தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 februari 2015

என்ன ஆகும் ஈழப்பிரச்னை?கொலைகார அரசின் புதிய முகமூடி மைத்திரிபால சிறிசேனா! தமிழகம் வர ரகசியத் திட்டம்: அம்பலப்படுத்தும் வைகோ



கொலைகார அரசின் புதிய முகமூடி மைத்திரிபால சிறிசேனா! தமிழகம் வர ரகசியத் திட்டம்: அம்பலப்படுத்தும் வைகோ
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 07:12.08 AM GMT ]
இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடந்தகால வரலாறு என்ன? என்பதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அம்பலப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்து இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தனி இறையாண்மையுடன் சுதந்திரமான அரசு நடத்தி வந்த ஈழத் தமிழ் இனம் ஐரோப்பியரின் படையெடுப்புகளால் அதிகாரம் இழந்து, 1948 பிப்ரவரி 4 முதல், சிங்கள இனத்தின் வல்லாதிக்க அரசின் கீழ் உரிமை இழந்தது.
மானத்தோடும் கண்ணியத்தோடும், சிங்களவர்களுக்குச் சமமான உரிமைகளோடும் வாழ்வதற்காகத் தொடர்ந்து தமிழர்கள் அறப்போராட்டங்களை நடத்தியபோது, சிங்கள அரசின் கொடிய அடக்குமுறைகளுக்கு உள்ளாகினர்.
‘ஈழத்துக் காந்தி’ எனப் போற்றப்பட்ட தந்தை செல்வா தலைமையில் அனைத்துத் தமிழ் இயக்கங்களும் வட்டுக்கோட்டையில் ஒன்றுகூடி, 1976 மே 14 இல் சுதந்திரத் தமிழ் ஈழப் பிரகடனம் செய்தன. அதனையே இலக்காகக் கொண்டு உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ந்ததைப் போலவே இழந்த சுதந்திரத்தைப் பெற இளைய தலைமுறை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது.
தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தியாகமும் வீரமும் நிறைந்த மகத்தான போர் நடத்தி தமிழ் ஈழத்தின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். உன்னதமான நிர்வாகத்தைத் தந்தனர்.
இந்திய அரசின் துரோகத்தாலும், வழங்கிய ஆயுத பலத்தாலும், மகிந்த ராஜபக்சேவின் சிங்கள அரசு போரில் விடுதலைப்புலிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதோடு, இலட்சக்கணக்கான தமிழர்களை ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவித்தது. நடந்தது அப்பட்டமான தமிழ் இனப் படுகொலை ஆகும்.
ஜெனீவாவில், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசு நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய, சுதந்திரமான விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அக்குழுவினரை இலங்கைக்குள் அனுமதிக்க மறுத்ததோடு, குற்றவாளியே நீதிபதியான கதையாக ‘இலங்கை அரசே விசாரித்துக் கொள்ளும்’ என்று ராஜபக்சே அறிவித்தான்.
இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மனித உரிமைகள் சாசனத்திற்கு எதிராக. கொலைகாரச் சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டது.
2014 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பு ஏற்ற பின்னரும். ஈழத்தமிழர் பிரச்சினையில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அநீதியான போக்கையே பின்பற்றி ஈழத்தமிழர்களுக்கு வஞ்சகம் செய்யத் தொடங்கி விட்டது.
வருகின்ற மார்ச் மாதம், ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கின்ற நிலையில், இலங்கையின் புதிய அதிபர் மைத்திரி பால சிறிசேனா ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவதைப் போல ஒரு பொய் முகத்தை வெளி உலகுக்குக் காட்டிக் கொண்டே நடைமுறையில் முன்னைய அரசின் இனவாத வெறிப் போக்கை அப்படியே பின்பற்றுகிறார்.
‘சிங்களப் பேரினவாதம் என்ற நாணயத்தின் மற்றொரு பக்கம்தான் சிறிபால சேனா’ என, தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோதே நான் அறிக்கை விடுத்தேன்.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஈழத்தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதை மைத்திரிபால ஏற்கவில்லை, அங்கிருந்து சிங்கள இராணுவத்தையும், காவல்துறையையும் ஒருபோதும் அகற்ற மாட்டோம் என்றும் கூறி விட்டார். ஐ.நா. விசாரணையை ஏற்க மறுத்து விட்டார், சிங்கள அரசே விசாரித்துக் கொள்ளும் என அறிவித்து விட்டார். இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்னும் ஒருபடி மேலே சென்று இலங்கையில் என்றுமே ஒற்றையாட்சி முறைதான், கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று ஆணவத்தோடு அறிவித்துவிட்டார். இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைக்கும் என்று இங்குள்ள சில மேதாவிகள் இனியும் ஏமாற்றுகிற வேலையில் ஈடுபட வேண்டாம்.
புதிய அதிபராக பொறுப்பேற்று இருக்கிற மைத்திரி பால சிறிசேனவின் கடந்தகால வரலாறு என்ன? என்பதை தமிழக மக்களும் உலகத் தமிழர்களும் அறிந்துகொள்ள வேண்டும்.

இவர் 1968 ஆம் ஆண்டு இலங்கை சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பின் இவர் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) எனும் இந்தியாவுக்கு எதிரான, தமிழ் இனத்துக்கு கொடூர வைரியான கட்சியில் இணைந்தார்.
1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யின் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியில் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டார். 1973 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்தார். கொலைகார ராஜபக்சே அரசாங்கத்தில் இரண்டாம் நிலைத் தலைவராகவும், தற்காலிக பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தார். முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட கடைசி நாட்களில் இராணுவத்துக்கு கட்டளையிடும் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.
இன்று சிங்கள கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட பண்டார நாயக்க,  ராஜபக்சே குடும்பங்களுக்கு இடையில் நடந்த ஆதிக்கப் போட்டியில் அதிபர் பதவி ஆசையினால் ராஜபக்சேவிடம் இருந்து பிரிந்து வேட்பாளராகி வெற்றி பெற்றார். இவரது வெற்றிக்கு ஈழத் தமிழ் இனப்படுகொலை நடத்திய இராணுவ தளபதி சரத்பொன்சேகா கூட்டம் முழு மூச்சாக வேலை செய்தது. இந்தப் பின்னணியைக் கொண்ட புதிய அதிபர்தான் புதுடில்லிக்கு வருகிறார்.
2009 இல் மனிதாபிமானம் உள்ளவர்களின் மனதை உலுக்கும் கோரமான தமிழ் இனப் படுகொலையைச் சிங்கள இராணுவம் நடத்தியபோது, இராணுவ அமைச்சராக இருந்தவர்தான் இந்த மைத்திரி பால சிறிசேன என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது. இவரது கரங்களும் தமிழர்களின் ரத்தம் தோய்ந்த கரங்கள்தான்.
மார்ச் மாதம் ஜெனீவாவில் நடக்கும் மனித உரிமை கவுன்சில் அமர்வில், இலங்கையில் நிலைமை சீராகி விட்டது என்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்திய- இலங்கை அரசுகள் கூட்டுச் சதி செய்கின்றன. அதனுடைய முதல் கட்ட அரங்கேற்றம்தான், சிங்கள அதிபர் மைத்திரி பால சிறிசேனவின் இந்திய வருகை ஆகும்.
இலங்கைச் சிறைகளில் அடைபட்டுக்கிடக்கின்ற தமிழர்களை விடுவிக்காமல், தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்றாமல், போரின்போது காணாமல் போனவர்கள் குறித்த எந்த உண்மையையும் வெளியிடாமல், சிங்களக் குடியேற்றத்திற்காகப் பறிக்கப்பட்ட தமிழர் நிலங்களைத் திருப்பிக் கொடுக்காமல், உலகத்தை ஏமாற்றுவதற்காக தமிழர்களுக்கு நாங்கள் வீடு கட்டித் தரப்போகிறோம் என்று டமாரம் அடித்துக் கொண்டு, ஒரு மோசடி நாடகத்தைச் சிங்கள அதிபர் நடத்துகிறார் என்பதைத் தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் உணர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
டெல்லிக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதோடு மட்டும் அல்லாமல், தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்துக்கு வந்து கோயிலுக்கும், சங்கர மடத்துக்கும் மைத்திரி பால சிறிசேன செல்லத் திட்டமிட்டு இருப்பதாகவும், இதனை மத்திய அரசு மிக ரகசியமாக வைத்து இருப்பதாகவும் நான் அறிகிறேன்.
சிங்கள அரசால் கொலையுண்டு மடிந்த எங்களின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்காக நெருப்புக்குத் தங்கள் உயிர்களைத் தாரை வார்த்த முத்துக்குமார்களின் பூமிதான் தமிழ்நாடு என்பதை புதிய சிங்கள அதிபரும், நரேந்திர மோடியும் மறந்து விட வேண்டாம். விபரீத வேலையில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கின்றேன்.
தமிழகத்து எல்லைக்குள் சிங்கள அதிபர் மைத்திரி பால சிறிசேன அடியெடுத்து வைத்தால், அதனை எதிர்த்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கறுப்புக் கொடி அறப்போர் நடத்தும். ஈழத்தமிழ் உணர்வாளர்களும் இளைஞர்களும், மாணவர்களும் இந்த அறப்போரில் பெருந்திரளாகப் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கின்றேன்" என்று கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfty.html

என்ன ஆகும் ஈழப்பிரச்னை?
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 07:41.36 AM GMT ] [ விகடன் ]
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இந்தியா வருகிறார். கடந்த காலங்களில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் போராட்டங்கள் நடப்பது வழக்கமாக இருந்தது.
இப்போது மைத்திரி பாலவின் வருகையை தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் பிரதிநிதியாகக் கருதி எதிர்ப்பதா, அல்லது ராஜபக்சேதான் இனப்படுகொலைக்குக் காரணம் என்பதால் அவர் வருகையை மட்டுமே எதிர்க்கவேண்டும் என்று பொருள் கொள்ளலாமா என்று கேட்டால் தெளிவான பதில்களை நாம் கண்டடைய முடியாது.
எப்படியிருந்தபோதிலும் ராஜபக்சேவின் தோல்விக்குப் பிறகு ஈழ ஆதரவுப் போராட்டத்தின் வீரியம் சற்று குறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இறுதிப்போரில் இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை தேவை, தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், இலங்கை ராணுவம் தமிழர் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை தமிழர்களே தீர்மானிக்க வேண்டும். இவை ஈழ ஆதரவாளர்களின் கோரிக்கைகள். ஆனால் இவற்றை வலியுறுத்திய போராட்டங்கள் இப்போது சற்று மங்கிப்போயிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். ராஜபக்சேவின் தோல்வியோடு எல்லாம் முடிந்துவிட்டதா?
‘இல்லை’ என்கிறது வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட ‘இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை தேவை’ என்ற தீர்மானம். இந்தத் தீர்மானம் குறித்தும் தொடர்ச்சியாக ஈழத்தமிழர் பிரச்சனைகளின் தீர்வு நோக்கியும் தமிழகச் சூழலிலும் இந்தியச்சூழலிலும் என்ன மாதிரியான அணுகுமுறைகள் இருக்கின்றன என்று பார்ப்போம்.
வழக்கம் போல வடக்கு மாகாண சபையில் முதல்வர் விக்னேஷ்வரன் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை ஆதரித்துள்ள வைகோ ‘தமிழகச் சட்டசபையிலும் இதை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறார். திருமாவளவனும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து அறிக்கைவிட்டிருக்கிறார். சீமான், நெடுமாறன் போன்றவர்களும் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இது சர்வதேச அளவிலோ இந்திய அளவிலோ கவனம் பெறுவதற்கு இவர்களின் ஆதரவு மட்டும் போதாது. தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று தெரியவேண்டும்.
வைகோவும், திருமாவளவனும் வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை ஆதரிப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் யாரும் எதிர்பாராதவாறு எதிர்முகாமில் இருந்து ஓர் ஆதரவுக்குரல் எழுந்திருக்கிறது. அது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் குரல். அவரும் ‘இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்’ என்று அறிக்கை விட்டிருக்கிறார்.
கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களாலும், ஈழ ஆதரவாளர்களாலும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது காங்கிரசும் தி.மு.க.வும்தான். இனப்படுகொலை நடந்தபோது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது இவர்கள்தான். மன்மோகன் அரசு இருந்தபோது, ராஜபக்சேவும் இலங்கை அதிபராக இருந்தபோது இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணையை வலியுறுத்தாமல் இப்போது ஈ.வி.கே.எஸ் வலியுறுத்துவதை அரசியல் சந்தர்ப்பவாதம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது? கிட்டத்தட்ட தி.மு.க.வின் நிலையும் இதுதான்.
கடந்த காலங்களில் இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க. காட்டிய ஆர்வமும் செயல்பாடுகளும் இறுதிப்போரில் அது நடந்து கொண்ட முறையில் அடிபட்டுப் போயின. ஆட்சி போனபிறகு கருணாநிதி மீண்டும் கொண்டுவந்த டெசோ அமைப்பும் ஏளனமாகத்தான் பார்க்கப்படுகிறது. இப்போது ‘இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை தேவை’ என்ற தீர்மானத்தின் மீது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. நிலைப்பாடு என்ன என்று தெரிய வேண்டும்.
கடந்த காலங்களில் பா.ஜ.க. புலியெதிர்ப்பு அரசியலையே முன்வைத்திருக்கிறது. இந்து முன்னணி ராமகோபாலன் தொடங்கி தமிழக பா.ஜ.க. வரை இந்துத்துவவாதிகளின் குரல் விடுதலைப்புலிகளை எதிர்க்கும் ஒற்றைக்குரல்தான். அடிப்படையிலேயே அவர்களின் இந்துத்துவக் கருத்தியல் தமிழ்த்தேசியம், தனி ஈழக்கோரிக்கை ஆகியவற்றுக்கு எதிரானது.
இந்துத்துவவாதிகள் முன்வைக்கும் கலாசாரத் தேசியம், தேசிய இனப்பிரச்னைகள், மொழிவாரித் தேசியம் ஆகியவற்றை ஏற்காது. அந்த அடிப்படையில் தொடர்ச்சியாக ஈழ எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டைத்தான் பா.ஜ.க. கொண்டிருந்தது.
ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸை வீழ்த்துவதற்கான ஆயுதமாக ஈழப்பிரச்னையை பா.ஜ.க. கையில் எடுத்துக்கொண்டது ஒரு சந்தர்ப்பவாத நிலைப்பாடுதான் என்பதை மோடி ஆட்சிக்கு வந்த எட்டு மாதங்கள் நிரூபித்திருக்கின்றன.
தொடர்ச்சியாக இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் ஈழத்தமிழர்கள், புலிகளுக்கு எதிராகவும் சுப்பிரமணியன்சாமி பேசிவருகிறார். இதை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தமிழக பா.ஜ.க. ‘இது கட்சியின் நிலைப்பாடு இல்லை‘ என்று சொல்லிவந்தாலும் தேசியத்தலைமை சு.சாமியின் கருத்துகளை மௌனமாக ஆதரித்துத்தான் வந்திருக்கிறது.
இதுமாதிரியான நிலைப்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்து வைகோ கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். கூட்டணியில் இருந்தாலும் பா.ம.க. தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைக்கிறது. கடந்த காலங்களில் ராஜபக்சேவை நியாயப்படுத்தி காங்கிரஸ்காரர்கள் பேசிய அதே பேச்சுகளை இப்போது பா.ஜ.க.வினர் பேசிவந்தனர்.
இன்னும் ஒருபடி மேலே போய் ‘இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே அல்ல‘ என்று தொலைக்காட்சி விவாதங்களில் தமிழக பா.ஜ.க.வினர் பேசத் தொடங்கியிருக்கின்றனர். எனவே இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை என்ற விஷயத்தை இனி பா.ஜ.க. பேசாது என்றே தெரிகிறது.
கடந்த காலங்களில் பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவவாதிகள் இலங்கைப் பிரச்சினையில் கொண்டிருந்த கடுமையான புலி எதிர்ப்பு நிலைப்பாட்டையே ஜெயலலிதாவும் கொண்டிருந்தார். ஆனால் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸையும், தி.மு.க.வையும் வீழ்த்த, பா.ஜ.க.வைப் போலவே ஈழப்பிரச்னை என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்தார் ஜெயலலிதா. ஆனால் அது தேர்தலோடு நின்றுபோகாமல் தொடர்ச்சியாக ஈழப்பிரச்னை குறித்த தீர்மானங்களைச் சட்டசபையில் நிறைவேற்றினார்.
எனவே வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை ஆதரித்து விரைவில் கூடவிருக்கும் சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் அரசு தீர்மானம் போடுமா? என்பதை உறுதியாகச் சொல்லமுடியவில்லை. ஏனெனில் இப்போது அ.தி.மு.க.வின் தலையாயச் சிக்கலே ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலையாவதுதான். எனவே ஈழப்பிரச்னை, இனப்படுகொலை பற்றியெல்லாம் கவலைப்படுவதற்கோ கவனம் செலுத்துவதற்கோ அ.தி.மு.க.விற்கு நேரமிருக்குமா என்று தெரியவில்லை. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களால் பெரியளவு தீர்வு எதுவும் ஏற்படாது என்றாலும், அதற்கான முக்கியத்துவம் என்பது இருக்கத்தான் செய்கிறது.
மத்திய அரசைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மன்மோகன் அரசின் நிலைப்பாடுதான் இன்றுவரை மோடி அரசின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்தியா வரும் மைத்திரிபால சிறிசேனவிடம் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்தோ இனப்படுகொலை குறித்தோ மோடி வலியுறுத்துவார் என்று நம்புவதற்கான முகாந்திரங்கள் இல்லை.
அதேநேரத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால அரசிடம் சில நல்ல அறிகுறிகள் தெரிகின்றன. தமிழக மீனவர்களின் படகுகளை விடுவித்திருப்பது ஒரு நல்ல தொடக்கம். (நல்லவேளை மைத்திரிபால சிறிசேன சுப்பிரமணியசாமியிடம் ஆலோசனை கேட்கவில்லை) அதேபோல் யாழ்ப்பாணத்தில் விமானப்படைக்குச் சொந்தமான நிலத்தைத் தமிழர்களுக்கு வழங்குவதாகவும் இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.
13வது சட்டத்திருத்தம் என்பதை ஈழ ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் ஏற்காவிட்டாலும், 13வது சட்டத்திருத்தத்தைக் கொண்டு வருவதாக மைத்திரிபால அரசு அறிவித்திருக்கிறது. தமிழர்களுக்கு எந்த உரிமையையும் தரத் தயாராக இல்லாத ராஜபக்சே அரசோடு ஒப்பிடும்போது இது கொஞ்சம் சிறிய முன்னேற்றம்தான். ஆனாலும் இவற்றையெல்லாம் தமிழர்கள் நம்பமுடியுமா என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனெனில் இலங்கை அரசின் தந்திரங்களும் தமிழர்களின் ஏமாற்றங்களும் நிறைந்த கடந்த கால வரலாற்று அனுபவங்கள் அப்படி!
ராஜபக்சேவைப் பழிவாங்குவதற்காவது அவரின் அத்துமீறல்களை மைத்திரிபால அரசு விசாரிக்கிறது. அந்தப் பட்டியலில் ராஜபக்சே அரசின் போர்க்குற்றங்களில் சிலவற்றையாவது மைத்திரிபால அரசு விசாரிக்கும் என்று நம்பலாம். அதேநேரத்தில் இதைக் கண்டிப்பாக ‘இனப்படுகொலை‘ என்று அறிவிப்பதற்கு இலங்கை அரசு ஒப்புக்கொள்ளாது. அப்படி ஒப்புக்கொண்டால் சிங்கள இனவாத அமைப்புகளைச் சமாளிக்க முடியாது, பெரும்பான்மை சிங்கள மக்களிடம் ஆதரவை இழந்துவிடுவோம் என்ற அச்சம் அதிபருக்கு இருக்கும். இப்போதே ‘போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை நாங்களே செய்து கொள்கிறோம். சர்வதேச விசாரணை தேவையில்லை‘ என்று இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். ஐ.நா.வின் விசாரணை அறிக்கையையே தாமதமாக சமர்ப்பிக்கும்படி அமெரிக்காவிடம் கோரிக்கையும் வைத்திருக்கிறார்.
உண்மையிலேயே என்றாவது ஒருநாள் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடப்பதற்கான சாத்தியங்களோ அறிகுறிகளோ உண்டா? அப்படியே நடந்தாலும் ராஜபக்சே உள்ளிட்ட இனப்படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? இப்போதுவரை விடை தெரியாத கேள்விகள்தான் இவை.
 http://www.tamilwin.com/show-RUmtyCSYKdft1.html

Geen opmerkingen:

Een reactie posten