பொலிஸ் உத்தியோகத்தர்கள் 22 பேர் அதிரடியாக இடமாற்றம்- பிரதேச அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளினால் அரசாங்கத்திற்கு அபகீர்த்தி
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 03:18.57 AM GMT ]
தெரணியகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அனைவருக்கும் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெரணியகல பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைகள், பாலியல் வன்முறைகள், கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட காரணத்தினால் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சகலருக்கும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சபரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் பெரேரா இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட தெரணியகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தவிர்ந்த ஏனைய அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 22 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரதேச அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளினால் அரசாங்கத்திற்கு அபகீர்த்தி – மைத்திரிபால சிறிசேன
பிரதேச அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளினால் அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழல், பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, போதைப் பொருள் வர்த்தகம், கப்பம் கோரல், கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் பிரதேச அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனர்.இதனால் அரசாங்கத்திற்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபடும் பிரதேச அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டை ஆட்சி செய்யும் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற ரீதியில் நிகழ்வுகளில் பங்கேற்கும் போது எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலனறுவை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் குண்டுகள் கண்டுபிடிப்பு! விடுதலைப்புலிகள் ஒளித்து வைத்தவை என்று சந்தேகம்
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 04:17.17 AM GMT ]
புத்தளத்தை அண்மித்த பாலாவிய பகுதியில் இருந்து ஐந்து குண்டுகளை பாதுகாப்புத் தரப்பினர் கண்டெடுத்துள்ளனர்.
பாலாவிய பிரதேசத்தின் தேக்குமரத்தோப்பு ஒன்றுக்குள் இருந்தே இந்த குண்டுகள் ஐந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தேக்கு மரங்களை நடுவதற்காக குழிகளைத் தோண்டிக் கொண்டிருந்த ஒருவரே முதலில் இவற்றைக் கண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.
அதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார், பொலித்தீன் உறையொன்றினால் சுற்றப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருந்த ஐந்து குண்டுகளையும் கைப்பற்றி, செயலிழக்கச் செய்துள்ளனர்.
இந்தக் குண்டுகள் முன்பு இப்பகுதியில் மறைந்து வாழ்ந்த விடுதலைப் புலி உறுப்பினர்களால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten