தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 februari 2015

பாலச்சந்திரன் அருகே இந்திய ராணுவம்?


பிரபாகரனது மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட சடலத்துக்கு அருகில் இருக்கும், இராணுவச் சிப்பாய் அணிந்திருக்கும் சீருடை இலங்கை இராணுவத்தினுடைய சீருடை அல்ல.
அது இந்திய இராணுவத்தின் காட்டு உடை என்று தெரிவித்திருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா, பிரபாகரனின் மனைவி மற்றும் மகளுக்கு என்ன நடந்தது என்று இன்று வரை தெரியாது எனக் குறிப்பிட்டார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாலசந்திரனுக்கு என்ன நடந்தது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரபாகரனுக்கு நடந்தது எமக்குத் தெரியும். அதை உறுதிப்படுத்தினோம். அவரது மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி. அவர் பிரபாகரனின் இராணுவத்திலிருந்த கேணல் ஒருவர். அவருக்கு நடந்ததையும் நாம் பார்த்தோம். ஊடகங்களின் ஊடாகத் தெரியப்படுத்தினோம்.
ஆனால் அவரது மனைவி, பெண்பிள்ளை, சிறுபிள்ளைக்கு நடந்தது எமக்குத் தெரியாது. எமக்குத் தகவல் கிடைக்கவும் இல்லை. எந்தச் சாட்சியும் கிடைக்கவில்லை.
‘கே.பி. மாமா யஹலிகொப்டரில் வந்து கூட்டிப் போவார்’ என்று பிரபாகரனின் இளைய மகன் கூறிக் கொண்டு இருந்தார் என்று நாம் அறிந்தோம். அதன் பின்னர் நான் அந்தப் படத்தைப் பார்த்தேன். சனல்-4 படத்தைப் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
சிறையில் இருந்த காலத்தில் பத்திரிகைச் செய்திகளினூடாக இதை அறிந்தேன்.
அந்தச் சிறுபிள்ளை சாரம் ஒன்றைச் சுற்றிக்கொண்டு பங்கர் ஒன்றில் இருந்தது. அந்தச் சாரம் வட பகுதித் தமிழ் மக்கள் பயன்படுத்தும் சாரம் போன்றது.
அதை நான் அவதானித்தேன். அதன் பின்னர் அங்கு சிப்பாய் போன்ற ஒருவர் நிற்பது போன்று ஒரு பக்கம் மட்டும் தெரிகின்றது. ஆனால், அந்தச் சீருடை இலங்கை இராணுவச் சிப்பாய் அணியும் சீருடை அல்ல. அது இந்திய இராணுவத்தின் காட்டு உடைக்குச் சமமான ஓர் ஆடை.
இந்திய இராணுவத்தின் காட்டு உடையை புலிகள் அதிகமாக அணிவர். அங்கிருந்து களவெடுத்துக் கொண்டுவந்து அணியும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது. அப்படி ஒருவர் தானா அங்கு இருக்கிறார் என்ற சந்தேகம் எனக்கு வந்தது.
அதன் பின்னர் உள்ள படங்களில் பாலச்சந்திரன் கீழே விழுந்து கிடக்கிறார். வயிற்றில் மூன்று துப்பாக்கிச் சூட்டுத் துளைகள் உள்ளன. இதனூடாக எனக்கு ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்தது. அவர் ஒரு பதுங்குகுழியில் இருக்கின்றார்.
அது எமது பதுங்குகுழியா? புலிகளின் பதுங்குகுழியா? என்று தீர்மானிக்க முடியாது.
போரின் இறுதி 2 மாதங்களாகப் புலிகள் பதுங்குகுழிகளில்தான் வாழ்ந்தனர். வீடுகளில் இருக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தி ருக்கும் என்று நான் நினைக்க வில்லை.
அவ்வாறானதொரு பதுங்கு குழியில் பாலச்சந்திரன்
இருந்திருக்கலாம். அவர்களுடைய பதுங்குகுழியில் இருந்து எடுத்த ஒளிப்படமாகவும் இருக்கலாம். அவர் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தார். பிடித்து வைத்து சுட்டனரா அல்லது வேறேதும் நடந்ததா என்று தெரிய வில்லை.
இறுதிப் போரின் கடைசி இரண்டு நாள்களிலும் பலர் கொல்லப்பட்டனர். ஆனால், இராணுவத் தளபதி என்ற வகையில், பிரபாகரனின் மகன் பற்றி எனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. அவரது சடலம் கூட கிடைத்தது என்று கூட எனக்கு அறிக்கை கிடைக்க வில்லை, என்று தெரிவித்துள்ளார்.

 http://www.jvpnews.com/srilanka/98330.html

Geen opmerkingen:

Een reactie posten