தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 juli 2014

ஒபாமாவின் நண்பரை கைக்குள் போட்டு அமெரிக்காவை மடக்க இலங்கை முயற்சி!

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக ஜனாதிபதி ஒபாமாவின் நெருங்கிய நண்பர் ஒருவரை அரசு பயன்படுத்த முனைகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒபாமாவின் நண்பரான இமாட் யுபேரி ஒரு பாகிஸ்தானியர் எனவும் ஒபாமாவுக்கான தேர்தல் நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர் எனவும், அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக இலங்கை அரசு அவரை அணுகி உள்ளது எனவும் தெரியவருகிறது.
சர்வதேச அரங்கில் நன்மதிப்பை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் அரசு பெருமளவு பணத்தை செலவிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
இலங்கை அரசு நான்கு நிறுவனங்களுக்கு நாட்டை பற்றிய நன்மதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்காக பணம் செலுத்தி வருகின்றது. மேலும் இவற்றுடன் ஒப்பந்தமும் செய்துகொண்டுள்ளது. அமெரிக்காவின் வெளிநாட்டு முகவர்கள் பதிவு சட்டத்தின் கீழ் மெடிசன் மற்றும் பெல்ட்வே நிறுவனங்களுடன் அரசு இது தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.
இது தவிர கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பந்தம் முடிவடைந்த தொம்சன் நிறுவனத்திற்கு 100 மில்லியன் ரூபாவை அரசு வழங்கியுள்ளது. மாதமொன்றிற்கு 66, 600 அமெரிக்க டொலர்கள் என்ற வகையில் இந்த நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மெஜோரிட்டி நிறுவனத்திற்கு 348,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டன. இலங்கையின்
தற்போதைய நிலைவரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் மெடிசன் நிறுவனம் வெளிவிவகார அமைச்சிற்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காகவும் மேலதிக செயற்பாடுகள் மற்றும் செயற்பாட்டு ஊக்குவிப்பு தொகையாக மாதமொன்றிற்கு 15,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும். இந்த ஒப்பந்தம் ஓகஸ்ட் 2015 வரை நீடிக்கும் எனவும் அதன் பின்னர் நிலைமைகளை பொறுத்து மீண்டும் புதுப்பிக்கப்படலாம் எனவும் அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சிற்கான கண்காணிப்பு அமைச்சர் சஜின் வாஸ் குணவர்த்தன,
அமெரிக்காவில் மாத்திரமல்ல, முழு சர்வதேச சமூகத்துடனும் இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் நாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தெரியப்படுத்தவதற்காக தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறோம். இது எமது பணி. இதில் ஏதாவது தவறுள்ளதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள விடுதலைப் புலிகள் சார்பு அமைப்பு தனது பிரசார நடவடிக்கைக்காக நிறுவனமொன்றிற்கு 2.5 மில்லியன் டொலர்களை செலவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா செயற்படும் விதம் இலங்கையிலிருந்து வித்தியாசமானது.
ஜனாதிபதி செனட் மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஒன்றிலிருந்து ஒன்று விலகியுள்ளன, கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. பல விடயங்களில் அக்கறையுள்ள தரப்புகள் தமது தொடர் பிரசாரம் மூலம் சட்டங்களை உருவாக்குகின்றன. காங்கிரஸும் செனட்டும் அதனடிப்படையிலேயே சட்டங்களை உருவாக்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் இலங்கை வெற்றிகரமாக செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பயன்படுத்தும் முறைகளை அங்கு பயன்படுத்த முடியாது. அந்த நாடு செயற்படும் முறையையே நாங்கள் பின்பற்ற வேண்டும். இதில் எந்தப் பிழையும் இல்லை. எங்கள் செய்தி போய்ச் சேர வேண்டும்.
எமக்கு எதிராக செயற்படும் தரப்பினர் ஒவ்வொரு வாரமும் காங்கிரஸ் குழுக்களை சந்திக்கின்றனர். இதனை எதிர்கொள்வதற்கு நியாயபூர்வமான எங்களுடைய செய்தியை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதில் என்ன தவறு? என்றும் சஜின்வாஸ் குணவத்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஒபாமாவுக்கு நெருக்கமான இமாட் யுபேரி என்பவரை சந்தித்தார் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள சஜின், அவர் ஒபாமா நிர்வாகத்தில் எவ்வளவு செல்வாக்கு உடையவர் என்பது தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட நபர் ஒரு பாகிஸ்தானியர் எனவும், ஒபாமாவுக்கான தேர்தல் நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர் எனவும், இலங்கை அரசு அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக அவரை அணுகியுள்ளது என்றும் தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciv0.html

Geen opmerkingen:

Een reactie posten