தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

திணிக்கப்படும் வடமாகாண சபைத் தேர்தலும் வெல்லப்பட வேண்டிய தமிழர் நியாயமும்

கிளிநொச்சியில் கறையான் மருந்தை சுவாசித்த 14 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 10:33.48 AM GMT ]
வேலியில் உள்ள கறையானுக்கு தெளித்த மருந்து காற்றில் கலந்து அதனைச் சுவாசித்த தரம் 5 இல் கற்கும் மாணவர்கள் 14 பேர் வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் நேற்று இரவு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் கிளிநொச்சி கரியநாகபடுவனில் இடம்பெற்றது.
அப்பகுதியில் தரம் - 5 இல் கல்வி கற்கும் 14 மாணவர்கள் தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்குச் சென்றுவிட்டு நேற்று இரவு 7 மணியளவில் ஒன்றிணைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன்போது வீட்டு வேலியில் இருக்கும் கறையான்களை அகற்றுவதற்காக ஒருவகை மருந்தை மருந்து விசிறியூடாக வேலிக்கு தெளித்துக்கொண்டிருந்தார்.
அவ்வழியாகச் சென்ற மாணவர்கள் இதனைச் சுவாசித்துள்ளனர். இதனையடுத்து இந்த மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக வாந்தி எடுக்கத் தொடங்கினர். மேலும் சிறிது நேரம் கழிய அவர்கள் ஒவ்வொருவராக மயக்கமடைய ஆரம்பித்தனர்.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த பிள்ளைகளின் பெற்றோர் பதறியடித்துக்கொண்டு மாணவர்களை உடனடியாக அருகில் உள்ள முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு அவசர முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து மாணவர்களும் அம்புலன்ஸ் மூலம் நேற்றிரவு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அனைத்து மாணவர்களுக்கு கிளிநொச்சி வைத்தியசாலையில் நேற்றிரவு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் மாணவர்களுக்கு உயிராபத்துக்கள் இல்லை என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

திணிக்கப்படும் வடமாகாண சபைத் தேர்தலும் வெல்லப்பட வேண்டிய தமிழர் நியாயமும்
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 10:18.27 AM GMT ]
இலங்கைத் தீவில் மாத்திரமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாய்களிலும், இலங்கையை ஆட்சி செய்பவர்களின் தற்கால மமதையின் அடிநாதமாக ஒலித்துக் கொண்டும், குறுக்குவழிச் செயற்பாடுகளுக்கான சிந்தனைகளை கூர்மையாக்கிக் கொண்டும் இருப்பதானது நடைபெறப்போகின்ற வடமாகாண சபைத் தேர்தல் களத்தை யார் வென்று கொள்வதென்பதாகும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அரசியல், அறிவியல், தெளிவுள்ளவர்கள் இத்தேர்தலானது தமிழினத்தின் நீண்டகால முடிவில்லாத அரசியல் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாகவோ அல்லது இத் தேர்தல் கள வெற்றியிலிருந்து ஒரு நிரந்தரத் தீர்வை நோக்கியோ, தமிழரின் அபிலாசையான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்ற உயரிய தாகங்களைத் தாங்கி முன்னகர்த்தக் கூடிய நெம்பு கோலாகவோ எடுத்துக் கொள்ள முடியாதென்பதிலும் அவ்வாறு நடைபெற மாட்டாதென்பதிலும் மிகத் தெளிவாக உள்ளார்கள்.
இதுவரைகாலப் போராட்டத்திலும் பல்வேறு நெருக்கடிகளையும், துன்பகங்களையும் வேதனைகளையும் அவற்றுக்கும் மேலாக இலட்சிய தாகத்துக்காக அளப்பரிய தியாகங்களையும் செய்து, காத்திருக்கும் சாதாரண மக்கள் இத்தேர்தல்கள யதார்த்தங்களை பகுத்துப் பார்க்கவோ அல்லது சிங்கள பேரினவாதம் இதனுள்ளே புதைத்து வைத்திருக்கும் இராசதந்திரப் பொறிகள் எவை என்பதையும் ஆழமாகச் சிந்திக்க முடியாதவர்களாகவே உள்ளார்கள்.
தமிழ்த் தேசியத்துக்கான அரசியல் இருப்பு என்ற அடையாளத்தோடு, தேர்தல் களமிறங்க தயாராகியுள்ள அல்லது தயார்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு முன்பு நிலத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் எம் மக்களுக்கு மிகத் தெளிவாக உண்மை நிலைகளை எடுத்துரைக்க வேண்டிய கட்டாய தேவையை உணர்ந்துகொள்ள வேண்டும்.
வெறுமனே வாக்கு வேட்டுக்காக அவிழ்க்க முடியாத பல முடிச்சுககளை வெட்டிப் பேச்சின் மூலமும், வீராவேசச் சீற்றத்தின் மூலமும் அள்ளிவீசாமலும், மீண்டும் மீண்டும் எம் மக்களின் முன்னிருக்கும் பெருத்த அரசியல் வெளிக்குள்ளே ஆசைகளை மட்டும் அடுக்கி அடுக்கியே எதிரியின் அடக்குமுறைக்கு இட்டுச் செல்லாமலும் உண்மையை மாத்திரம் புரிய வைக்க வேண்டும்.
உண்மையைப் புரிந்துகொண்ட மக்களாக இத்தேர்தல் களத்தை வெல்வதும், வெல்வதன் ஊடாக எதைச் சாதிக்க உள்ளோம் என்பதை ஏற்றுக்கொண்ட மக்களாக வாக்களிப்பார்களேயானால் வரலாற்றுத் தவறுகள் நிகழாது தவிர்த்துக் கொள்ளவும், எங்கள் இலட்சியத் தாகங்களை சோரம்போக விடாது தக்கவைத்துக் கொள்ளவும் மக்களே சாட்சியாகவும், உறுதுணையாகவும் இருப்பார்கள் எனபதில் ஐயம் இல்லை.
உண்மைகளைப் புரிந்துகொண்டு வாக்களிக்கத் தயாராகும் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பலமும், அப்பலத்தின் மூலம் பெற்றுக்கொண்ட தமிழ் மக்களின் ஆணையை பாதுகாப்பதன் ஊடாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் தேசியத்தின் அரசியல் இருப்பாகவும் குரலாகவும் தொடர்ந்து தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.
தமிழ்த் தேசிய நலன்களுக்கு எதிரான கட்சிகளின் ஆட்சியை வடமாகாணத்துக்குள் பிரவேசிக்க இடமளிக்காது தடுத்து நிறுத்துவதோடு தமிழ்த் தேசியத்துக்கு சிறிதளவேனும் பயனளிக்காத இத்தேர்தலை எம்மீது திணித்து இலங்கையின் ஒன்றிணைந்த வாழ்வுநிலைபற்றி உலகுக்கு காட்ட முற்படும் சிங்களப் பேரினவாதத்தின் தந்திரோபாய பொறியைத் தடுப்பதையும் தமிழர் தரப்பு கையில் எடுக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா அரசபடைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் இன்றும் நேரடியாகவும், மறைமுகமாகவும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற எம்மினத்துக்கான நீதியைப் பெறுதலுக்கான சர்வதேசப் பொறிமுறைகளின் ஊடான சுயாதீன விசாரணையை மேற்கொள்ள வலியுறுத்தல்.
தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்ற உயர் கோட்பாடுகளில் இருந்து எமது அரசியல் விருப்பை விடுபடாது வெளிப்படுத்தலும் அதற்காகவே உழைத்தலும்.
இவற்றை தமது தேர்தல் விஞ்ஞாபனமாக முன்னிறுத்துதல் ஊடாகவே வரலாற்றில் மைல்கல்லாக நிலைத்து நிற்கக்கூடிய (வட்டுக்கோட்டை தீர்மானம் போன்று) மக்கள் ஆணையையும் விருப்பையும் பெறும் ஒரு சந்தர்ப்பமாக கவனத்தில்க் கொள்ள வேண்டும். இதை முன்னிறுத்தத் தவறும் பட்சத்தில் மக்கள் வாக்களிப்பதிலிருந்து விடுபடுவதையும் பிறிதொரு சக்தி வடமாகாணத்தின் ஆட்சிக்குள் நுழைவதையும் தடுக்கமுடியாமல் போய்விடும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய உருவாக்கமும், மக்கள் ஆணையைப் பெறும் தற்கால தேவையும் சரியாக ஒன்றிணையும் இவ் இராசதந்திர மையத்தை நீதியின்பால் தெளிவுள்ள வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் தொடக்கம் அனைவரும் வெளிப்படைத் தன்மையோடு கையிலெடுக்கத் தவறுவார்களேயாயின் வழமை போன்று சிங்கள ஆட்சி மையத்துள் நின்று, நீர்த்துப்போன பல தமிழ் உணர்வாளர்கள் அல்லது செயற்பாட்டாளர்கள் போன்றே விக்கினேஸ்வரன் அவர்களும் ஒரு பொருட்டல்ல என்றாகிவிடும்.
தமிழ் மக்களின் பலம் என்பது ஒன்றிணைவின் மூலமே கட்டிக்காக்க முடியும். அதனால் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அறிவியல் குவிவு என்பது ஜனநாயக வழிமுறையில் தற்போது அவசியமாகின்றது. மாறாக குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஸ்ரீலங்கா அரசு எதிர்பார்ப்பது போன்று தாயக மக்கள், புலம்பெயர் மக்கள் என்றோ அல்லது தாயகத்தில் வாழும் மக்களை சமூக கட்டமைப்பு ரீதியாகவோ கூறுபோடுவதை தடுத்தல் என்பதும் மிக மிக அவசியமாகின்றது.
ஏனெனில் மிகப் பிற்போக்குத் தனமாக நடைபெறும் பல விடயங்கள் வரலாற்றுப் பாடங்களிலிருந்தும், பாதையிலிருந்தும் விடுபட்டு சுயநல சாக்கடைக்குள் செல்வதை காணமுடிகின்றது.
தமிழர் தாயக இருப்புக்காக இதுவரை காலமும் கொடுக்கப்பட்ட, போதுமென்றாகிவிட்ட உயிர் விலைகளுக்கு மத்தியில், மீள முடியுமா?, வாழ்வு நிலைக்குமா? என்ற அச்ச உணர்வுகளை களைந்தெறிந்து வீழ்ந்தோரின் தாகங்களை தாங்கி நிற்கும் உண்மையும் நேர்மையும் உடைய மனிதர்களாக தமிழர் தரப்பு களமிறங்க வேண்டும்.
பிரித்துப் பார்க்க முடியாத ஒரு திரட்சியான ஒற்றுமையின்பால் நின்று உலகப் பரப்பெங்கும் வாழும் தமிழ் அறிவாளர்கள், ஆர்வலர்கள், கட்சிசார் பிரமுகர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனமாக மேற்கூறப்பட்ட விடயங்களை முன்னிறுத்த வேண்டுமென வலியுறுத்த வேண்டும்.
சிங்கள ஆட்சியாளர்கள் இட்டுச் செல்லும் பொறிக்குள் வீழப்போகின்றோமா? அல்லது பட்டுக்கொண்ட பட்டறிவுகளிலிருந்து ஒட்டுமொத்த தமிழினத்தின் விருப்பின் சாட்சியாக அவர்களின் ஆணையைப் பெற்று மிளிரப் போகின்றோமா? வீசப்படும் பந்தை கச்சிதமாகக் கையில் எடுத்து இராசதந்திர விசையோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நின்று, நிதானித்து செயலாற்ற வேண்டிய காலத்தின் கட்டாயமும், யதார்த்தமும் இதுவாகும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு -யேர்மனி

Geen opmerkingen:

Een reactie posten