தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 20 juli 2014

ஈ.பி.ஆர்.எல்.எவ் மகாநாட்டில் சம்பந்தன், மாவை, செல்வம், அனந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் ( ஈ.பி.ஆர்.எல்.எவ்) தேசிய மகாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மகாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராசா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நவசமசமாஜக்கட்சி தலைவர் விக்ரமபாகு கருணாரத்னா, வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், உட்பட ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

ஈ.பி.ஆல்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் இம்மகாநாடு நடைபெற்றது.
இதேவேளை ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் 34 வது வருட இரண்டு நாள் சிறப்பு மகாநாட்டின் முதல் நாள் மகாநாடான கட்சியின் பேராளர்கள் மகாநாடு ‘வலுவான ஐக்கியத்தை நோக்கி’ என்ற தொனிப் பொருளில் நேற்று யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தின் ‘பத்மநாபா அரங்கில்’ நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றல், அகவணக்கம் மற்றும் சட்ட மாணவி நிஷா சர்வேஸ்வரன் அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியது. 300 இற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்துக் கொண்ட இந்த மகாநாட்டில் பிரதான நிகழ்ச்சிகளுடன் கட்சியின் செயலாளர் நாயகத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்;டது. தொடர்ந்து 8 மாவட்டங்களின் அறிக்கைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்களால் வாசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவ்வறிக்கைகளின் அடிப்படையில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ச்சியாக ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் புதிய யாப்பு பேராளர்கள் மத்தியில் விவாதிக்;கப்பட்டு திருத்தங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இறுதியாக முன்னைய மத்தியகுழு சார்பில் முன்னைய செயலாளர் நாயகம் புதிய மத்திய குழுவிற்காக பரிந்துரைத்த 41 உறுப்பினர்களை மகாநாடு ஏக மனதாக ஏற்றுக் கொண்டதுடன் புதிய மத்திய குழு மீண்டும் சுரேஷ்.க.பிறேமச்சந்திரன் அவர்களை பலத்த கரகோசத்துடன் ஏக கட்சியின் தலைவராக மனதாக தெரிவு செய்தனர்.
புதிய தலைவர் 9 பேர் கொண்ட அரசியற் பீடத்திற்கு 7 உறுப்பினர்களை தெரிவு செய்ததுடன் எஞ்சிய இருவரையும் அடுத்த மத்திய குழு கூட்டத்தில் தெரிவு செய்து அறிவிப்பதாக தெரிவித்தார்.


உப தலைவராக மட்டகளப்பு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம், செயலாளராக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், துனைச் செயலாளராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் மற்றும் பொருளாளராக மன்னார் நகர சபை உறுப்பினர் இரத்தினசிங்கம் (குமரேஸ்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு மகாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் மாலை 5.30 மணியளவில் மகாநாடு இனிதே நிறைவு பெற்றது.
EPRLF
http://www.jvpnews.com/srilanka/76800.html

Geen opmerkingen:

Een reactie posten