தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 januari 2015

காட்சிப் பிழை தானோ...

"நீங்கள் எல்லாம் கானலின் நீரோ!! வெறும் காட்சிப் பிழைதானோ - மாகவி பாரதி"- எல்லாம் சுமுகமாகவே நடந்து கொண்டிருப்பதாகவே தோன்றும். ஆனால் அப்படி இருக்காது.
இயல்புநிலை போலவே தோன்றும்.ஆனால் இயல்புநிலை இது இல்லை. காட்சிப் பிழைகளாக இவை எம் பார்வைக்குள் விழுகின்றது.
ஆனால் பிழை என்றும் இந்த காட்சிகள் கானல்நீர் தோற்றமே என்றும் புரிந்து கொள்ளமுடியாத வண்ணம் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட அரங்கத்தில் கச்சிதமாக நடித்துக் கொண்டிருக்கிறது சிங்கள தேசம்.
2009ல் இருந்து சர்வதேச கண்டனங்களுக்கும் வற்புறுத்தல்கள் அழுத்தங்களுக்கு உள்ளாகி நொந்து கொண்டிருந்த சிங்களம் 2015 ஜனவரி 9ல் தேர்தல் முடிவு வெளிவந்து முடிந்தநிலையில் அந்த அழுத்தங்கள், கண்டனங்கள் என்பனவற்றில் இருந்து முழுமையாக விடுதலை அடைந்ததாகவே எண்ணுகின்றது.
எல்லா கண்டங்களும் தாண்டிவிட்டாச்சு என்று எண்ணி கொண்டிருக்கிறது. இது சிங்களத்தின் காட்சிப் பிழை மட்டும் அல்லாமல்.பெரிய புரிதல் தவறும்.
எல்லா ஊடகங்களையும் வல்வளைப்பு செய்து வைத்திருந்து ஒருவிதமான குடும்பஆட்சி நடாத்திய ஒருவரை தூக்கி எறிந்து விட்ட இந்த மக்கள் இனி மற்றைய தேசிய இனங்களது உரிமைகளையும் மதிப்பார்கள் என்று ஒபாமா முதல் மேற்கின் தலைவர்கள் நினைப்பதற்கு ஏற்ற வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. இது சர்வதேசத்தின் காட்சிப் பிழை.
என்னதான் இந்திய பிரதமர் மகிந்தருக்கு வாழ்த்து அனுப்பினாலும்கூட அதனை மனதில் வைக்காமல் சீனாவுக்கு போக முன்னம் இந்தியாவுக்கு வந்திருக்கும் சிங்களதேச வெளிவிவகார அமைச்சரின் அளவு கடந்த உறுதிமொழிகளால் நெகிழ்ச்சியின் உச்சத்துக்கே போயிருக்கும் பாரதம் இனி சிங்களதேசத்தின் சீனா உடனான தேன்நிலவுகாலம் முடிவுக்கு வரும் என்று எண்ணுகின்றது. இது பாரதீய இந்தியாவின் காட்சிப்பிழை.
இப்பிடி சிங்களவன் எல்லாம் தருவான் என்று நினைத்திருந்தால் ஆயுதமே ஏந்தி இருக்க தேவையில்லை.வீணாக இந்த நாற்பதினாயிரம் பேரும் செத்தது தான் என்றும் போற போக்கிலே சிங்களதேசம் தமிழர்களின் அனைத்து உரிமைகளையும் தங்கதட்டில் வைத்து தந்துவிடும்.
இனி அவங்களை குழப்பகூடாது. கொஞ்சம் அனுசரித்துதான் போகவேண்டும் என்பது தமிழ்மக்களில் ஒரு சிலரின் காட்சிப்பிழை. (அனேகர்???)
இத்தனை காட்சிப்பிழைகளும் உருவாக காரணமே சிங்களத்தின் அபார நடிப்புதான். குருதி வழியும் தமது இயல்பான இனவாத குரூரமுகத்தை மறைத்து கொண்டு மிக கஸ்டப்பட்டு நடித்து கொண்டிருக்கிறது ஒட்டு மொத்த சிங்களதேச ஆட்சியும்.கொஞ்சம் அதனை பார்ப்போம்.
இந்த நடிப்புக்கான பாலபாடம் அவர்களது மகாவம்சத்திலே இருக்கிறது. அவர்களது வரலாற்றிலே இருக்கிறது.
சிங்களதேசத்தில் இருந்து சொற்ப தூரத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து ஆட்சிசெய்த சோழர்கள் மிகநீண்ட கடல்பரப்பையும் அதனையும் கடந்த நிலப்பரப்பரப்பையும் புலிக்கொடியின் கீழ் கொண்டுவந்த போதினில் எப்படி அந்த மாபெரும் படைகளிடம் இருந்து சின்னஞ்சிறிய சிங்களதேசம் மீண்டது என்பதை பார்த்தால் இப்போதைய சிங்களத்தின் நடிப்புக்கான வேச மாற்றத்துக்கான காரணங்கள் புரியும்.
இலங்கையர் எந்தவொரு நாட்டிலும் அகதியாக இருக்ககூடாது. அது இலங்கைக்கு அவமானம் என்று மங்கள சமரவீர சொல்வது மட்டும் இனிப்பாக தெரியும் போது அதன் பின்னால் இன்னும் தமிழர்கள் தாயகத்தில் எத்தனை எத்தனை மக்கள் தமது சொந்த ஊர் இழந்து தமது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமலேயே அகதிகளாக வாழ்கிறார்கள் என்பது யாருக்கும் ஏன் புரியாமல் போனது..
இங்கிருந்து வெளிநாடு சென்ற போராளிகளை நாடு திரும்ப அழைத்து அதன் மூலம் சர்வதேசத்துக்கு தாம் தம்மை எதிர்த்து ஆயுதம் தாங்கியவர்களைகூட மன்னிக்க தயாராகிவிட்டோம் என்று நடிக்கும் மங்கள சமரவீரவிடம் ஏன் யாருமே வெளிநாடு சென்றவர்களை திரும்பும்படி கேட்க முதல் இங்கே உங்கள் சிங்களதேச சிறைகளில் பலவருடங்களாக வாடும் தமிழர்களை விடுதலை செய்யுங்கள் என்று கோரவில்லை.
அப்படி யாரும் கேட்டால் உடனே சிங்களத்தின் ரெடிமேட் பதில் சிறையில் இருப்பவர்களின் விபரங்களை தாருங்கள் என்பதாகும். மகிந்தவின் பாதாள அறைகளை கண்டுபிடித்து சொகுசு கார்களையும் தங்ககட்டிகளையும் கண்டுபிடிக்கும் ஆற்றலில் ஒரு பங்கை செலவிட்டால் சிறைச்சாலை ஆணையரிடம் இருந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விபரங்களை எடுக்கலாம் என்ற அற்ப அறிவுகூட மங்கள சமரவீரவின் நடிப்பை நம்புகின்றவர்களுக்கு இல்லாமல் போனது ஆச்சரியமே.
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்ற பதத்தை பாவித்து நீதிமன்ற தீர்ப்பில் கைவைக்க முடியாது என்று சிங்களம் சொல்லுகிறது. சரத் பொன்சேகாவுக்கு ஒரு நாளில் பொதுமன்னிப்பு அளித்து அவரை பழையபடி நட்சத்திர விருதுகள் ( எல்லாமே தமிழின அழிப்பு கிடைத்த பரிசுகள்) நெஞ்சை அலங்கரிக்க வைத்து அழகு பார்க்கும்போது மட்டும் எங்கே போனது நீதிமன்றதீர்ப்பு.
இதனை எல்லாம் மிஞ்சும் ஒரு காட்சிப்பிழை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.
முன்னாள் அதிபரின் வாசஸ்தலத்தில் இருந்து பல கோடி பணம் கைப்பற்றப்பட்டது.
முன்னாள் அதிபரின் மகன்களின் ராணுவ பதவிகள் பறிப்பு.
முன்னாள் அதிபர் மகிந்தரின் மனைவி மீது பவுண் மோசடி குற்றச்சாட்டு.
முன்னாள் அதிபருக்கு நெருக்கமான அரசியல்வாதிகளின் கடவுச்சீட்டுகள் பறிப்பு.(மனைவிகளதும்)
சிங்கள தேச அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது இராணுவ புரட்சிக்கு முயன்றதாக விசாரணை என்று ஏராளம் அதிரடி நடவடிக்கைகள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ' அட சிங்களதேசம் நீதி மிகுந்த ஒரு தேசம்தான்.
அங்கே முன்னாள் அதிபர்கூட விசாரணையில் இருந்து தப்பமுடியாது என்று நாம் வாய்பிளப்பது அவ்வளவு நல்லதல்ல. எமக்குத்தானே தெரியும் கடந்த காலங்களில் சிங்களதேசமே உருவாக்கிய விசாரணை கமிசன்களும் குழுக்களும் என்னவாகின என்று. பட்டை நாமம்தான் கிடைத்தது தமக்கு.
இந்த நடிப்பில் சிங்களத்தின் பார்வையாளர்களாக சிங்களம் வைத்திருக்க எண்ணுவது சர்வதேசத்தை குறிப்பாக மேற்குலகை.
மகிந்தரின் மீது இவ்வளவு நடவடிக்கைகளையும் எந்தவொரு சமரசமும் இன்றி துணிச்சலாக எடுக்கும் சிங்களத்தின் புதிய ஆட்சி நிச்சயமாக தமிழ் மக்கள் மீதான போரின்போதான இனஅழிப்பையும் நேர்மையாகவே விசாரிக்கும் என்று மேற்குலகு நம்பவேண்டும்.
உள்நாட்டிலேயே விசாரணைக்கு வழிவிட்டு சர்வதேச மனிதஉரிமை கட்டமைப்புகள் ஒதுங்க வேண்டும் என்பதே மிகமிக முக்கிய நோக்கம்.
ஏனெனில் சர்வதேச விசாரணை என்பது சிங்களத்தின் இறைமைக்கு பெருங்கேடு என்றே சிங்களம் அஞ்சுகின்றது. சர்வதேச விசாரணை என்பது குறியகால தீர்ப்பில் சில இராணுவ அதிகாரிகளை,அரசியல் தலைமைகளை தண்டித்தாலும்கூட நீண்டகால தீர்ப்பில் தமிழர்களின் சுயநிர்ணத்துக்கே வழி கோலும் என்பதும் சிங்களத்தின் பேரச்சம்.
வெறும் அறிக்கைகளையும் வாய் வார்த்தைகளையும் வெளியிட்டு தப்பிக்க முயல்கிறது சிங்களதேசம்.
இதற்கு முன்னேற்பாடாக இலங்கைத் தீவில் இயல்புநிலை தோன்றியிருப்பதாக தோற்றம் காட்ட சிங்களம் விரும்புகின்றது. அதுவும் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு இயல்புநிலை தோன்றியிருப்பதாக காட்டி சர்வதேச விசாரணை வந்தால் மீண்டும் இனமுரண் அதிகரிக்கும் என்று நிறுவமுயல்கிறது.
இதற்கு கிடைத்த பகடைக்காய்கள் தமிழ்நாட்டில் கடந்த முப்பது வருடங்களாக அகதிகளாக வாழ்ந்துவரும் நம் மக்கள். எப்பாடு பட்டேனும் அவர்களை திரும்ப இலங்கைக்கு கொண்டு வந்தால் இங்கே எல்லாம் சுமுகமாக மாறிவிட்டது என்றும் அமைதி திரும்பிவிட்டது என்றும்
இனி உயிராபத்து நிரந்தரமாகவே நீங்கி விட்டது என்று தமிழர்களே நம்பி திரும்பி வந்துவிட்டார்கள் என்று படம்காட்டி இயல்புநிலைக்கு உலக சான்றிதழ் பெற்றுவிடலாம் என்பதற்கே இந்த நடிப்பு.
இதற்கு ஆதரவாக சில தமிழ் அரசியல்வாதிகள் பக்கபாட்டு பாடுவது அடிபணிவு அரசியலின் அதிஉச்சம்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு தமிழ்மக்களின் உரிமைப்போரை முழுதாக துடைத்தெறிந்துவிட்டு அதன் பின்னர் ஒரு இணக்க அரசியலை விடுதலைப்புலிகளுக்கு பின்பான ஒரு காலத்தை உருவாக்க சர்வதேசம் எடுத்த முயற்சிகள் இப்போதைய புதிய சிங்களஆட்சி காலத்தில் புதிய வடிவம் எடுக்கின்றன.
வேறு எந்த தரப்புக்கும் பார்வை பிழைகளோ காட்சிப்பிழைகளோ ஏற்பட்டால் ஏற்பட்டுவிட்டு போகட்டும். ஆனால்,மிக நீண்ட காலமாக சிங்களத்தின் அத்தனை அநீதிகளையும் கொடுமைகளையும் இன அழிப்பையும் நெஞ்சில் தாங்கி பெரும் இழப்புகளை சந்தித்த நாம் ஒருபோதும் கானல்நீரை உண்மையென நம்பும் ஒரு காட்சிப்பிழையை செய்யக்கூடாது.
கடந்த காலங்களில் எழுதப்பட்ட ஒப்பந்தங்களைக்கூட கிழித்தெறிந்து இனவெறி ஆடிய ஒரு தேசம் ஒருபோதும் திருந்தாது என்ற மிக உண்மையை, கடந்த காலங்களில் சர்வதேசத்தை ஏமாற்றி அப்போதைய அழுத்தத்திலிருந்து தப்பிக்கும் ஒரே நோக்குடன் சிங்களதேசத்தால் உருவாக்கப்பட்ட அனைத்து விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளுக்கும் என்ன நடந்தது என்ற பேருண்மையை,
சர்வதேசத்துக்கு நாள் நேரம் உட்பட விலாவாரியாக எடுத்துரைத்து இப்போதைய வேடம் என்பது முன்னைய வேடங்களின் தொடர்ச்சியே தவிர வேறில்லை என்று புரியவைக்க வேண்டிய கடமை, வரலாற்று கடமை நம் எல்லோர்க்கும் உண்டு.
நாம் அனைவரும் முழுதாக இவற்றுள் இறங்கி வேலை செய்தால் அனைத்து காட்சிப் பிழைகளையும் புரிய வைத்து சிங்களத்தின் புதிய ஆட்சியாளரின் இனவாத முகத்தை அம்பலபடுத்த முடியும்.நிச்சயமாக.
நான் சாகலாம் நீ சாகலாம் ஆனால் நாங்கள் சாககூடாது என்று ஒரு தமிழீழ விடுதலைப்புலி போராளி சொன்னதன் அர்த்தம் பொய்யாகமல் காப்பாற்ற வேண்டியது நம் எல்லோரது கடமை.
தாம் மரணித்தாலும்கூட தமது தமிழீழ இறைமை, தமிழீழ தாயக கோட்பாடு, தமிழீழ மக்கள் என்ற தேசிய உணர்வு ஒருபோதும் சாககூடாது என்று பொருளில் அவன் கூறினான்.
இது முக்கிய காலகட்டம்.இப்போது தூங்கி கிடந்தோமானால் வரலாற்று கல்லறைக்குள் புதைக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடுவோம்.
கல்லறைக்கான புதைகுழி தோண்டி விட்டார்கள். இப்போது எழாமல் இருந்தோமானால் இனி எப்போதுமே முடியாது.எனவே இப்போதே..
ச.ச.முத்து
ilamparavai@hotmail.com
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcfx7.html

Geen opmerkingen:

Een reactie posten