தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 juli 2014

படையினரின் அனுமதியுடன் நடைபெற்ற யாழ்.வசாவிளான் புனித யாகப்பர் ஆலய நூற்றாண்டு விழா!

மகிந்த சென்ற விமானத்தை தரையிறங்க அனுமதிக்காத கனடா!
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 02:46.57 PM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கியூபாவிற்குப் பயணம் செய்த விமானம் மீள் எரிபொருள் நிரப்புவதற்காக கனடாவில் இறங்குவதற்கு அனுமதி கோரப்பட்ட போது, அந்நாட்டு அரசாங்கத்தினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுதர்மா தெரிவித்தார்.
1983 கறுப்பு ஜுலை தமிழர்களின் அரசியலில் ஒரு அங்கமாகியது. அத்தோடு தமிழர்களின் வாழ்வியலை மாற்றியமைத்தது. குறிப்பாக உலகின் பார்வையைத் தமிழர்களின்பால் திருப்பிய தொடுபுள்ளியாக இந்த இனக்கலவரம் அமைந்து விட்டது.
புலம்பெயர்ந்த மக்கள் ஒரு மாறுதலை மேற்குலகில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். மேற்குலகைப் பொறுத்தவரை இரண்டு விடயங்களிற்காக இனப்பிரச்சினை தீர்வை வலியுறுத்தின. ஆனால் பிரச்சினை தீர்க்கப்படாதவரை புகலிடக் கோரிக்கையும் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்பது தான் உண்மை. 
தற்போதைய அரசியற் செயற்பாடுகள் கனடாவில் தமிழர்களிற்கு வெற்றியானவை தமிழர்களின் பலம் புரியப்பட்டிருக்கிறது. தமிழர்கள் கனடாவின் ஓர் அங்கம் என்பதை விட கனடாவின் வளர்ச்சியின் பங்காளர்கள் என்பது தெளிவாக உணரப்பட்டிருக்கிறது.
250 ஆயிரம் தமிழர்கள் கனடாவில் இருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் சொல்லுமளவிற்கு நிலைமை வளர்ந்துள்ளது. இங்குள்ள தமிழர்களின் சனத்தொகை தொடர்பாக சகல கட்சிகளும் வேறு வேறு கருத்தைக் கொண்டிருந்தன.
2009ம் ஆண்டு இறுதிப் போர் இலங்கையில் முடிவுறும் வரை கனடா தமிழர் விவகாரத்தில் மிக எச்சரிக்கையாகச் செயற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களிற்குக் கூட அரச கட்டமைப்பு 2009ம் ஆண்டு வரை கனடா வருவதற்கு விசாக்கள் வழங்கப்படவில்லை.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கனடிய அரசின் உத்தியோகபூர்வ குழு இலங்கை சென்றிருந்த போது அந்த குழுவை இராஜதந்திர வரையறைகளை மீறி அவமதித்து அனுப்பினார். அதன் பலனை இலங்கை இப்போதும் கனடாவிடமிருந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
இது போன்ற இதுவரை வெளியுலகின் பார்வைக்கு வராத பல நிகழ்ச்சிகள், சம்பவங்கள் குறித்த கருத்துக்களையும், தரவுகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLcho1.html

படையினரின் அனுமதியுடன் நடைபெற்ற யாழ்.வசாவிளான் புனித யாகப்பர் ஆலய நூற்றாண்டு விழா!
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 03:56.50 PM GMT ]
யாழ்.உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வசாவிளான் புனித யாகப்பர் ஆலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. படையினரின் முன் அனுமதியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் பங்கேற்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளதுடன், யாழ்.பேராயர் தோமஸ் சவுந்தரநாயகம் திருப்பலி ஒப்புக் கொடுத்துள்ளார்.
கடந்த 1990ம் ஆண்டு மக்கள் இப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த பின்னர் மேற்படி ஆலயம் பராமரிப்பின்றி இருந்த நிலையில் 2004ம் ஆண்டு தேவாலயத்திற்குச் செல்வதற்கு படையினர் முதன்முறையாக அனுமதி வழங்கியிருந்தனர்.
அதன் பின்னர் பல தடவைகள் அனுமதி கேட்டும் வழங்காமலும், சில தடவைகள் தேவாலயத்தை பார்ப்பதற்கான அனுமதியை வழங்கியுமிருந்தனர்.
இந்நிலையில் புனித யாகப்பர் ஆலயத்தின் நூற்றாண்டு தினமான நேற்று மக்கள் செல்வதற்கும் திருப்பலி வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் படையினர் அனுமதி வழங்கியிருந்த நிலையில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கலந்து  கொண்டிருந்த மக்கள் அனைவரும் படையினரின் கண்காணிப்புடன் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
இதேவேளை நீண்டகாலம் பராமரிப்பின்றி ஆலயம் இருந்தமையினால்,பெரும் காடுகள் வளர்ந்திருந்த நிலையில் அவற்றை துப்புரவு செய்வதற்கு படையினர் ஒத்துழைப்பு வழங்கியிருந்ததுடன், துப்புரவுப் பணிகளில் தாமும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய திருப்பலி ஒப்புக் கொடுத்த யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அங்கே உரையாற்றும் போது,
மோசமான போரினால் பல இடங்களில் பல ஆலயங்கள் அழிவடைந்து பராமரிப்பின்றி காணப்படுகின்றது. அவற்றுள் யாகப்பர் ஆலயத்தினையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
மேலும் போரினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து சென்று அகதிகளாக, இடம்பெயர்ந்தவர்களாக, அநாதரவாக சீவித்து வந்தார்கள். வருகிறார்கள்.
இந்த துர்ப்பாக்கிய நிலையில், பல மக்கள் தங்கள் சொந்த மண்ணுக்கு திரும்பும் ஏக்கத்துடன் இறந்தும் போயிருக்கின்றார்கள்.
மேலும் பல மக்கள் போரினால் சிதறுண்டு பல திக்குகளாக பிரிந்து சென்றிருக்கின்றார்கள். இன்றைய தினம் இந்த ஆலயத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும். என பலர் ஆசைப்பட்டாலும், அவர்களில் பலருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை.
நாம் கடந்த 15வருடங்களுக்கு முன்னர் அப்போதிருந்த ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.
இந்த ஆலயத்தை புனரமைப்பதற்கு உதவியளிக்கும்படியும், ஆலயத்தை மக்கள் பாவனைக்காக விடுவித்து தரும்படியும். அதற்காக அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்த போதும் அது நடக்கவில்லை. என்றே அறிகின்றேன்.
இந் நிலையில் மக்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் ஆலயத்திற்குச் செல்ல படையினர் விடுவார்கள் விடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் துன்புறுவது தொடர்கதையாக மாறிவிட்டது.
மிக நீண்டகாலம் பராமரிப்பில்லாமல், இந்த ஆலயம் பற்றைகள் வளர்ந்து அவை பெரிய மரங்களாகி காடுகள் சூழ்ந்து காணப்பட்டது. அவற்றை துப்புரவு செய்து இன்று இந்த நூற்றாண்டு விழாவை நடத்த முயற்சித்திருக்கும் மக்கள் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLcho2.html

Geen opmerkingen:

Een reactie posten