தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 17 juli 2013

இந்தியாவின் தலையீட்டால் மௌனமாகிய அரசின் அடிவருடிகள்- மாகாண சபை முறைமையை முற்றாக ஒழிக்கவும்: மாநாயக்க தேரர்!!

வீதி விபத்துக்களால் கடந்த வருடம் 2444 பேர் மரணம்- போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைது
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 10:32.48 AM GMT ]
இலங்கையில் கடந்த வருடத்தில் வீதி விபத்துக்களில் சிக்கி பாடசாலை பிள்ளைகள் உட்பட 2,444 பேர் கொல்லப்பட்டனர் என பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்தார்.
தனியார் போக்குவரத்து அமைச்சு, விபத்துக்களை தடுப்பது தொடர்பில் தனியார் பஸ் தொழிலில் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கில் உரையாற்றும் போதே பொலிஸ் மா அதிபர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2012 ஆம் ஆண்டில், 42, 145 வீதி விபத்துகள் நடந்துள்ளன. 320 பேர் தனியார் பஸ் விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர். மேற்கு மாகாணத்தில் மட்டும் 100 பேர் விபத்துக்களில் இறந்துள்ளனர்.
வீதி விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சாரதிகளுக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்கி, சராதி அனுமதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ்களில் உள்ள தொழிற்நுட்ப பிரச்சினைகளை கண்டறிய முழுமையான ஆய்வுகளை நடத்தப்பட உள்ளது. இவற்றை போக்குவரத்து பொலிஸாரும், தேசிய போக்குவரத்து ஆணையாளர் நாயகமும் மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் பஸ்களுக்கு இடையிலான போட்டி, சாரதிகளின் கவனக்குறைவு, அதிகமாக வாகனத்தை செலுத்துவது போன்ற வீதி விபத்துக்கள் ஏற்பட முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.
வாகனங்களை ஓட்டும் போது, செல்லிடப் பேசிகளில் பேசுவது போன்ற காரணங்களினாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன என தெரிவித்தார்.
போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைது
போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் இருவர், வெல்லம்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.
மிரிஹான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரொஷான்  ராஜபக்ஸவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்று முன்தினம் இரவு சிவில் உடையில் சென்ற அதிகாரிகள் களனிமுல்லை பிரதேசத்தில் வைத்து இரண்டு மதுவரி திணைக்கள அதிகாரிகளை கைது செய்துள்ளனர்.
கெஸ்பேவ, கிரிந்திவல மதுவரி திணைக்கள அலுவலங்களில் பணிப்புரிந்து வரும் இவர்கள், அங்கொட மற்றும் கணேமுல்லை பகுதிகளை சேர்ந்த அதிகாரிகள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஹெரோயின் போதைப் பொருள் தேவைப்படுகிறது என்று, தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த அதிகாரிகளுடன் பேசிய பின்னர், அவர்களில் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளை களனிமுல்லை பிரதேசத்தில் எடுத்து வந்த போது, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர், மற்றைய அதிகாரியும் கைதுசெய்யப்பட்டார். சந்தேகநபர்களிடம் இருந்து 1.85 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன், வீட்டை சோதனையிட்ட போது, கஞ்சாவும் மீட்கப்பட்டது என மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியாவின் தலையீட்டால் மௌனமாகிய அரசின் அடிவருடிகள்- மாகாண சபை முறைமையை முற்றாக ஒழிக்கவும்: மாநாயக்க தேரர்
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 10:51.15 AM GMT ]
13வது திருத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமையை இரத்துச் செய்ய வேண்டும் என்று கடுமையாக கோஷமிட்டு வந்த, ராஜபக்ஷ அரசின் அடிவருடிகள் இந்தியாவின் தலையீட்டை அடுத்து மௌனித்து போய்வுள்ளனர் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
மாகாண சபைகளின் அதிகாரங்களில் எந்த மாற்றங்களை செய்யாது, 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில், வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது எமக்கு கிடைத்த வெற்றியாகும்.
இந்நிலையில் 13 ஆவது திருத்தத்துடன் வடக்குத் தேர்தல் நடத்தப்பட்டால் நாடு பிளவுபடும், அது ஈழத்திற்கு வழிவகுக்கும் என கோஷமிட்டு வந்த மகிந்த அரசின் அடிவருடிகள் தற்போது வாயடைத்து போயுள்ளனர்.
இந்திய அதிகாரிகள், இலங்கை விஜயம் செய்து பேசி விட்டு போன பின்னர், இந்த அடிவருடிகளின் செயற்பாடுகள் செயலிழந்து போய்விட்டன.
அதேவளை அரச அதிகாரிகள் சகலரும் தற்போது, அரசியல் பேச தொடங்கி விட்டனர். அந்த வகையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
உண்மையில் இது சிறந்த விடயம் என்ற போதிலும், எதிர்வரும் பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு, பிரித்தானியா மற்றும் உலக நாடுகளின் அழுத்ததங்கள் காரணமாக இப்படியான நாடகங்கள் நடத்தப்படுகின்றன என தெரிவித்தார்.
மாகாண சபை முறையை முற்றாக ஒழிக்கவும்- மாநாயக்கர்கள்
இலங்கையில் மாகாண சபை முறைமையில், முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்கர்கள் தெரிவித்தனர்.
அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மாநாயக்க தேரர்களை இன்று சந்தித்த போதே அவர்கள் இதனை கூறினர்.
அஸ்கிரிய பீட மாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் தெரிவிக்கையில்,
மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது. அப்படி வழங்கினால் நாடு துண்டுகளாக பிளவுப்படும். இந்த பிரச்சினையில் இந்தியாவுக்கோ, வேறு எந்த நாட்டுக்கோ பயப்பட வேண்டிய தேவையில்லை.
1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை .இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை இரத்துச் செய்ய வேண்டும். மாகாண சபை பிரச்சினைக்கு காரணமானவர் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன.
அன்று மாநாயக்க தேரர்கள் அதனை எதிர்த்தனர். அப்போது, அரசியல் பலத்தை பலப்படுத்தி கொள்ள வேண்டிய தேவை காரணமாக இந்தியாவுடன் இணைந்து ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு மாகாண சபைகளை ஏற்படுத்தினார்.
அன்று பலர் அதை எதிர்க்கவில்லை. மக்களிடம் தவறு இருக்கிறது. இன்று பிரச்சினை அதிகரித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை கொடுத்து விட்டால், மத்திய அரசிடம் என்ன அதிகாரம் இருக்கும். அவரரவர் தமது அரசியல் பலத்தை பலப்படுத்தி கொள்ளவே இவற்றை செய்கின்றனர். நான் எந்த கட்சியுடனும் இல்லை. எந்த அரசியலும் செய்ய போவதுமில்லை.
மாகாண சபைகளை ஒழித்து விட்டு, ஒற்றையாட்சியான நாட்டை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதேவேளை இங்கு கருத்து தெரிவித்த மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர்,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை, விருப்பு வாக்கு முறை, மாகாண சபை முறை ஆகியவற்றை முற்றாக இரத்துச் செய்ய வேண்டும். இதற்கான சகலரும் ஒன்றிணைய வேண்டும்.
மாகாண சபை முறையில் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்கள் இருந்தால், அதனை நீக்க வேண்டும். நாட்டில் அரசியல் ஸ்தாபனங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம்.
மக்களுக்கு சேவைகள் வழங்கப்படுவதில்லை. அவர்கள் தமது வேலைகளை மட்டும் செய்து கொள்கின்றனர். இதனால் மாகாண சபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடு என கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten