[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 06:22.17 AM GMT ]
இதேவேளை இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே சிசனுக்கு எதிராக இலங்கை அரசாங்க தலைமைத்துவத்தின் அனுசரணையுடன் தனிப்பட்ட குரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வாசிங்டன் தரப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
அமெரிக்காவுடன் கடும் எதிர்ப்பாக நடந்து கொள்ளும் நாடுகளில் கூட இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்று வாசிங்டன் தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தநிலையில் அதிக செலவில் அமெரிக்காவுடனான உறவை புதுப்பித்துக் கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன கடந்த வாரத்தில் அமெரிக்காவுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாகிஸ்தான் வம்சாவளியான அமெரிக்க பிரஜையான இமாட் ஸிப்ரியை கொண்டு இராஜதந்திர உறவை கட்டியெழுப்பவும் இலங்கை முயற்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இமாட் ஸிப்ரி என்பவர், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் சிறந்த நட்பை கொண்டவர் என்ற அடிப்படையிலேயே, அவரின் உதவியை இலங்கை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.
ஒபாமாவுக்கான தொழில்நுட்ப அமைப்பின் இணைத்தலைவராக ஸிப்ரி செயற்படுகிறார். அத்துடன் தேசிய நிதிக்குழுவிலும் ஸிப்ரி பிரதித்தலைவராக செயற்படுகிறார்.
இந்தநிலையில் பாகிஸ்தானின் முதலீட்டு சபையில் முன்னர் தலைவராக இருந்த சலீம் எச் மன்ட்விவாலா என்பவரே ஸிப்ரியை இலங்கையின் அரசாங்க கட்சி தலைவர்களுக்கு அறிமுகப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைடுத்து ஸிப்ரியும் மற்றும் ஒரு அமெரிக்க வர்த்தகரும் இலங்கைக்கு அடிக்கடி சென்று திரும்பியதாகவும் சுற்றுலாத்துறையில் சுமார் 200 மில்லியன் டொலர்களை முதலீடு செய்வதற்கு குறித்த வர்த்தகர் ஆராய்வுகளை மேற்கொண்டதாகவும் இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
எனினும் முதலீடுகளின் போது ஏற்படும் ஆரம்பச் செலவுகள் எதனையும் தாம் இலவசமாக மேற்கொள்ளப் போவதில்லை என்றும் அமெரிக்க வர்த்தகர் கூறியிருப்பதாக செய்தித்தாள் கூறியுள்ளது.
இதன் அடிப்படையிலேயே தற்போது அதிக செலவில் அமெரிக்காவுடன் இராஜதந்திர உறவை புதுப்பித்துக் கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclp1.html
அமெரிக்கத் தூதுவரின் இடமாற்றம் இலங்கைக்கு நிம்மதியைத் தருமா?
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 06:59.41 AM GMT ]
ஐ.நா.வுக்கான பிரதித் தூதுவராகவும், ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கான பிரதி பிரதிநிதியாகவும், இவரது பெயரை கடந்த 8ம் திகதி முன்மொழிந்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா.
மிச்சேல் ஜே சிசனை இலங்கையில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் உத்தரவிடக்கூடும் என்ற ஊகங்கள், சில ஊடகங்களில் வெளியான நிலையில் தான், அவரது பெயரை ஒபாமா முன்மொழிந்திருக்கிறார்.
அதற்காக, அத்தகைய வெளியேற்ற உத்தரவு ஒன்றை அமெரிக்கா எதிர்பார்த்ததாக கருத முடியாது.
அதற்காக, அத்தகைய வெளியேற்ற உத்தரவு ஒன்றை அமெரிக்கா எதிர்பார்த்ததாக கருத முடியாது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 2012 ம் ஆண்டு ஜுன் 29ம் திகதி தான், மிச்சேல் ஜே சிசனின் நியமனத்தை, அமெரிக்க செனட் ஏற்றுக் கொண்டிருந்தது.
மீண்டும், அவர் ஐ.நா.வுக்கான பிரதித் தூதுவர் பதவிக்காக, அவரது பெயரை அமெரிக்க செனட் உறுதிப்படுத்த வேண்டிய நிலையுள்ளது.
அதுவரையில், அவர் இலங்கையில் தான் பணியாற்றுவார்.
எதற்காக, சிசன், ஐ.நா.வுக்கான தூதுவராக நியமிக்கப்படுகிறார், இதில் இலங்கைக்கு எதிராக ஏதேனும் வலை பின்னப்படுகிறதா என்றெல்லாம் இப்போது பலரும் ஆராயத் தொடங்கியுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக, சர்வதேச வலைப்பின்னல் ஒன்று பின்னப்படுவதாக, எச்சரித்துள்ள, கலாநிதி தயான் ஜெயதிலக, தனது கட்டுரையொன்றில், மிச்சேல் ஜே சிசன் ஐ.நா. பதவிக்கு நியமிக்கப்படுவதை தனித்த ஒரு விவகாரமாக தான் பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் தூதுவராக உள்ள, சமந்தா பவருக்கு அடுத்த நிலையில், பிரதித் தூதுவராக, றோஸ் மேரி ஏ டிக்காலா, 2010ம் ஆண்டு தொடக்கம் பதவி வகித்து வருகிறார்.
அவரது இடத்துக்குத் தான், தூதுவர் என்ற நிலையுடன் கூடிய, ஐ.நா. மற்றும் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கான பிரதி பிரதிநிதியாக மிச்சேல் ஜே சிசன் நியமிக்கப்படவுள்ளார்.
அமெரிக்காவின் ஐ.நா.வுக்கான தூதுவராக உள்ள சமந்தா பவர், முன்னர், தேசிய பாதுகாப்புச் சபையின் உறுப்பினராக இருந்தவர்.
ஒபாமாவுக்கு நெருக்கமான அவரும், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், தீர்மானம் கொண்டு வரப்படுவதில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.
இப்போது அவருக்கு அடுத்த நிலையில், நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வுக்கான பிரதி பிரதிநிதியாக மிச்சேல் ஜே சிசன் நியமிக்கப்படவுள்ளார்.
இது இலங்கையைப் பொறுத்தவரையில், சிந்திக்க வேண்டியதொரு விடயம் தான்.
அமெரிக்கத் தூதுவராகப் பொறுப்பேற்ற காலத்தில் இருந்தே, இலங்கை அரசாங்கத்துடன், நெருக்கமான உறவை மிச்சேல் ஜே சிசன் பேணி வரவில்லை.
அதற்குக் காரணம், இவர், கொழும்பில் பதவியைப் பொறுப்பேற்க முன்னரே, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானத்தை அமெரிக்கா நிறைவேற்றியிருந்தது.
இந்த தீர்மானங்களுக்குப் பின்னர், அமெரிக்க - இலங்கை உறவுகள் படிப்படியாக சீர்குலைந்து வந்ததே தவிர, ஒருபோதும் மேம்படவில்லை.
அதேவேளை, கொழும்பில், தனது பணியை பொறுப்பேற்ற பின்னர், ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி உள்ளிட்ட விவகாரங்களில், மிச்சேல் ஜே சிசன் இலங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்தார்.
அத்துடன், இலங்கையின் எல்லாப் பாகங்களிலும், சிவில் சமூகத்துடனான உறவை அவர் வலுப்படுத்திக் கொண்டிருந்தார்.
இதனால், இவர் இலங்கை அரசாங்கத்தினால் வேண்டப்படாத ஒரு தூதுவராகவே கணிக்கப்பட்டார்.
அத்தகையதொருவர், ஐ.நா.வுக்கான பிரதி பிரதிநிதியாக நியமிக்கப்படுவதை அரசாங்கம் முன்னெச்சரிக்கையுடன் தான் நோக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஏனென்றால், ஏற்கனவே ஐ.நா.வுக்கான தூதுவராகப் பணியாற்றும் சமந்தா பவருடன், சிசனும் இணையும் போது, அது இலங்கைக்கு எதிரான கூடுதல் அழுத்தங்களைக் கொடுக்கும்.
இலங்கை விவகாரத்தில், சிசன், நேரடியாக சம்பந்தப்பட்ட ஒருவராக நிலைமைகளை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நேரில் அவதானித்த ஒருவராக இருப்பதால், ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான நகர்வுகளை அவர் தீவிரமாக முன்னெடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
உதாரணத்துக்கு, றொபேர்ட் ஓ பிளேக்கை எடுத்துக் கொள்ளலாம்.
இலங்கையில் தூதுவராக பணியாற்றிய அவர், போர் முடிவுக்கு வந்த கையோடு தெற்கு மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலராக நியமிக்கப்பட்டார்.
அவர் அந்தப் பதவியில் இருந்த காலத்தில் தான், இலங்கைக்கு எதிரான நகர்வுகளுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பிள்ளையார் சுழி போட்டது.
அவர் கொழும்பில் பணியாற்றிய போது பெற்ற அனுபவங்கள், கணித்து வைத்திருந்த நிலைமைகள் எல்லாவற்றையும், இலங்கைக்கு எதிரான அமெரிக்க நகர்வுக்காகத் திருப்பி விட்டிருந்தார்.
அவர் இப்போது அந்தப் பதவியில் இல்லாவிட்டாலும், அவரது அந்த நகர்வு தான், இலங்கை அரசாங்கத்தைத் தொடர்ந்து துரத்தி வருகிறது.
அதுபோலவே, இலங்கை அரசாங்கத்தை நன்கு அறிந்தவரான, அதன் நெளிவு சுளிவுகளை நன்றாகவே மதிப்பிட்டவரான, மிச்சேல் சிசன், ஐ.நா. பதவியைப் பொறுப்பேற்கும் போதும், இலங்கைக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும்.
அதுவும், அடுத்து வரும் ஆண்டில், இலங்கை விவகாரம், ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு முன்மொழியப்படக் கூடிய சாத்தியங்களும் உள்ளன.
ஏனென்றால், தற்போது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் முன்னெடுக்கப்படும், இலங்கையில் போரின் போது நடந்த மீறல்கள் குறித்த விசாரணையின் அறிக்கை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.
ஜெனீவா அந்த அறிக்கையை வைத்து எதையும் செய்ய முடியாது.
அதற்கான அதிகாரங்கள் ஏதும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கிடையாது.
இது தான், இலங்கை அரசாங்கத்துக்கு துணிச்சலைக் கொடுத்துள்ள விடயம்.
எப்படியாவது, மேல் நடவடிக்கைக்காக அந்த அறிக்கை, ஐ.நா. பாதுகாப்புச் சபைக்குத் தான் அனுப்பி வைக்கப்படும்.
ஆனால், ஐ.நா. பாதுகாப்புச் சபையில், இலங்கைக்கு ஆதரவான சீனாவும், ரஷ்யாவும், அந்த அறிக்கையை வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு, தூக்கிக் குப்பையில் போட்டு விட முடியும்.
ஐ.நா. பாதுகாப்புச்சபையில், இலங்கையைப் பாதுகாக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அண்மையில் கூட சீனா உறுதியளித்திருந்தது.
இலங்கை குறித்து விசாரணை அறிக்கை மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்புச் சபை, தடையாக இருந்தாலும், அங்கு பதவியேற்கப் போகும், மிச்சேல் சிசன் சும்மாயிருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.
பாதுகாப்புச்சபை அந்த அறிக்கையை குப்பைக் கூடையில் வீசினாலும், அதனை வைத்து, இலங்கைக்கு எதிராக புதிய வழியில் திருப்பி விடுவதற்கு சமந்தா பவருடன் இணைந்து, மிச்சேல் சிசன் முயற்சிக்க வாய்ப்புகள் உள்ளன.
அதாவது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் மூலம், தடைகளை விதிப்பதற்கான முன் முயற்சிகள் எடுக்கப்படலாம்.
எனவே தான், சிசனின் இந்த இடமாற்றத்தை இலங்கை உன்னிப்பாகவும், எச்சரிக்கையோடும் அவதானிக்கத் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே அவர், இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அரசாங்கத்தினால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறார்.
இத்தகைய பின்னணியில், அவர் ஐ.நா.வின் பிரதிப் பிரதிநிதியாகப் பொறுப்பேற்பது மிகவும் ஆபத்தானது என்றே அரசாங்கம் உணர்கிறது.
ஆனாலும், இப்போதைக்கு அரசாங்கத்துக்கு ஆறுதல் அளிக்கக் கூடியதொரு விடயமும் உள்ளது.
அது என்னவென்றால், அமெரிக்க செனட், இவரது நியமனத்தை, உடனடியாக அங்கீகரிக்குமா? என்பதே அதுவாகும்.
அமெரிக்க செனட்டில் ஒபாமாவின் ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லை.
இதனால், அவரது நியமனங்களை குறிப்பாக, வெளிநாடுகளுக்கான தூதுவர் நியமனங்களை அங்கீகரிக்க செனட் இழுத்தடித்து வருகிறது.
கடந்த ஜூலை 11ம் திகதி வரை, ஜனாதிபதி ஒபாமாவினால், முன்மொழியப்பட்ட 58 தூதுவர்களின் நியமனங்களை செனட் உறுதிப்படுத்தாமல் உள்ளது.
இதனால், உலகின் 40 நாடுகளில் நிரந்தரத் தூதுவர்கள் இல்லாத நிலையில் அமெரிக்கா உள்ளது.
இவற்றில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், லிபியா, உள்ளிட்ட முக்கியமான நாடுகளும் அடங்கும்
புதிய பதவிகளைப் பொறுப்பேற்க முடியாமல், பல தூதுவர்கள் உள்ளனர்.
இதனால், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.
அமெரிக்காவின் வர்த்தகம், பொருளாதாரம், இராஜதந்திர மற்றும் இராணுவ நலன்கள் கூட இந்த தாமத்தினால் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
அண்மையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, இந்த நியமனங்களை, உடனடியாக உறுதி செய்யுமாறு, செனட் உறுப்பினர்களிடம் கோரியிருந்தார்.
ஆனாலும், செனட் வெளிவிவகாரக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட 34 தூதுவர்களின் நியமனங்களைக் கூட சாதாரணமான ஒரு வாக்கெடுப்பின் மூலம், அங்கீகரிக்க செனட் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது.
இத்தகைய பின்னணியில், சிசனின் நியமனமும், அமெரிக்க செனட்டில் இழுபறிப்படும் நிலை ஏற்படலாம்.
அதையிட்டு இலங்கை அரசாங்கம், வருத்தப்படுமா அல்லது மகிழ்ச்சி கொள்ளுமா? என்று கூற முடியாது .
ஏனென்றால், சிசன் இங்கே இருந்தாலும் சிக்கல், அங்கு சென்றாலும் சிக்கல்.
அதேவேளை,அமெரிக்காவுடன் உறவுகளைப் புதுப்பிக்கும் முயற்சியிலும் இலங்கை அரசாங்கம் இறங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
வெளிவிவகார அமைச்சைக் கவனிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார்.
அவர் அங்கு, மனித உரிமை விவகாரங்களை முக்கியத்துவப்படுத்தாமல், இலங்கையுடனான உறவுகளை அமெரிக்கா பலப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மனித உரிமைகளை முக்கியத்துவப்படுத்துவதால் தான், சீனாவின் கை ஓங்கியும், அமெரிக்காவின் கை இறங்கியும் வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்பும், இலங்கை அரசாங்கம் அதற்கு நிபந்தனை விதிக்க முனைவது வேடிக்கையானது.
இலங்கையுடன் அத்தகைய நிபந்தனைக்கு இணங்கி உறவுகளைப் பலப்படுத்துவதற்கு அமெரிக்கா, ஒன்றும் பலவீனமான நிலையில் இல்லை.
ஹரிகரன்
http://www.tamilwin.com/show-RUmsyHRULclp3.html
Geen opmerkingen:
Een reactie posten