[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 02:02.16 AM GMT ]
வடக்கு கிழக்கில் யுத்தம் மற்றும் வன்முறையினால் சேதமடைந்த வீடுகளை திருத்தும்வகையில் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் புனர்வாழ்வு புனரமைப்பு அதிகாரசபை மூலம் 100 கோடி ரூபாவினை ஜனாதிபதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
வன்செயல்கள் மற்றும் யுத்தத்தினால் சேதமடைந்த வீடுகளை திருத்தியமைக்கும் திட்டத்தின் கீழ் புனர்வாழ்வு புனரமைப்பு அதிகாரசபையினால் வவுணதீவில் ஐம்பது வீடுகள் புனரமைக்கப்படவுள்ளன.
வவுணதீவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு வவுணதீவு பிரதேச செயலகத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் தவராசா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் புனர்வாழ்வு அபிவிருத்தி புனரமைப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் பதுருதீன், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், மீள்குடியேற்ற அதிகார சபையின் பணிப்பாளர் சத்தியவரதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட காந்திபுரத்தினை சேர்ந்த ஐம்பது குடும்பங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபா வீதம் இந்த இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் வீடுகளை திருத்தியமைப்பதற்காக ஐம்பது இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு அபிவிருத்தி புனரமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் பதுருதீன் தெரிவித்தார்.
கெலம் மக்ரே இலங்கை வரத் தடை இல்லை? - பொதுநலவாய மாநாட்டில் சர்வதேச ஊடகவியலாளர் சிலருக்கு தடை?
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 01:47.41 AM GMT ]
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு வரவிரும்பும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் எவருக்கும் அரசாங்கம் தடைவிதிக்காது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனால், இலங்கைக்கு கடும் சிக்கல்களை ஏற்படுத்திய ஊடகவியலாளர்களான சனல் 4 தொலைக்காட்சியின் "No Fire Zone" புகழ் கெலம் மக்ரே மற்றும் முன்னாள் பி.பி.சி. ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹரிசன் ஆகியோர் கொழும்பு வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கெலம் மக்ரே, கொழும்பு வருவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என இலங்கையின் இராஜதந்திரி ஒருவர் அண்மையில் சவால் விட்டிருந்தார்.
எனினும் இந்த விடயத்தில் வெளிநாட்டமைச்சு தான் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என்று அண்மையில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.
இவ்வாறான பின்புலத்தில் அதிகரிக்கும் சர்வதேச அழுத்தங்களால் அனைவருக்கும் கதவைத் திறந்துவிட வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதையே பாதுகாப்பு செயலாளரின் அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.
பொதுநலவாய மாநாட்டில் சர்வதேச ஊடகவியலாளர் சிலருக்கு தடை?
எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது, ஊடகவியலாளர்களுக்கான அனுமதி தொடர்பில் சர்வதேச ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பு மீண்டும் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
சர்வதேசத்தின் அனைத்து ஊடகவியலாளர்களும் தடை இன்றி இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதை உறுதி செய்யுமாறு பொது நலவாய நாடுகளின் பொது செயலாளருக்கு இந்த அமைப்பு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடிதம் அனுப்பி இருந்தது.
இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுநலவாய நாடுகளின் மக்கள் தொடர்பு அதிகாரி ரிச்சட் உகுவும் உறுதியளித்திருந்தார்.
எனினும் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது, செனல் 4 தொலைக்காட்சியின் இயக்குனர் கெலம் மெக்ரே இலங்கை வர அனுமதிக்கப்படுவாரா? என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் வினவப்பட்ட போது, யார் யாரை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இது தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சர்வதேச ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பு, அமைச்சரின் இந்த கருத்து, முக்கிய ஊடகவியலாளர்களை இலங்கை அரசாங்கம் தடை செய்யும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
ஏற்கனவே கெலம் மெக்ரேவை இலங்கைக்குள் வரவிடாமல் தடை செய்ய வேண்டும் என்று, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் உலுகல்ல தெரிவித்திருந்தமையையும் அந்த அமைப்பு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten