தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 november 2014

ராஜபக்ச பிரபாகரனை போராளியாக மட்டுமல்ல, ஒரு மீனவனாகவும் பார்க்கிறார்: திருமாவளவன்!



நுவரெலியாவி​ல் கடும் குளிர்- கொட்டகலை சுரங்கப்பாதையினூடாக பயணம் செய்ய முடியும்
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 05:29.12 AM GMT ]
கடந்த வருடங்களுக்கு பின் நுவரெலியா மாவட்டத்திற்கு இந்த மாதம் கடும் குளிர் நிலைமை ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிறி தெரிவிக்கின்றார்.
பகல் வேளையில் வெயிலும் காலையிலும் இரவிலும் கடும் குளிர் இருப்பதாகவும் நுவரெலியாவில் 11 செல்சியஸ், ஹோட்டன் தென்னவில் செல்சியஸ் 8 ஆக குறைந்திருப்பதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவிக்கின்றார்.
இந்த காலநிலை சுற்றுலா பயணிகளுக்கு பொருத்தமான காலநிலையாக இருப்பதாகவும் அதனால் சுற்றுலா பயணிகளை நுவரெலியாவிற்கு வருகை தருமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிறி மேலும் தெரிவிக்கின்றார்.
கொட்டகலை இருவழி சுரங்கப்பாதையினூடாக சிறிது காலங்களில் பயணம் செய்ய முடியும்
ஹட்டன் - நுவரெலியா ஏ-7 பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் 95 வீதம் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வீதியில் அமைந்திருக்கும் கொட்டகலை - பத்தனை புகையிரத பாதையின் அடிப்பாகத்தில் ஒரு வழி வாகனப் போக்குவரத்துக்கான சுரங்கமொன்று உள்ளதுடன்
இச்சுரங்கப்பாதையினுடாக பெரிய வாகனங்ளை செலுத்துவது கடினம் என்பதால் இச்சுரங்கத்துக்கு அருகில் மற்றுமொரு சுரங்கம் மூன்று மாத காலமாக அகழப்பட்டு வந்தது.
அகழப்பட்டு வந்த இந்த சுரங்கம் 07.11.2014 அன்றைய தினம் முழுமையாக அகழப்பட்டு விட்டன.
இன்னும் சிறிது காலங்களில் இதன் பணிகள் முடிவுற்று இந்த புதிய இருவழி சுரங்கப்பாதையினூடாக பயணம் செய்ய முடியும்.
தற்போது அகழப்பட்டு வந்த சுரங்கமானது இருவழிப் போக்குவரத்துக்கு உதவுவதுடன் பாரிய வாகனங்களும் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfuz.html

கேணல் பரிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு வீர வணக்க நாள் இன்று!
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 05:47.25 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் பரிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
நடராஜா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட தளபதி பரிதி 1983ம் ஆண்டு தன்னை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்.
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாம் பாசறைப் பிரிவில் பயிற்சியை பெற்றுக் கொண்ட வீரத்தளபதிக்கு தலைமைபீடம் சூட்டிய பெயர் றீகன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளான பிரிகேடியர் பானு, லெப் கேணல் குமரப்பா, ரஞ்சன் லாலா மற்றும் வாசு போன்றோருடன் இணைந்து போரியல் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் தமிழீழம் திரும்பினார் தளபதி கேணல் பரிதி.
களம்பல கண்ட நாயகன்
தமிழீழம் திரும்பிய தளபதி கேணல் பரிதி மன்னார், யாழ்ப்பாணம், வன்னி என்று தமிழீழத்தின் முக்கியமான போர்முனைகளிலெல்லாம் வீரத்தோடும் விடுதலை வேட்கையோடும் களம்பல கண்டார். இவரது போரிடும் ஆற்றல் இவரை குறுகிய காலத்துக்குள்ளேயே மத்தியநிலை தளபதியாக உயர்த்தியது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புலம்பெயர் களம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை உணர்ந்து 2003ம் ஆண்டு முதல் பரிதி என்ற பெயருடன் பிரான்ஸ் நாட்டுக்கான அரசியல் மற்றும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தால் நியமிக்கப்பட்டார்.
அன்றிலிருந்து, புலம்பெயர் களத்திலும் ஒரு தளபதியாக, முழுநேர தேசியச் செயற்பாட்டாளனாக தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்துக்காகப் பணியாற்றிய தளபதி கேணல் பரிதி அவர்கள், தனது இறுதி மூச்சு வரை அந்த இலட்சியத்துக்காகவே போராடி, அந்த இலட்சியப் பணியில் ஈடுபட்டிருந்த போதே சிங்கள புலனாய்வாளர்களின் ஒட்டுக்குழுவால் கோழைத்தனமாகவும், கோரத்தனமான முறையிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலின் பின்னணி என்ன?
2009 மே மாதம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினதும் தமிழ் மக்களினும் கவசங்களாக விளங்கிய ஆயதங்களை மௌனமாக்குவதற்கான சிங்கள அரசின் சூழ்சித் திட்டம் 2000ம் ஆண்டிலேயே தீட்டப்பட்டிருந்தது.
அது யாதெனில், தமிழர்களுடைய சுதந்திர தாகத்தை அழிக்க வேண்டுமானால், தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமானால், தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதன் மூலம் படுகொலை செய்யக் கூடிய தளபதிகளை படுகொலை செய்வது, ஏனைய முக்கிய உறுப்பினர்களின் நடமாட்டங்களை முடக்குவது. அதன் அடிப்படையிலேயே, சிறீலங்கா படைத்துறையில் ஆழ ஊடுருவும் படையணி உருவாக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும் விமானப் படைத்தளபதியாகவும் விளங்கிய கேணல் சங்கர் அவர்களை படுகொலை செய்ததுடன் 2001 ஆண்டு செப்டெம்பர் 26ம் திகதி ஆரம்பமான ஆழ ஊடுருவும் படையணியின் நரபலி வேட்டை, 2008ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை தளபதிகளில் முதன்மையானவரான கேணல் சாள்ஸ் அவர்களை மன்னார் மாவட்டத்தில் இலக்கு வைத்ததை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பின் உச்சக் கட்டம் தாண்டவமாடியதோடு முடிவுக்கு வந்தது.
முள்ளிவாய்க்காலோடு தமிழீழ விடுதலைப் போராட்டம் முற்றுப்பெற்றுப் போகும் என எண்ணிய சிங்களத்துக்கு புலம்பெயர் தமிழர்களின் எழுச்சி பெரும் பூதாகாரமான ஆபத்தாக உருவெடுத்தது.
இதன் பின்னணியில் யார், யார் உள்ளார்கள் என்று உளவுப் பணியை முடக்கி விட்ட சிங்களத்துக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர் தளபதி பரிதி என்பது தெரியவந்தது.
ஆதலால், புலம்பெயர் தேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆழ ஊடுருவும் படையணிக்கு இணையான படுகொலை படலத்தின் முதல் இலக்காக தளபதி பரிதியை இலக்கு வைப்பதனூடாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை அழிக்கலாம் அல்லது முடக்கலாம் என்று கணக்கு போட்டது சிங்கள தேசம்.
தளபதி பரிதி இலக்கு வைக்கப்பட்டமைக்கான காரணம் என்ன?
படுகொலை செய்யப்பட்ட தளபதி கேணல் பரிதி, முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்பட்ட பின்னரும் ஓர்மத்தோடும் விடுதலை வேட்கையோடும் வெளிப்படையாக இயங்கிய மூத்த தளபதி. உயிர் அச்சுறுத்தல்கள் எத்தனை வந்த போதும், எதற்கும் அடிபணியாது, அனைத்தையும் எதிர்த்து நின்று விடுதலைக்காக மூழுமூச்சுடன் பணியாற்றினார்.
அமைதியான சுபாவமுடைய தளபதி பரிதி அவர்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பெரும் பெறுமதியும், அதிக கனதியும் இருந்தது.
ஆதலால், இளையோர் தொடக்கம் முதியோர் வரை பரிதி அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்தது மட்டுமன்றி, வீரத்தளபதிக்கு பின்னால் அணிதிரண்டனர்.
இது, சிங்கள தேசத்துக்கும், அவர்களின் கைக்கூலிகளுக்கும் அச்சத்தை உண்டுபண்ணியது. ஏனெனில், தளபதி பரிதி அவர்களின் அர்ப்பணிப்பும், தலைமைத்துவமும் தமிழீழ விடுதலையை அடைவதற்கான படிக்கற்களை விரைவுபடுத்தின.
ஆகவே, தளபதி பரிதி அவர்களை படுகொலை செய்வதனூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பேரிழப்பையும் பெருவெற்றிடத்தையும் உருவாக்குவதே சிங்கள அரச பயங்கரவாதத்தின் திட்டம்.
அத்துடன், புலம்பெயர் தமிழர் தேசத்துக்கு எதிரான சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் உளவியல் போரில் இது முக்கியமானதொரு நடவடிக்கை.
இதனூடாக, புலம்பெயர் தேசங்களில் வாழும் ஏனைய செய்ற்பாட்டாளர்களுக்கு அச்சத்தையும் அழுத்தத்தையும் உண்டுபண்ணுவதானூடாக அவர்களினுடைய செயற்பாடுகளை முடக்குவது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முக்கிய நிகழ்சி நிரலில் ஒன்று.
அத்துடன், தமிழர் தரப்புகளுக்கிடையில் பிளவுகளை மேலும் தீவிரப்படுத்துவதனூடாகத் தொடரும் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மேலும் நெருக்கடிக்குட் தள்ளுவதும் முக்கிய நிகழச்சி நிரலிலுள்ள விடயம்.
அத்தகைய விடயங்கள் அனைத்தையும், தளபதி பரிதி அவர்களைப் படுகொலை செய்வதனூடாக முன்னெடுக்கலாம் என்ற அடிப்டையிலேயே, தளபதி பரிதியை எல்லை கடந்த சிங்கள அரச பயங்கரவாதம் முதலாவது இரையாக்கியது. இதிலிருந்தே, தளபதி கேணல் பரிதி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பு தெட்டத்தெளிவாகிறது.
தளபதி பரிதிக்காக தமிழ்மக்கள் செய்ய வேண்டியது என்ன?
தளபதி கேணல் பரிதி அவர்களின் இழப்பென்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு, குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய போராட்ட வழிமுறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
இவரது இழப்பால், தமிழர் தேசம் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளது. ஆனால், தமிழீழ விடுதலைக்காக இரத்தம் சிந்தி தன்னுயிரை அர்ப்பணித்த தளபதி கேணல் பரிதியின் வீரச்சாவுக்கு கண்ணீர் சிந்துவதும் கவலையடைவதும் மட்டும் போதாது.
இத்தருணத்தில், தளபதி கேணல் பரிதி எந்த உயரிய இலட்சியத்துக்காகத் தன்னை அர்ப்பணித்து, அதற்காகவே தனது இறுதி மூச்சுவரை வாழ்ந்தாரோ, அந்த இலட்சியப் பயணம் இலக்கினை அடையும் வரை தளராமல் போராடுவதே ஒவ்வொரு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களதும், உணர்வாளர்களதும், மற்றும் தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழர்களினதும் வராலற்றுப் பொறுப்பும் தார்மீகக் கடமையுமாகும்.
இதன் ஊடாகவே, சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலை முறியடிப்பதோடு, சுதந்திர தமிழீழம் என்ற உயரிய இலக்கை அடையலாம். தளபதி கேணல் பரிதி அவர்களின் வீரச்சாவு என்பது, அடுத்த கட்ட போராட்டத்தின் திருப்புமுனை சக்தியாக உருவாக்கம் பெற்றுள்ள புலம்பெயர் களத்தில் தமிழர்கள் எழுச்சி கொள்ள வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டியுள்ளது.
இன்றே போராட புறப்படு தமிழா! இல்லை நாளையென்பது நமக்கில்லை.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfu0.html

மண்சரிவினால் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளும், உறவினர்களிடம் ஒப்படைப்பு!
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 06:06.49 AM GMT ]
கொஸ்லாந்தை, மீரியபெத்தயில் மண்சரிவினால் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளும், நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய மூன்று பிள்ளைகளும் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோரை இழந்த மூன்று சிறுவர்கள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
மண்சரிவினால் இடம்பெயர்ந்துள்ள பிள்ளைகளை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான செயற்பாடுகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்பொருட்டு விசேட உத்தியோகத்தர்கள் குழுவொன்று இடம்பெயர் முகாம்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, மீரியபெத்தயில் மண்சரிவில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சீரான வானிலை நிலவுமிடத்து, மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியுமென மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.
பிரதேச மக்களின் தகவல்களுக்கு அமைய, மீட்புப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளில் 11 சடலங்களும், மேலும் சில உடற்பாகங்களும் மீட்கப்பட்டதாக மேஜர் ஜெனரல் மனோ பெரேரா மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfu1.html
ராஜபக்ச பிரபாகரனை போராளியாக மட்டுமல்ல, ஒரு மீனவனாகவும் பார்க்கிறார்: திருமாவளவன்
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 06:12.53 AM GMT ]
தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் எழுவார்கள் என்ற பயத்தால் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தமிழக மீனவர்களை மகிந்த ராஜபக்ச அச்சுறுத்தியுள்ளார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் அதற்கு ராஜபக்ச பொறுப்பல்ல, நரேந்திர மோடிதான் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு உயர் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை மீட்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்,
‘‘இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்ப்பை கொடுத்திருக்கிறது. இந்த தீர்ப்ப்புக்கு எதிராக தமிழ்நாடே கொதித்து எழுந்திருக்க வேண்டும். ஆனால், மீனவ மக்களும், கடலோர மக்களுமே தீர்ப்புக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
5 மீனவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்ன? ஆதாரத்தின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டதா? போராட்ட எழுச்சியின் மூலமே நம் மீனவர்களை காக்க முடியும். அப்பாவி மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் ராஜபக்ச அரசுக்கு இன்னும் விடுதலை புலிகளின் மீதான அச்சம் இருப்பதை காட்டுகிறது.
ராஜபக்ச பிரபாகரனை போராளியாக மட்டுமல்ல, ஒரு மீனவனாகவும் பார்க்கிறார். மீனவர்களின் உதவியுடன் மீண்டும் விடுதலைப் புலிகள் எழுவார்கள் என்ற பயம் அவருக்கு உள்ளது. எனவேதான் இந்த தீர்ப்பின் மூலம் நம் மீனவர்களை அச்சுறுத்தியுள்ளார்.
மீனவர்கள் மட்டுமல்ல, துணி வியாபாரம் செய்ய இலங்கை சென்றவர்கள், சிறு வியாபாரிகள் என பலர் மீதும் இலங்கை அரசு போதை பொருள் கடத்தியதாக பொய் வழக்கு போட்டிருக்கிறது.
இவ்வாறு வழக்கில் சிக்கிய பலர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை சிறைகளில் இருந்து வருகின்றனர். தூக்கு தண்டனை கைதிகளுடன் இவர்களையும் மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு சர்வதேச சட்டத்தில் வழியுள்ளது. ஆனால் இந்திய அரசு இதனை கண்டு கொள்ளவில்லை. விசாரணையின்றி சிறையில் வாடும் மீனவர்களை விடுவிப்பதற்கான கோப்புகள் தமிழக தலைமை செயலகத்தில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.
தூக்கு தண்டனை விவகாரத்தில் மேல்முறையீடு மட்டும் போதாது. உடனடியாக ராஜபக்சவை டெல்லிக்கு வரவழைத்து, மீனவர்களை விடுவிக்க சொல்ல வேண்டும். காந்தியை தேச தந்தையாக கொண்ட நாட்டில் அவரது கொள்கைகள் கடைபிடிக்கபடுவதில்லை.
காந்தியின் கொள்கைக்கு நேர்மாறானவர் சர்தார் வல்லபாய் படேல். அவருக்கு சிலை எடுக்க நினைக்கும் மோடி அரசு எப்படி காந்தியின் கொள்கைகளை காப்பாற்றும். சிலைக்கு செலவு செய்யும் தொகையில் ஒரு சிறு தொகையினை செலவு செய்து நல்ல வழக்கறிஞரை இந்த வழக்கில் வாதாட வைத்திருக்கலாம்.
ஆனால் மோடி அரசு அதனை செய்யவில்லை. எனவே தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் அதற்கு ராஜபக்ச பொறுப்பல்ல, நரேந்திர மோடிதான் பொறுப்பு'' என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfu2.html

Geen opmerkingen:

Een reactie posten