தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 februari 2015

பாலச்சந்திரனின் மரணம்: புலிகளே கொன்றிருக்கலாமாம்: சரத் பொன்சேகா வெளியிடும் புதிய தகவல் !

சர்வதேச ரீதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தமக்கு எதுவுமே தெரியாது என்றும் புலிகளே அவரைக் கொன்றிருக்கலாம் என மறைமுகமாகவும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிரபாகரனின் இளைய மகன் தொடர்பில், இராணுவத் தளபதி என்ற வகையில் தனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்றும் அவரது சடலம் கிடைத்தது என்றுகூட தனக்கு அறிக்கை கிடைக்கவில்லை என்றும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிட்டபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
பாலச்சந்திரன் என்பவர் பிரபாகரனின் இளைய மகன். அவர் ஆயுதம் ஏந்திய பெரியவர் அல்லர். ஒரு சிறு பிள்ளை என்பது பார்த்தவுடனேயே தெரியும். அந்தச் சிறுவனுக்கு என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில் பொன்சேகா பின்வருமாறு தெரிவித்தார்.
பிரபாகரனுக்கு நடந்தது எமக்குத் தெரியும். நாம் பார்த்தோம். அதை உறுதிப்படுத்தினோம். அவரது மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி. அவர் பிரபாகரனின் இராணுவத்திலிருந்த கேணல் ஒருவர். அவருக்கு நடந்ததையும் நாம் பார்த்தோம். ஊடகங்களின் ஊடாக தெரியப்படுத்தினோம். ஆனால், அவரது மனைவி, பெண் பிள்ளை, சிறு பிள்ளைக்கு நடந்தது எமக்குத் தெரியாது. எமக்கு தகவல் கிடைக்கவும் இல்லை. எந்த சாட்சியும் கிடைக்கவில்லை. கே.பி. மாமா ஹெலிகொப்டரில் வந்து தன்னைக் கூட்டிப் போவார் என்று பிரபாகரனின் இளைய மகன் கூறிக்கொண்டு இருந்தார் என நாம் அறிந்தோம். அதன் பின்னர் நான் அந்தப் படத்தைப் பார்த்தேன். சனல் – 4 வினுடைய படத்தைப் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சிறையில் இருந்த காலத்தில் பத்திரிகைச் செய்திகளினூடாக இதை அறிந்தேன்.
அந்த சிறு பிள்ளை சாரம் ஒன்றைச் சுற்றிக்கொண்டு பங்கர் ஒன்றில் இருந்தது. அந்த சாரம் வடபகுதித் தமிழ் மக்கள் பயன்படுத்தும் சாரம் போன்றது. அதை நான் அவதானித்தேன். அதன் பின்னர் அங்கு சிப்பாய் போன்ற ஒருவர் நிற்பது போன்று ஒரு பக்கம் மட்டும் தெரிகின்றது. ஆனால், அந்தச் சீருடை இலங்கை இராணுவச் சிப்பாய் அணியும் சீருடை அல்ல. அது இந்திய இராணுவத்தின் காட்டு உடைக்குச் சமமான ஓர் ஆடை. இந்திய இராணுவத்தின் காட்டு உடையை புலிப் பயங்கரவாதிகள் அதிகமாக அணிவர். அங்கிருந்து களவெடுத்துக் கொண்டுவந்து அணியும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது.அப்படி ஒருவர்தானா அங்கு இருக்கிறார் என்ற சந்தேகம் எனக்கு வந்தது. அதன் பின்னர் உள்ள படங்களில் அவர் கீழே விழுந்து கிடக்கிறார். வயிற்றில் மூன்று துப்பாக்கிச் சூடுத் துளைகள் உள்ளன. இதனூடாக எனக்கு ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்தது.
அவர் ஒரு பதுங்கு குழியில் இருக்கின்றார். அது எமது பதுங்கு குழியா? புலிகளின் பதுங்கு குழியா என்று தீர்மானிக்க முடியாது. யுத்தத்தின் இறுதி 2 மாதங்களாக புலிகள் பதுங்கு குழிகளில்தான் வாழ்ந்தனர். வீடுகளில் இருக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவ்வாறானதொரு பதுங்கு குழியில் இருந்திருக்கலாம். அவர்களுடைய பதுங்கு குழியில் இருந்து எடுத்த புகைப்படமாகவும் இருக்கலாம். அவர் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தார். பிடித்து வைத்து சுட்டனரா அல்லது வேறேதும் நடந்ததா என்று தெரியவில்லை. இரண்டு நாள் இறுதி யுத்தத்தின்போது இரவு நேரங்களில் பலர் கொல்லப்பட்டனர். ஆனால், இராணுவத் தளபதி என்ற வகையில், பிரபாகரனின் மகன் பற்றி எனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. அவரது சடலம்கூட கிடைத்தது என்றுகூட எனக்கு அறிக்கை கிடைக்கவில்லை” – என்றார்.
http://www.athirvu.com/newsdetail/2370.html

Geen opmerkingen:

Een reactie posten