தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

தற்போதைய அரசின் கீழ் ஊடக சுதந்திரம் அதிகரிக்கும்: ஹியூ ஸ்வைர்



தற்போதைய அரசின் கீழ் ஊடக சுதந்திரம் அதிகரிக்கும் என தான் நம்புவதாக பிரிட்டிஷ் வெளிநாட்டு இராஜாங்கச் அமைச்சர் ஹியூ ஸ்வைர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பானத்துக்கு விஜயம் செய்துவிட்டு திரும்பியதன் பின்னரே இவ்வாறு தெரிவித்தார்.
முதற்தடவையாக யாழ்ப்பாணம் சென்ற இவர், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சத்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தினார்.
யாழ்ப்பாணத்தில் அவர் பிரிட்டிஷ் கவுன்ஸில், ஐக்கிய இராச்சியம் நிதியுதவி வழங்கும் ஹலோ நம்பிக்கை நிதியத்தின் கண்ணிவெடியகற்றல் நடவடிக்கைகள், ஆனையிறவு, சபாபதிபிள்ளை நலன்புரி கிராமம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
வடமாகாணத்தில் பல்வேறு பரிமாணம் கொண்ட பிரச்சினைகளை நான் அறிந்துகொண்டேன். நல்லிணக்கம், பொறுப்புகூறல், இராணுவத்தின் வகிபாகம், அரசியல் தீர்வுக்கான வாய்ப்புகள், இலங்கைக்கு பிரித்தானியா உதவ கூடிய வழிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முதலமைச்சருடன் கலந்துரையாடினேன்.
அதுமட்டுமன்றி மீண்டும் யுத்தத்துக்கு பலியாகக் கூடாதென்பதை வலியுறுத்தும் சின்னமாக ஆனையிறவு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வலி.வடக்கு மக்களைச் சந்தித்தார் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர்
யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹுகோஸ் ஸ்வய்ர் இன்றைய தினம் மாலை 2.30 மணியளவில் வலி.வடக்கு மக்கள் தங்கியிருக்கும் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயத்தின்போது பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை வழங்கி வைத்த அவர் பாடசாலை மாணவர்களுடன் பேசியதுடன் அவர்களுக்கு கையொப்பங்களையும் வைத்துக் கொடுத்திருந்தார்.
பின்னர் வலி,வடக்கு மீள்குடியேற்றக் குழுவுடனும் சந்தித்துப் பேசியிருந்தார்.
இதன்போது வலி,வடக்கின் மீள்குடியேற்ற நிலைமைகள் குறித்து அந்தக் குழுவினர் அமைச்சருக்கு தெளிவான விளக்கத்தை வழங்கியிருந்தனர்.
மேலும் மக்களும் தங்களை சொந்த நிலங்களில் துரிதமாக மீள்குடியேற்றுங்கள் என கோரிக்கை விடுத்தனர்.
இங்கே பேசிய அமைச்சர்,
நீங்கள் சொந்த மண்ணில் பிறந்து வளர்ந்திருக்கவில்லை. என்பதனை உங்கள் முகங்களை பார்க்கும்போதே தெரிகின்றது.
டேவிட் கமரூன் இங்கே வருகை தந்திருந்தார். அவருக்குப் பின்னர் நானும் வந்திருக்கிறேன். அது என்னுடைய விருப்பமும் கூட, இலங்கையில் அண்மையில் பல மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன.
இந்த மாற்றங்களோடு மாற்றமாக நீங்கள் உங்கள் சொந்த மண்ணுக்குச் செல்லவேண்டும் என கூறிய அவர் பாடசாலை சிறுவர்களை பார்த்து நீங்கள் உங்கள் சொந்த மண்ணுக்குச் செல்லும்போது இந்த காலணிகளை அணிந்து கொண்டு செல்லுங்கள் என மகிழ்ச்சி பொங்க கூறினார்.
புதிய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கையில்லை: பிரிட்டிஷ் குழுவிடம் விக்னேஸ்வரன் தெரிவிப்பு
பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹுகோஸ் ஸ்வய்ர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இவ்விஜயத்தின்போது வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசியிருப்பதுடன், யாழ்.பொது நூலகத்திற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
குறித்த சந்திப்பு இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றிருந்தது.
இதன் பின்னர் குறித்த சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மீள்குடியேற்றம் தொடர்பில் புதிய அரசாங்கத்தின் மீது மக்கள் முழுமையான நம்பிக்கை கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
குறிப்பாக ஆளுநர் மாற்றம் மற்றும் பிரதம செயலாளர் மாற்றம் ஆகியவற்றை புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ளபோதும் அவை சிறியளவிலான மாற்றங்கள்.
ஆனால் மீள்குடியேற்றம் என்ற பெரிய மாற்றம் உருவாக்கப்படவில்லை. மீள்குடியேற்ற அமைச்சரை நாம் சந்தித்தபோது அவர் கூறுகின்றார்.
தேவையற்ற காணிகளை விடுவிப்பதாக, ஆனால் பிரதமர் இராணுவத்தை வெளியேற்றப்படப்போவதில்லை  என சொல்கிறார்.
ஆனால் இராணுவத்தை குறைக்காமல் மீள்குடியேற்றம் சாத்தியமில்லை. எனவே இந்த பேச்சுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்குகின்றது. எனவே நாம் நம்பிக்கை கொள்ள முடியாமல் உள்ளோம்.
மேலும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைகளில் நடைபெறவுள்ளது. இதனால் 99வீதம் தமிழ் மக்கள் வாழும் வடமாகாணத்தில் ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்படும் நிலை உருவாகும்.
எனவே அது இங்குள்ள பல பிரச்சினைகளை காண்பிக்கும், என கூறியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த குழுவினர் யாழ்.பொது நூலகத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளதுடன், அங்கு பெறுமதியான நூல்களையும் வழங்கி வைத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfv2.html

Geen opmerkingen:

Een reactie posten