தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 februari 2015

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் இணக்கம் கட்சிக்குள் இல்லை: சுசில் பிரேமஜயந்த



கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் பதவி காலம் நீடிப்பு: ஆசிரியர் சங்கம் கண்டனம்
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 05:55.22 AM GMT ]
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரின் பதவிக் காலம் முடிவடைந்தும் அவர் தானே உபவேந்தர் என செயற்படுவாராயின் பதவியின்  சட்டவிரோதமான ஊழலுக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கையாக அவருடன் எந்தவகையிலும் உத்தியோகபூர்வ தொடர்புகளை பேணிக் கொள்வதில்லை என கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கி.கோபிந்தரராஜாவின் பதவிக் காலத்தினை நீடித்துள்ளமையை ஆட்சேபித்து கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பதிவாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உங்கள் கடிதத்தில் கலாநிதி கோபிந்திரராஜாவின் உபவேந்தர் பதவிக்காலம் 2015 மார்ச் 4ஆம் திகதி முடிவடைவதாக நாங்கள் எழுதிய கடிதத்திற்கு பதிலளித்துள்ளீர்கள். எங்கள் கடிதத்தில் 13-02-2015 இற்குப் பின்னர் உபவேந்தர் பதவி நிலைக்கான நிர்வாக ஒழுங்கு பற்றி எமது கடிதத்தில் நாங்கள் கேட்ட கேள்விக்கு நீங்கள் மேற்கண்ட பதிலைத் தந்துள்ளீர்கள்.
பதிவாளர் (கிழக்குப் பல்கலைக்கழகம்) அவர்கள் தனது 12-01-2015 திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் உபவேந்தரது பதவிக்காலம் 12-02-2015 இல் முடிவடைகிறது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவித்து விட்டார். பல்கலைக் கழக வேந்தர், உபவேந்தர் வலுவான ஒப்பந்த நியமனங்களாகும்.
இவைகளின் நியமனத் திகதி மற்றும் முடிவடையும் காலம் என்பன சட்டம் மற்றும் வர்த்தமானியினால் தீர்மானிக்கப்படுபவை. நியமிக்கும் அதிகாரத்தினால் மாற்றப்பட்டாலன்றி அவை மாற்றப்படாதவை.
கலாநிதி கிட்ணன் கோபிந்திரராஜாவின் மூன்று வருட உபவேந்தர் காலம், பல்கலைக் கழக சட்டம் 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்கம் பிரிவு 34(1) இன் கீழும், அதி உத்தம ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட நியமனத்தின் படியும் உடனடியாக முடிவடையும் வகையில் 12-02-2015 அன்று நிறைவடைகின்றது.
இந்நிலையில் தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் வரை பல்கலைக்கழக பதிவாளரே உபவேந்தருக்குப் பதிலாகச் செயற்படுவார் என தாபனக் கோவைகள் பிரிவு 3:23:2:1 என எடுத்துரைக்கின்றது. கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது 12-02-2015 அன்று கலாநிதி கிட்ணன் கோபிந்திரராஜாவின் உபவேந்தர் பதவிக்காலம் முடிவடைந்து, முன்னாள் உபவேந்தராகக் கருதுகின்றது.
இன்றிலிருந்து கிழக்குப் பல்கலைக் கழகத்தைப் பொறுத்தவரை பதவியில்லாத ஒருவராக அவர் ஆகின்றார். தொடர்ந்தும் தானே உபவேந்தர் என அவர் கொள்வாராயின் பதவியின் சட்டவிரோதமான ஊழலுக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கையாக அவருடன் எந்தவகையிலும் உத்தியோகபூர்வ தொடர்புகளை பேணிக் கொள்வதில்லை என எமது சங்கம் அறிவிக்கின்றது.
அத்துடன் பதிவாளர் அவர்களே தாபனக் கோவையின் கீழ் தாங்களே பொறுப்புக் கூறுபவர் என தெரிவிக்கின்றோம். கௌரவ உயர்கல்வி அமைச்சரினால் மாற்று ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் வரை பல்கலைக் கழகத்தின் எவ்வித நடவடிக்கைகளுக்கும் தற்போதைய சூழலில் தாங்களே பொறுப்பாவீர்கள்.
தவிரவும் கடந்த 9ஆம் திகதியிலிருந்து பல்கலைக் கழகமானியங்கள் ஆணைக்குழுவினரும் இராஜினாமாச் செய்து விட்டனர் என்பதனால் தற்போது அதற்கும் பொறுப்பு இல்லை. மேலும் பல்கலைக்கழக ஊழியர்களின் தனிப்பட்ட கோவைகள் (தனிப்பட்டக் கோவை ) மற்றும் ஏனைய ஆவணங்கள் அழிக்கப்படலாம் என்ற வகையிலான வதந்திகள் குறித்து நாங்கள் கவனம் செலுத்துகின்றோம்.
பிரதான நிறைவேற்று அதிகாரிகள் விலகும் போது இவ்வாறானவை நடைபெற இடமுண்டு. ஆகையால் பல்கலைக்கழக சொத்துக்களின் பொறுப்பாளர் (சொத்துக்களை பாதுகாத்தல்) என்ற அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கோவைகளை தங்கள் பொறுப்பில் பாதுகாப்பாக இருப்பதனை தயவு செய்து உறுதிப்படுத்துக, உபவேந்தரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் இதில் அடங்கும்.
பல்கலைக்கழக அபிவிருத்தி, நல்லாட்சி, ஊழலற்ற சூழல் ஜனநாயகம் விரிவுரையார்களின் சுயாதீனம் எனும் உரிய குறிக்கோளை நடைமுறைப்படுத்த இத்தால் நாம் நிச்சயப்படுத்துகின்றோம்” என அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfs0.html

மோட்டார் சைக்கிளுடன் பஸ் மோதியதில் ஒருவர் பலி: கனகராயன்குளத்தில் சம்பவம்
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 06:08.15 AM GMT ]
பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளை மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி சென்ற பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற மோட்டார் சைக்கிளை மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றது.
இந்த விபத்து கனகராயன்குளம், மன்னகுளம் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றது.
விபத்தில் உயிரிழந்தவரது சடலம் வவுனியா வைதியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மட்டக்களப்பில் நீர் குழிக்குள் விழுந்து குழந்தை பலி
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 06:22.02 AM GMT ]
மட்டக்களப்பு , ஏறாவூர், கலந்தர் வீதி, மீரா கேனி பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த குழந்தை நேற்று நீர் குழியொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழிந்த சிறுமிக்கு ஒரு வயதும் 3 மாதங்களும் என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் சடலம் உறவினர்களுக்கு வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

13வது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியாவின் அழுத்தம் தொடர வேண்டும்: கூட்டமைப்பு
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 06:28.44 AM GMT ]
13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்து பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்புக்கும் சம்பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற தாம் வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் உத்தியோகபூர்வ விஜயமாக மைத்திரிபால இந்தியா செல்கிறார்.
இதனிடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இலங்கை ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்புகொண்டதுடன் அவரை வரவேற்க புதுடெல்லி காத்திருப்பதாக கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfs4.html


கிளிநொச்சி திருவையாறு மற்றும் மாசார் பாடசாலைகளின் இல்ல விளையாட்டுப் போட்டி
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 07:00.50 AM GMT ]
கிளிநொச்சியின் முக்கிய பாடசாலைகளில் ஒன்றான கிளி.திருவையாறு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி கடந்த 11ம் திகதி நடைபெற்றுள்ளது.
இதில் பிரதம விருந்தினராக பா.உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொள்ள, சிறப்பு விருந்தினராக கற்றன் நசனல் வங்கயின் காப்புறுதி முகாமையாளர் யேசுதன், கௌரவ.விருந்தினர்களாக ஓய்வு நிலை அதிபர் இராஜேந்திரம், குரு கட்டிடப்பொருட்கள் வாணிப உரிமையாளர் சிவகுமார், கரைச்சி பிரதேசபை உறுப்பினர் பொன்னம்பலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பள்ளியின் அதிபர் ப.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பெருமளவான பெற்றோர்கள், நலன்விரும்புகள், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர்கள் என கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி மாசார் அ.த.க.பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி மாசார் அ.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் பாடசாலை அதிபர் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக பா.உறுப்பினர் சி.சிறீதரன், சிறப்பு விருந்தினராக பளைகோட்ட கல்வி அதிகாரி ஆனந்தசிவம், மாசார் கிராம அலுவலர் ஆகியோர் கலந்துகொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பளை பிரதேச செயற்பாட்டாளர் வீரவாகுதேவர், வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் சூரியகாந், கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உபதலைவரும் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளருமான பொன்.காந்தன், அயல் பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfs7.html

முடிந்தால் தனித்து போட்டியிடுமாறு வீரவன்ஸவுக்கு சவால் விடுக்கும் கடுவலை மேயர்
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 07:14.09 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த முயற்சிக்காது முடிந்தால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுமாறு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கடுவலை மாநகர மேயர் ஜி.எச். புத்ததாச சவால் விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தோல்வியுடன் வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ள விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்க பெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் எனவும் புத்ததாச குற்றம் சுமத்தியுள்ளார்.
கடுவலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனியார் ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 07:48.03 AM GMT ]
சம்பள நிர்ணய சபையின் கீழ் இருக்கும் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 10 ஆயிரமாக அதிகரிக்க தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சேவை வழங்குனர்கள் அங்கம் வகிக்கும் தேிய தொழிலாளர் ஆலோசனை சபை நேற்று இணக்கம் வெளியிட்டுள்ளது.
நீதி மற்றும் தொழில் சேவைகள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் தேசிய தொழில் ஆலோசனை சபை இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதில் தொழில் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன் தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdft2.html

ஷிரந்தி மீதான குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சிகள் இல்லை!– அஜித் ரோஹன
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 08:13.29 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மீதான குற்றச்சாட்டு தொடர்பில்  இதுவரை பொலிஸாருக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 
ஷிரந்தி ராஜபக்ச, சிரிலிய சவிய என்ற பெயரில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று நடத்தியமை மற்றும் போலி அடையாள அட்டைகளை விநியோகித்து வங்கி கணக்குகளை ஆரம்பித்தமை சம்பந்தமாக பொலிஸாருக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மக்கள் வங்கியின் அதிகாரியினால் தகவல்கள் வெளியாகிதன் பின்னரே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
வங்கி அதிகாரியின் தகவலில் ஷிரந்தி ராஜபக்சவின் 222222222v என்ற இலக்கம் கொண்ட அடையாள அட்டை தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பி்டத்தக்கது.

http://www.tamilwin.com/show-RUmtyCSYKdft3.html

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் இணக்கம் கட்சிக்குள் இல்லை: சுசில் பிரேமஜயந்த
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 08:18.31 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் இணக்கம் எதுவும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பிரதமர் வேட்பாளராக ஒருவரை நிறுத்தும் அதிகாரம் சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வாராந்த பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
கேள்வி- முன்னாள் ஜனாதிபதியை பிரதமராக்கும் நடவடிக்கை ஒன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதற்கு இணங்கியுள்ளதா?.
பதில்- இல்லை. அது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி கட்சிகளுடன் அப்படியான எந்த இணக்கமும் இல்லை. சில அரசியல்வாதிகள் அப்படியான கதையை கூறி வருகின்றனர். காலத்திற்கு காலம் கூறும் கதைகளை ஏற்றுக்கொள்ளும் அவசியமில்லை.
கேள்வி- சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவாரா?.
பதில்- இல்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கின்றது.
கேள்வி- எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய நபரை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்ற யோசனை கட்சியில் உள்ளதா?.
பதில்- அது பற்றி தீர்மானத்தை கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவே எடுக்க வேண்டும். பொதுத் தேர்தல் நெருங்கும் போது ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என்றார்.
மஹிந்தவை பிரதமராக்குமாறு கோரப்படவில்லை: அனுர பிரியதர்சன யாப்பா
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குமாறு கோரப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதசர்ன யாப்பா தெரிவித்துள்ளார்.
மஹிந்தவை பிரதமராக போட்டியிடச் செய்யுமாறு இதுவரையில் எவரும் கோரவில்லை. கட்சியின் மத்திய செயற்குழுவினால் இன்று சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இந்த தீர்மானத்தில் தீர்மானிக்கப்பட உள்ளது. கட்சியின் யாப்பு விதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவாரா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தீர்மானங்கள் இன்றைய தினமே செயற்குழுவிடம்!
இன்று கூடவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் அகில இலங்கை செயற்குழுவிடம் முன்வைக்கவுள்ளதாக அதன் சிரேஷ்ட துணை தலைவரான டீ.எம்.எம் பவுசி தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் வெற்றிடங்களாக காணப்படும் பதவிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியலமைப்புகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdft4.html

Geen opmerkingen:

Een reactie posten