தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 februari 2015

எனக்கு மரணதண்டனையே கொடுத்திருக்கலாம்! - பேரறிவாளன் விரக்தி



இன்னும் நீண்டுகொண்டுதான் இருக்கிறது பேரறிவாளன் என்னும் அப்பாவியின் விடுதலைக் கனவு. மாநில அரசு விடுதலை உத்தரவிட்டு சரியாக ஓராண்டு முடிந்த நிலையில் பேரறிவாளனை அவரது வழக்கறிஞரோடு இந்திய ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது.
இப்போது என்ன மனநிலையில் இருக்கிறீர்கள்?
சொற்களால் விவரிக்க முடியாத மனவேதனையில் சிக்கித் தவிக்கிறேன். ஒரு மாநில முதல்வரே விடுதலை அறிவிப்பை வெளீயிட்ட பின்பும், இவ்வளவு நீண்டகாலம் சிறையில் வாடும்நிலை நீடிக்கும் என்பதை என்னால் கர்பனை செய்ய முடியவில்லை. 16 ஆண்டு மரண தண்டனை தந்த மன அழுத்தத்தைக் காட்டிலும் கூடுதலான சுமை கடந்த ஓராண்டாக அழுத்துவதை உணர்கிறேன். கனவுகூட இன்பமாக வருவதில்லை. மரண தண்டனையே மேல் எனத் தோன்றுகிறது.


மாநில அரசு உங்களுக்கு ஆதரவாக இருந்தும்கூட மீண்டும் சிக்கலுக்குச் சென்றுவிட்டதே வழக்கு?
உண்மைதான். ஏதோ நேற்றுதான் சிறைக்கு வந்த எங்களை அடுத்த நாளே தமிழக அரசு விடுதலை செய்துவிட்டது என்பது போன்ற எண்ணத்தில் கடந்த நடுவண் காங்கிரஸ் அரசு விடுதலையை எதிர்த்ததால் வந்த வினை அது. 24 ஆண்டுகள்  சிறையில் இருப்பது என்பது - அதிலும் பரோல் விடுப்பின்றி இருப்பது என்பது எவராலும் மனதாலும் நினைத்துப் பார்க்கமுடியாத துன்பம். எவ்வளவு உறுதியானவரையும் ரணமும் மனநோயும் ஆட்கொண்டிருக்கும்.

இருந்தும் இன்று உங்களின் கேள்விகளுக்கு சற்றேனும் நல்ல மனநிலையோடு என்னால் பதில் சொல்ல முடிகிறதென்றால் காரணம் உங்களைப் போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் ஆதரவும் அன்பான அரவணைப்பும்தான் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

தமிழக மக்களின் ஒட்டுமொத்த உள்ளார்ந்த விருப்பத்தின் வெளிப்பாடாகத்தான் மாண்புமிகு அம்மா அவர்கள் விடுதலை நிலைப்பாட்டை எடுத்தார்.

விடுதலை ஆகப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் அதன் பிறகான ஏமாற்றமும் உங்களை எப்படி பாதித்தது?
நான் விடுதலை அடைந்தவுடன் முதலில் சந்திக்கவேண்டிய மனிதராக மறைந்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் வீ.ஆர்.கிருட்டிணய்யர் இருந்தார். இன்று அவர் உயிருடன் இல்லை. எனது வாழ்வின் மிகப்பெரும் இழப்பாக இதனைக் கருதுகிறேன். மூத்த வழக்கறிஞர் கண்ணபிரான் இயக்குனர் ஐய்யா மணிவண்ணன், பேராசிரியர் பெரியதாசன், பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன், எனது பாட்டிகள் இருவர் என மிக அண்மையில் அடுத்தடுத்து இழப்புக்களைச் சந்தித்துவிட்டேன். எனது விடுதலைக்குள் வேறு இழப்புக்கள் எதனையும் சந்தித்துவிடக்கூடாது என மனம் கிடந்து தவிக்கிறது.

கடந்த ஆண்டு இதே நாளில் எனது குடும்பம் மற்றும் நண்பர்கள்கூடி எனது வெளி உலகப் பயணத்தை முடிவு செய்திருந்தனர். எங்கு போவது, யார் யாரைச் சந்திப்பது, எந்த இடங்களைச் சுற்றிப்பார்ப்பது என ஒரு வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது.

நான் வெளியில் வருகிறபோது என்ன உடை, என்ன காலணி அணிவது என்பதுவரை எனது பாசத்திற்குரியவர்கள் முடிவுசெய்து எனக்கு கட்டளை இயிட்டிருந்தார்கள்.

கானல்நீர்போல் அவை கடந்துபோயின. அந்த உடையினைக் காண்இறபோதெல்லாம் காயங்கள் மீண்டும் கீறப்படுவதாக உணர்கிறேன்.

மரண தண்டனை வேண்டாம் என உங்கள் தாயார் அணிந்திருந்த பட்ஜை கழற்றச் சொன்னது ஏன்?
வழக்கின் ஒற்றை ஆதாரமான எனது ஒப்புதல் வாக்கு மூலத்தைப் பதிவுசெய்த அதிகாரி தியாகராஜன் ஐ.பி,எஸ் அவர்கள் கடந்த 22.11.2013 அன்று ஊடகங்கள் வழியே அறிவு நிரபராதி என வாக்குமூலம் அளித்த உடனேயே எனக்கு விடுதலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 18.02.2014 அன்று தண்டனைக் குறைப்புத்தான் கிடைத்தது.

நிரபராதிக்கு தூக்கு என்ன ஆயுள் என்ன எதுவாயினும் தவறு தானே.

முடிவற்ற ஆயுள் சிறையில் இருப்பதைக் காட்டிலும் நிம்மதியே இல்லாத வாழவை எனது பெற்றோருக்குத் தருவதைக் காட்டிலும் மரண தண்டனை என்ற முடிவு சிறப்பானது தானே.

மேலும் மரண தண்டனை ஒழிப்பு மட்டுமே எமது பணி என்பதுபோல் பலரும் தவறாகப் புரிந்துகொண்டு தண்டனைக் குறைப்புக் கிடைத்தவுடன் நிரபராதிக்கான அநீதி குறித்து கவலைகொள்ளாமல் கடந்து போய்விட்டனர்.

அதனால்தான் எனது தாயாரிடமும் இதனை வலியுறுத்தினேன். இத்தனை ஆண்டுகளாக அவர் அணிந்துவரும் மரண தண்டனை வேண்டாம் என எழுதப்பட்டிருக்கும் பட்ஜை கழற்றி எறியச் சொன்னேன். இனி எல்லைக்கு மேல் இந்த துன்பம் நீடிக்குமெனில் மரண தண்டனையையே நிறைவேற்றும்படி கேட்கும் நிலைக்கு தள்ளப்படுவேன்.

நன்றி
குமுதம்
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt4G.html

Geen opmerkingen:

Een reactie posten