காசு ஒன்றை கட்டி தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
துட்டகைமுனு மன்னன் போருக்கு செல்லும் முன்னர் இப்படியான வேண்டுதல் ஒன்றை நிறைவேற்றியதாக வரலாற்று கதைகளில் கூறப்பட்டுள்ளது.
இதனால், மகிந்த ராஜபக்சவின் வேண்டுதலில் ஏதேனும் விசேடம் இருக்கலாம் என பலர் கூறுகின்றனர்.
சில நேரம் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலுக்கு வர எண்ணியிருக்கலாம் என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி நேற்று கதிர்காமம் சென்றிருந்ததுடன் 84 ஆயிரம் விளக்குகளை ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டதுடன் கிரிவேஹேர விகாரையில் இரவு தர்ம உபதேசத்திலும் கலந்து கொண்டார்.
அவருடன் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, புதல்வர்களான நாமல் ராஜபக்ச, யோஷித்த ராஜபக்ச, அண்ணன் மகனான ஷசீந்திர ராஜபக்ச, உதய கம்மன்பில, முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே ஆகியோரும் சென்றிருந்தனர்.
முன்னர் மகிந்த ராஜபக்ச, கதிர்காமம் செல்லும் போது அவருடன் மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் அரசியல்வாதிகள் அங்கு செல்வது வழக்கம். எனினும் இம்முறை அவர்களைக் காணக்கிடைக்கவில்லை.

இது கரும்புலிகளுக்கு சுதந்திரம் கிடைக்கும் யுகம்: ஊடகவியலாளர்களிடம் விமல் கூறிய கதை
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 09:10.55 AM GMT ]
கரும்புலிகளுக்கு விடுதலை கிடைக்கும் காலம் இது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தில் கரும்புலிகளுக்கு விடுதலை கிடைக்கின்றது. விடுதலை புலிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற தலைமை தாங்கி அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களையும் அவர்களது குடும்பங்களையும் கைது செய்து சிறையில் அடைக்கும் யுகம் ஆகும்.
அவ்வாறான மாற்றங்களே இலங்கையில் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. 2011ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கே நான் இன்று குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வந்தேன் எனவும், அதற்கமைய எனது வாக்கு மூலங்களை குறித்த அதிகாரிகளிடம் நான் முன்வைத்தேன், இருந்தாலும் என்னை மீண்டும் அழைப்பதற்கு வாய்ப்புகள் காணப்படுகினறன எனவும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்கிவிட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெற்ற காலத்தில் பேரணியொன்றை நடத்தியமை குறித்தே இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது எனவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.
எனக்கும் முறைப்பாடுகள் செய்துள்ளார்கள் எனது மனைவிக்கும் முறைப்பாடுகள் செய்துள்ளார்கள். எதிர்காலத்தில் எனது பிள்ளைகளுக்கும் முறைப்பாடுகள் செய்வார்களா என்று தெரியவில்லை என தெரிவித்த முன்னாள் அமைச்சர், 18ம் திகதி நுகேகொடையில் இடம்பெற்ற கூட்டத்திற்கு பின்னர் நல்லாட்சி அதிகாரிகள் அவநம்பிக்கையுடன் காணப்படுவதாகவே தெரிகின்றது.
நல்லாட்சி அதிகாரிகளின் இதயம் அதிகமாக துடிக்கும் சந்தர்ப்பங்களில் எங்களை இவ்வாறு அதிகமாக விசாரணைக்கு கொண்டுவர வேண்டிய அவசியமும் உள்ளது. எங்களுக்கு எதிராக சட்டத்தை பலப்படுத்த வேண்டிய அவசியமும் அதிகமாக உள்ளது.
என்னையும், என் மனைவியையும் அல்லது பிள்ளைகளையும் எப்படியாவது சிக்க வைத்து எங்களது அரசியல் பயணத்தை நிறுத்துவதற்கான முயற்சியை இவர்கள் மேற்கொள்கின்றனர்.
எது எவ்வாறாயிருப்பினும் நாங்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் செயற்பட மாட்டோம், மண்டியிடவும் மாட்டோம், நாங்கள் தேர்ந்தெடுத்த முறையிலே எதிர்வரும் காலங்களில் அரசியல் பயணத்தை மேற்கொள்வோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போலியான கடவுச்சீட்டு குறித்து குறிப்பிட்டது முற்றாக உண்மைக்கு புறம்பானது, எமது அரசியல் பயணத்தை நிறுத்துவதற்காகவே இவ்வாறான போலிக்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர், இந்த குற்றச்சாட்டுக்கள் போலியானவை என நாம் விரைவில் நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என முன்னாள் அமைச்சர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns5B.html

Geen opmerkingen:

Een reactie posten