தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 juli 2014

அமைச்சர் எஸ்.பி.யின் வீட்டின் அருகில் இராஜசிங்க மன்னனின் பெட்டகம் புதைக்கப்பட்டுள்ளது!

தயான் ஜயதிலக்கவின் குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரிப்பு!
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 12:10.39 AM GMT ]
முன்னாள் இராஜதந்திரி தயான் ஜயதிலக்கவின் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 
இஸ்ரேலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வடக்கில் மேற்கொள்ளப்படுவதாக தயான் ஜயதிலக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை முற்று முழுதாக நிராகரிக்கின்றோம் என இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.
தயான் ஜயதிலக்க 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமைசச்ர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்டப் பிரதிநிதிகள் 2008 மற்றும் 2009ம் ஆண்டு இஸ்ரேலுக்கு விஜயம் செய்து, அந்நாட்டு சுதேசப்பாதுகாப்புப் படையினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும்,  சுதேசப்பாதுகாப்புப் படை முன்வைத்த யோசனையை சம்பிக்க தரப்பினர் ஏற்றுக்கொண்டதாகவும் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
தயான் ஜயதிலக்கவின் கோரிக்கைகளை ஏற்கப் போவதில்லை எனவும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjv0.html
24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி யாழ்.நோக்கிப் பயணம்
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 12:43.49 AM GMT ]
யாழ்தேவி ரயில் 24 வருடங்களின் பின்னர் மீண்டும் எதிர்வரும் செப்டெம்பர் 15ம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், செப்டம்பர் 15ம் திகதி பரீட்சார்த்தமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் சேவை மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிட்டார்.
செப்டெம்பர் இறுதியில் கொழும்பு- யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பின் பொதுமக்களுக்கு யாழ்ப்பாணம் செல்ல அவகாசம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை மீளமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதோடு யாழ். ரயில் நிலையமும் துரிதமாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி செப்டம்பர் 15ம் திகதி கொழும்பிலிருந்து யாழ். வரையான பரீட்சார்த்த ரயில் சேவை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
செப்டம்பர் 30ம் திகதிக்கு முன்னர் யாழ். தேவி ரயில் சேவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேவேளை, யாழ்தேவி இந்த வருட இறுதியில் காங்கேசன்துறை வரை பயணிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
செப்டம்பர் இறுதி முதல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை 3 ரயில்கள் தினமும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjv2.html
கருத்தரங்கில் பங்கேற்கவில்லை! புலிகள் மீது குற்றம் சுமத்தி உரையாற்றவுமில்லை!- டெஸ்மன் டி சில்வா
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 02:29.29 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளே போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்று தான் உரையாற்றியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை, அனைத்துலக சட்ட நிபுணர் சேர் டெஸ்மன் டி சில்வா நிராகரித்துள்ளார். 
இலங்கை இராணுவத்தினால் 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட போர் அனுபவக் கருத்தரங்கில் சேர் டெஸ்மன் டி சில்வா உரையாற்றியதாகவும், அதில், போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு விடுதலைப் புலிகளே காரணம் என்றும், அவர்கள்ள் 3 இலட்சம் பொதுமக்களை தப்பிச் செல்ல விடாமல் பயணமாக பிடித்து வைத்திருந்ததாகவும், அதுவே உலகின் மிகப்பெரிய பயண நாடகம் என்றும், இதுவே மிகப் பெரிய போர்க்குற்றம் என்றும் கூறியதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றின் நேற்று முன்தினம் வெளியான கட்டுரை ஒன்றில் கூறப்பட்டிருந்தது.
இந்தத் தகவல்களை சேர் டெஸ்மன் டி சில்வா நிராகரித்துள்ளார்.
“தீவிரவாதத்தை தோற்கடித்த சிறிலங்காவின் அனுபவங்கள்” என்ற  இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் கருத்தரங்கில், தாம் பங்கேற்றதாக கூறப்படுவது முற்றிலும் தவறு என்று அவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் கருத்தரங்கில் பங்கேற்றதாக, அதில் உரையாற்றியதாக கூறப்படும் அனைத்துமே தவறான தகவல்கள்.
அந்தக் கருத்தரங்கிற்குத் தாம் அழைக்கப்படவில்லை என்றும் அதில் தாம் உரையாற்றவில்லை என்றும் டெஸ்மன்ட் டி சில்வா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjv7.html
அமைச்சர் எஸ்.பி.யின் வீட்டின் அருகில் இராஜசிங்க மன்னனின் பெட்டகம் புதைக்கப்பட்டுள்ளது!
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 02:35.35 AM GMT ]
1800 ல் கண்டியை ஆண்ட இராஜசிங்க மன்னனின் பெட்டகம் ஒன்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் வீட்டுக்கு அருகில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அகழ்வாராய்ச்சி திணைக்களத்தின் பணிப்பாளர் செனரத் திஸாநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கண்டிக்கு அருகில் உள்ள ஹங்குராங்கெத்தையில் உள்ள அமைச்சரின் வீட்டுக்கு அருகிலேயே இந்த பெட்டகம் புதைக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இலங்கையை பற்றி வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்ட ரொபட் நொக்ஸின் புத்தகத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வளவ்வ என்ற இடமே இராஜசிங்கனின் தலைநகராக இருந்ததாகவும் நொக்ஸ் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் மன்னன் இராஜசிங்கனின் பெட்டகம் இருப்பதாக கூறப்படும் இடத்தை அகழ்வதற்கு அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
எனினும் இன்னும் அவர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை என்று அகழ்வாராய்ச்சி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ரொப்ட் நொக்ஸின் புத்தக்கப்படி குறித்த பெட்டகத்தில் இராஜசிங்க மன்னன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவரின் ஆடைகள் உட்பட்ட பல பொருட்கள் இருப்பதாக கருதப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjwy.html

இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற இரு பெண்கள் கைது - காதலால் மாணவர்களுக்கிடையில் மோதல்
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 02:37.29 AM GMT ]
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக பெங்களூருக்கு கடத்தி செல்ல முயன்ற தங்கப்பாளம் மற்றும் ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டன
தங்கத்தை நேற்றிரவு கடத்த முற்பட்ட வேளை இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடம் இருந்து 85 இலட்சத்து 90ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இருவரும் தங்கத்தை மறைத்து வைத்து கடத்த முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காதல் விவகாரம் - மாணவர்களுக்கிடையில் மோதல்
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை ஸ்ரீபாத கல்வி கலாசாலையில் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஏழு மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரு காதல் சம்பவம் தொடர்பாகவே இக்கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
தற்போது பத்தனை ஸ்ரீபாத கல்வி கலாசலைக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjwz.html

Geen opmerkingen:

Een reactie posten