[ புதன்கிழமை, 17 யூலை 2013, 01:36.16 AM GMT ] [ விகடன் ]
ஆனால், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத சிறிய வகைப் படகுகள் மூலம்தான் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தமது உயிரைப் பணயம் வைத்துஅவுஸ்திரேலியாவுக்குச் செல்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் இவ்வாறு அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு, நடுக்கடலில் தத்தளித்து இறந்துள்ளனர்.
இப்படி ஓர் அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரம் சொல்கிறார் புழல் அகதிமுகாம் வாசி ஒருவர்.
இலங்கை அகதிகள் இப்படி உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பயணம் மேற்கொள்ள என்ன காரணம்? அவர்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள புழல் அகதிகள் முகாமுக்கு இரகசிய பயணம் மேற்கொண்டிருந்தோம்.
காவங்கரை சிக்னலில் இருந்து உள்நோக்கிச் சென்றால் வருகிறது, புழல் கேம்ப் கேட் நம்பர் ஒன். அதில் இருந்து சுமார் 10 மீட்டருக்குள் குடியிருப்புப் பகுதிகள் ஆரம்பிக்கின்றன. மிகமிக நெருக்கமாக வீடுகள்.
பிரதான வாயிலில் இருந்து சுமார் 100 மீட்டரில் மிகப் பெரிய கழிவுநீர் பள்ளம் ஒன்று மழைநீர் தேங்கிய நிலையில், குப்பைகளின் கூடாரமாக காட்சியளிக்கிறது. அது கொசுக்களின் மிகச்சிறந்த வாழ்விடம்.
அந்தப் பள்ளத்தில் இருந்து சுமார் 5 மீட்டரிலேயே பொதுக் குளியல் பிரதேசம். அங்கேதான் ஆண்களும் பெண்களும் குளிக்க வேண்டும். நாங்கள் சென்றபோது, இரு ஆண்களும் இரு பெண்களும் குளித்துக்கொண்டிருந்தனர்.
குளித்துக் கொண்டிருந்த பெண்களைத் கடந்துதான் அந்த கேட் நம்பர் ஒன்-னில் வருபவர்கள் செல்ல வேண்டும். ஆண்கள் முன் குளிக்க வேண்டி இருப்பதால், முகாமில் உள்ள பெண்கள் தர்மசங்கடத்தை எதிர்கொள்கின்றனர்.
சுமார் 450 குடும்பங்கள், அதாவது 2,400 பேர் வசிக்கும் புழல் அகதி முகாமில் குளிக்கும் இடங்கள் நான்கு. அதிலும் மூன்று குளியல் இடங்கள் முழுவதும் திறந்த நிலையில் இருக்க... ஒன்று மட்டும் ஒருபகுதி மூடிய நிலையில்!
முகாமில் மொத்தம் 30 கழிவறைகள்தான் உள்ளன. அதில் உபயோகிக்கக் கூடிய நிலையில் இருப்பது 20. அதாவது, 120 பேருக்கு ஒரு கழிவறை. ஆண்களில் பெரும்பாலானோர் அருகில் உள்ள காட்டுப் பகுதியில்தான் மலம் கழிக்கின்றனர். பெண்கள் வேறுவழியில்லாமல், கழிவறைகளை நம்பி உள்ளனர். நாங்கள் சென்றிருந்த அதிகாலை வேளை, ஒவ்வொரு கழிவறைகள் முன்பும் குறைந்தது 20 பெண்கள் காத்திருந்தனர்.
குளிக்கும் இடத்தில் இருந்து 5 மீட்டரிலேயே பிரதான குடியிருப்புப் பகுதிகள் ஆரம்பிக்கின்றன. அரசாங்கம் கொடுத்த வீடு 10-க்கு 10 அடி பரப்பளவு மட்டுமே கொண்டது. இன்னும் கொஞ்சம் இடம் வேண்டும் என்றால், அகதிகள் தங்கள் சொந்த செலவில் நீட்டிக்கொள்ளலாம்.
வீட்டுக் கூரையின் உயரம் சுமார் 6 அடிதான். கொஞ்சம் உயரமானவர் என்றால், குனிந்துதான் வீட்டுக்குள் நுழைய வேண்டும். ஆஸ்பெட்டாஸ் கூரை. காற்றோட்டத்துக்கு என சிறிய இடைவெளிகூட இல்லை. ஃபேன் போட்டால் அது தலையைப் பதம்பார்த்துவிடும. புழுக்கம் வாட்டுகிறது. சமையல் அறை வசதிகள் செய்து தரப்படவில்லை.
ஒவ்வொரு குடும்பத்திலும் சுமார் ஐந்து பேர் உள்ளனர். 'இந்த சிறிய வீட்டில் நாங்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை தாம்பத்ய வாழ்க்கைதான். நிம்மதியான தாம்பத்திய வாழ்க்கை அகதிகளுக்கு இல்லை என்கிறார் சிவம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
புழல் முகாமில் குடிநீர் வசதிகளும் செய்து தரவில்லை. குடிநீருக்கான திட்டமும் இல்லை. வெளியில் இருந்துதான் குடிநீர் வாங்க வேண்டும். நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு ஒரு நாளுக்கு ஒரு கேன் வீதம் வாங்கினால், ஒரு மாதத்துக்கு சுமார் 750 ரூபாய் செலவாகிறது. இது முகாமில் உள்ள குடும்பத் தலைவிக்கு ஒரு மாதத்துக்கு அரசாங்கம் கொடுக்கும் உதவிப் பணத்தைவிட அதிகம்.
கியூ பிராஞ்ச் என்பது அகதிகளைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட உளவு அமைப்பு. அதில் அங்கம் வகிப்பவர்களைப் பார்த்து அகதிகள் பயப்படுகிறார்கள். இந்த கியூ பிராஞ்ச் அதிகாரிகளால் பாதிக்கப்படாத அகதிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
நீங்கள் அகதிகள். எமக்குப் பணிந்துதான் போக வேண்டும்’ என்ற உளவியல் தாக்குதல் அவர்கள் மீது தொடுக்கப்படுவதை உணர முடிகிறது. 30 வருடங்களாக இந்தியாவில் இருக்கும் அகதிகள்கூட, அவர்களின் சொந்தப் பெயரில் ஒரு சிம் கார்டுகூட வாங்க முடியாது என்பது வேதனை.
ஈழத்தில் உள்ள முள்வேலி முகாம்களைவிட, இவை தரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன என்பது முகாம் வாழ் மக்களின் கருத்து.
எமது அகதி அடையாளத்தை இல்லாமல் செய்யுங்கள். எங்களையும் சக மனிதர்களாக மதியுங்கள். ஒரு கணம் நாடற்றவர்களாக இருந்து பாருங்கள். அதன் உளவியல் தாக்கம் அப்போதுதான் புரியும் என்கின்றனர் ஈழ அகதிகள்.
கேட்கத்தான் யாருமே இல்லை!
சிங்கள பத்திரிகையாளர் ஒருவர் நான்காம் மாடிக்கு விசாரணைக்காக அழைப்பு
[ புதன்கிழமை, 17 யூலை 2013, 12:48.29 AM GMT ]
ஜனரல“ என்ற சிங்கள பத்திரிகையின் ஆசிரியரான சந்தன சிறிமல்வத்தை என்பவருக்கே இலங்கை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளனர்.
அவரது அலுவலகத்துக்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று புதன்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவின் நான்காவது மாடிக்குச் சமூகமளிக்க வேண்டுமென தெரிவித்துச் சென்றுள்ளனர்.
வரட்சி மற்றும் வறுமை காரணமாக கடந்த வருடம் 13 விவசாயிகள் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி ஒன்றினை வெளியிட்டமை தொடர்பிலேயே இவர் விசாரணைக்கு உடபடுத்தப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten