தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 juli 2014

சனல்- 4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரே ஐநா விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்க ஜெனிவா செல்கிறார்!

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக பிரதம செயலாளர் தொடுத்த வழக்கு! நாளை தீர்ப்பு!
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 12:12.28 AM GMT ]
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு மீதான தீர்ப்பு நாளை அறிவிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஜூலை 30ம் திகதி தீர்ப்பை அறிவிப்பதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தனது வேலையில் தலையிடுகிறார் எனவும், தன்னை வேலையிலிருந்து நீக்க முயற்சி செய்கிறார் எனவும் கூறி முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக பிரதம செயலாளர் ரமேஸ் விஜயலட்சுமி குறித்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நேற்றைய விசாரணையின் போது முதலமைச்சர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்,
வடமாகாண பிரதம செயலாளர் விடுமுறை எடுப்பதாக இருந்தாலோ அல்லது வெளிநாடுகளுக்குச் செல்வதாக இருந்தாலோ முதல்வருக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும், அத்துடன், மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சட்டபூர்வமான உத்தரவுகளுக்கு பிரதம செயலாளர் கீழ்படிந்து நடக்க வேண்டும், மாகாணசபையின் செயற்பாடுகளைக் குழப்பாத வண்ணம் அவரின் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனச் சுட்டிக்காட்டி வாதிட்டார்.
மேலும், புதிய செயலாளர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்கும் போது தன்னுடைய அனுசரணையுடன் நியமிக்க வேண்டும் என்ற தமது சட்டபூர்வமான கோரிக்கையானது எதிர்காலத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை சட்டத்தரணி சுமந்திரன் மூலம் நீதிமன்றுக்கு உறுதிப்படுத்தினார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோமின் தயாசிறி, பிரதம செயலாளரின் தொழிலுரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மாகாண சபையின் செயற்பாடுகள் அமையவேண்டும் என்றும், விஜயலட்சுமியின் தொழில் சுதந்திரம் உறுதி செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்தி கோரிக்கை விடுத்தார்.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்களான ரோஹினி மாரசிங்க மற்றும் பி.பீ. அலுவிகார கொண்ட குழுமத்தின் முன்னிலையில் நேற்றைய தினம் குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே இவ்வழக்கு மீதான தீர்ப்பு நாளை புதன்கிழமை அறிவிக்கப்படும் என  மூவர் கொண்ட நீதியரசர் குழாம் தெரிவித்தது.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLcho7.html
சனல்- 4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரே ஐநா விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்க ஜெனிவா செல்கிறார்!
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 11:46.16 PM GMT ]
இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆவணப்படங்களை வெளியிட்டு இலங்கைக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்திய சனல் - 4 நிறுவனத்தின் ஊடகவியலாளர் கெலும் மெக்ரே, ஐ.நா. விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்கவுள்ளார் என்று நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
இலங்கை மீதான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணைக்குழு தற்போது ஜெனீவாவில் சாட்சியங்களைத் திரட்டி வருகின்றது.
இதன்போதே மெக்ரே சாட்சியமளிக்கவுள்ளார் எனவும் இதற்காக லண்டனிலிருந்து அவர் ஜெனீவா செல்லவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
தமது  சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட போர்க்குற்ற ஆதாரங்களின் நம்பகத்தன்மை, அதன் பின்னணி உட்பட மேலும் பல விடயங்களை ஐ.நா. விசாரணைக் குழுவின் முன்னிலையில் கெலும் மெக்ரே தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
`இலங்கையின் கொலைக்களம்', 'யுத்த சூனிய வலயம்' உள்ளிட்ட ஆவணப்படங்கள் மூலம் போர்க்குற்ற ஆதாரங்களை வெளிப்படுத்திய சனல் - 4 குழுவினர், கடந்த நவம்பர் மாதம் பொதுநலவாய மாநாட்டில் செய்தி சேகரிக்க வந்து வடக்குக்குச் சென்ற சமயம், அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமையால் அவர்களது பயணம் இடைநடுவில் கைவிடப்பட்டது.
மேலும் பல ஆதாரப் படங்கள் வெளியிடப்படும் என கெலும் மெக்ரே அப்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, போர்க்காலத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான முயற்சிகளுக்கான அனுசரணையாளராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்மும் ஐ.நா. விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்கத் தயாராகி வருகின்றார்.
ஐ.நா. மனித உரிமைகள்  பேரவையின் கூட்டத்தொடரில் கடந்த மார்ச் மாதம் 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் கடந்த 15ஆம் திகதி முதல் இலங்கை மீதான விசாரணையை ஐ.நா. குழு ஒஸ்லோவில் ஆரம்பித்தது.
தற்போது இரண்டாம் கட்டமாக அந்த விசாரணை ஜெனீவாவில் நடைபெறுகின்றது. குறிப்பாக, யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் வெள்ளைக்கொடி ஏந்தியபடி சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று கூறப்படும் விவகாரம் பற்றி சாட்சியம் திரட்டுவதில் குறித்த குழு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLcho6.html

Geen opmerkingen:

Een reactie posten