தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 november 2014

எங்களிடமும் அரசாங்கம் பற்றிய கோப்புகள் இருக்கின்றன: சம்பிக்க ரணவக்க-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உதவி

மைத்திரியா, மகிந்தவா? மக்கள் கருத்தென்ன? அறிவகத்தில் கலந்துரையாடல்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 11:48.46 AM GMT ]
கூட்டமைப்பின் பணிமனையான கிளிநொச்சி அறிவகத்தில் இன்று தமிழ் தேசிய கட்சியின் கிளிநொச்சி  மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள், நிர்வாகிகள், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கிளிநொச்சி மாவட்ட மக்களின் கருத்துக்கள் எவ்வாறாக இருக்கின்றது என்பது தொடர்பாக மாவட்டத்தில் பல்வேறு நிலைகளிலும் கட்சி பணியாற்றுகின்ற பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டது.
தற்போது இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு இலங்கை அரசியல் சூடு பிடித்திருக்கின்றது. தென்னிலங்கையில் இரண்டு பெரும் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் பலப் பரீட்சையில் இறங்கியுள்ளன.
ஆளும் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து முக்கிய அரசியல் தலைவர்கள் பொது எதிரணியில் இணைந்து பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனா அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆளும் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளராக மூன்றாவது தடவை ஜனாதிபதி ஆவதற்காக மகிந்த ராஜபக்ச களம் இறங்கியுள்ள நிலையில் பல்வேறு கருத்துக் கணிப்புக்கள் ஊடக விவாதங்கள் என்பன பரவலாக இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் கருத்தும் நிலைப்பாடும் எவ்வாறு அமையப் போகின்றது என சர்வதேச இராஜதந்திரிகளும் அவதானிகளும் இலங்கை ஜனாதிபதி தேர்தலை நோக்கி தங்கள் கரிசனையை திருப்பியுள்ளனர்.
இந்த ஜனாதிபதி தேர்தல் தமிழர்களை மட்டுமல்ல சிங்கள மக்களை பொறுத்தமட்டிலும் மிக முக்கியமான தேர்தலாக எதிர்கொள்ளப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்குத் தமிழர்களின் தலைமைச் சக்தியாக விளங்கக்கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றி அறிய மக்களும் சிங்கள கட்சித்தரப்புகளும் ஆவலாய் உள்ளன.
இந்த நிலையில் மக்கள் கருத்துக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் பெற்று வருகின்றனர்.
இந்தவகையில் கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மக்களிடம் உள்ள கருத்துக்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்கள் தீர்மானங்களை இறுதி நேரத்தில் தெரிவிக்காது கால அவகாசத்தோடு தெரிவிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எத்தகைய நிலைப்பாட்டை எடுத்தாலும் தமிழ் மக்கள் மாற்றத்திற்கான சக்திக்கே வாக்களிப்பார்கள் எனவும் அது மைத்திரிபால சிறிசேனாவுக்கான ஆதரவாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களின் வாழ்க்கையை அடக்கு முறைக்குள் வைத்திருக்கும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை ஒழித்துக்கட்ட வேண்டுமெனவும் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் மக்கள் கருத்திருப்பதாக கூறப்பட்டது.
பொது எதிரெணி வேட்பாளரான தைத்திரிபால சிறிசேனாவோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு காத்திரமான ஒரு ஒப்பந்தந்தை தமிழர்களின் அபிலாசைகள் தொடர்பாக ஏற்படுத்திய பின் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பொது எதிரணியோடு செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தம் 31வது திருத்தச்சட்டம் பற்றிய வரையறைக்குள் இருந்தால் அது ஜனாதிபதியாக மைத்திரிபால வெல்லும் பட்சத்தில் தமிழர் உரிமைகள் 13க்குள் முடக்கப்பட கூடுமெனவும் கூறப்பட்டது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவர் வென்றாலும் அதனால் தமிழர்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப் போவதில்லை.
இது தேர்தல்களுக்கு முன்னதாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏற்படுகின்ற மாயை அதுவே இப்போதும் நடக்கின்றது. சிங்கள பேரினவாத மனோபக்குவம் வளர்க்கப்பட்டு அது கண்கள் மறைத்தபடி நிற்கின்றது.
ஆனாலும் இப்பொழுது மகிந்த ஜனாதிபதி கதிரையில் இருந்து இறக்கப்பட வேண்டிய ஒருவாராக காணப்படுகின்றார் என மக்கள் எண்ணுவதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேச மயப்பட்டுவிட்டது. இனி தீர்வு இங்கிருந்து அல்ல அது சர்வதேசத்திடமிருந்து அது ஒரு வேறுவடிவில் வரக்கூடிய சாத்தியமே அதிகம்.
எனவே இந்த ஜனாதிபதி தேர்தலில் புலம்பெயர் சமுகத்தின் கருத்தும் நிலைப்பாடும் முக்கியமானது. அதேவேளை இலங்கை தொடர்பாக பிராந்திய வல்லரசான இந்தியா மற்றும் மேற்குலக வல்லாண்மை அரசுகளின் நிலைப்பாடுகளை ஒட்டியே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானங்களும் எடுக்கப்பட வேண்டுமென மக்கள் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வேட்பாளர் வென்றாலும் தோற்றாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவாகவும் தெளிவாகவும் தங்கள் தீரமானத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மேற்படி கருத்துக்கள் மக்களிடம் நிலவுவதாக கிளிநொச்சி அறிவகத்தில் நடந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட போதும் ஒட்டுமொத்த மக்களின் ஒருமித்த கருத்துக்கள் மேலுமொரு கலந்துரையாடலில் பெறப்பட்டு வெளியிடப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZls5.html
எங்களிடமும் அரசாங்கம் பற்றிய கோப்புகள் இருக்கின்றன: சம்பிக்க ரணவக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 01:23.02 PM GMT ]
அரசாங்கத்தின் கோப்புகள் தம்மிடமும் இருப்பதாகவும் அவற்றை தாம் பகிரங்கப்படுத்த போவதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரான முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து அண்மையில் வெளியேறியவர்கள் பற்றிய கோப்புகள் தன்னிடம் இருப்பதாகவும் எனினும் தான் அவற்றை பகிரங்கப்படுத்த போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையில் சம்பிக்க ரணவக்க இதனை கூறியுள்ளார்.
பெட்ரோல் விலைகள் மூலம் நிதியமைச்சு பொதுமக்களிடம் பணத்தை கொள்ளையிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்காக பெறப்படும் வரிகள் புதிய பெருந்தெருக்களை நிர்மாணிக்கவும் அவற்றை பராமரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
முச்சக்கர வண்டி சாரதிகள், மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்கள் எரிபொருள் கட்டணங்களுடன் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்க வரிகளை செலுத்திய போதிலும் அவர்கள் அந்த நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதில்லை.
நிலக்கரி ஒப்பந்தம் தொடர்பான அரசாங்கம் எனக்கு எதிராக குற்றச்சாட்டை சுமத்தியது. அது பற்றிய தகவல்களை நான் வெளியிட்ட ஆரம்பித்த போது அரசாங்கம் அந்த குற்றச்சாட்டை விலக்கிக்கொண்டது.
எவரும் கோப்புகளை வெளியிட வேண்டியதில்லை. நாம் அவர்களை வெளியேற்றுவோம். பாரிய மெகா ஒப்பந்தங்களை செய்தவர்களை எங்களால் விட்டு விட முடியாது எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlty.html

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உதவி
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 01:24.55 PM GMT ]
யாழ்.மாவட்டத்தில் தற்போது அடைமழை பெய்து வருகின்ற நிலையில் தாழ்நிலப் பகுதிகளிலும், இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும் வசித்து வரும் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பலர் வீடுகளை விட்டு வெளியேறி கோவில்களிலும், பொது மண்டபங்களிலும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் வடமராட்சி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச்சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர்.
வடமராட்சியின் பல பகுதிகளுக்கும் இன்று விஜயம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை.சேனாதிராசா தலைமையிலான கூட்டமைப்பின் மாகாணசபை பிரதேசசபை உறுப்பினர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
பருத்தித்துறை, தும்பளை கிழக்கு பகுதிக்கும், பொலிகண்டி இடம்பெயர்ந்தோர் முகாமிற்கும், கரவெட்டி இராஜ கிராமப்பகுதிக்கும் விஜயம் மேற்கொண்ட கூட்டமைப்பினர் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்துகொண்டதுடன், உலருணவு நிவாரணப் பொதிகளையும் வழங்கினர்.
பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர்ப்பிரச்சனை, மலசலகூடப்பிரச்சனை, முதலியவற்றை உடனடியாக நிறைவேற்றுமாறு உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கப்பட்டது.
பின்னர் அண்மையில் கடலில் மீன் பிடிக்கச்சென்று காணாமற்போய், பின்னர் கரை திரும்பிய பருத்தித்துறை, சக்கோட்டையைச் சேர்ந்த 03 மீனவர்களின் வீடுகளுக்கும் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களின் கடலில் மூழ்கிய பெறுமதிமிக்க படகு மற்றும் வலைகளை மீட்டெடுக்க உதவி புரிவதாகவும் உறுதியளித்தனர்.
இவ்விஜயத்தில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை.சேனாதிராசா, வடமாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர்களான வே.சிவயோகன், பா.கஜதீபன், ச.சுகிர்தன், வல்வெட்டித்துறை நகரசபை உப தலைவர் க.சதீஸ், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் மற்றும் வடமராட்சிப்பகுதி பிரதேசசபைகள், நகரசபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்தனர்
வடமராட்சிப் பகுதியில் 1118 குடும்பங்கள் வெள்ளத்தால் இடம்பெயர்வு
யாழ்.குடாநாட்டில் கடந்த சில தினங்களாக தொடரும் கனமழையினால் வடமராட்சி வடக்குப் பகு தியில் 1118 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாம்களில் தங்வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் தமக்கு இம்முறை தீர்வு வழங்கப்படாவிட்டால் அடுத்தாண்டு மழை பெய்யக்கூடாதென வேண்டி கொடும்பாவி எரிப்போம் என மக்கள் கூறியுள்ளனர்.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலா பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தும்பளை, புனிதநகர், வியாபாரிமூலை, பொலிகண்டி, சின்னத்தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 1118 குடும்பங்களை சேர்ந்த 3700பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் செம்மின் பொதுநோக்கு மண்டபம், திருமால்புரம் பொதுநோக்கு மண்டபம், பொலிகண்டி பொதுநோக்கு மண்டபம், உதயசூரியன் பொதுநோக்கு மண்டபம் ஆகிய பொது நோக்கு மண்டபங்களில் நலன்புரி முகாம்கள் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவு போன்றவற்றை பிரதேச செயலகம் மற்றும் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோர் வழங்கியிருக்கின்றனர்.
எனினும் அவை போதுமானதாக இல்லை, என்பதுடன் மழைவெள்ளம் தேங்கியிருக்கும் பகுதிகளிலிருந்து நீர் வழிந் தோடுவதற்கான வழிவகைகளை தாங்கள் மேற்கொண்டிருப்பதாக பிரதேச செயலகம் தெரிவித்திருக்கின்றது.
இந்நிலையில் மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஒவ்வொரு வருடமும் மழை வெள்ளத்தினால் நாங்கள் பாதிக்கப்படுகின்றோம். அதேபோல் ஒவ்வொரு வருடமும் நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். ஆனால் பொறுப்பு வாய்ந்தவர்கள் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் மழையினால் வீடுகளை இழந்தும், பொருட்களை இழந்தும் இடம்பெயர்ந்து பாதிக்கப்படுகின்றோம்.
வெள்ளம் வரும்போது எம்மை வந்து பார்க்கும் அதிகாரிகளும், வெள்ளம் வந்தவுடன் கற்களையும், பாலங்களையும் கொண்டுவரும் அதிகாரிகளும் வெள்ளம் வடிந்த பின்னர்,அதனை அப்படியே கைவிட்டு செல்கிறார்கள்.
எனவே எமக்கு இந்த நிலை வேண்டாம். இதில் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்து வந்தவர்களும் உள்ளார்கள். அவர்களுக்கு பிரச்சினை வேறு. அவர்களுக்கு பாதுகாப்பான சொந்த நிலம் இருந்தும் இவ்வாறு கஸ்டப்படுகின்றார்கள்.
எனவே எமக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை பெற்றுக் கொடுக்காவிட்டால் அடுத்த ஆண்டு மழை பெய்யக் கூடாது என நாங்கள் கொடும்பாவி எரித்து பிரார்த்தனை நடத்துவோம்.
அதற்குள் எமக்கு பாதுகாப்பான வாழ்விடம் பெற்றுக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என மக்கள் கூறியிருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZltz.html

Geen opmerkingen:

Een reactie posten