தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 november 2014

புலிகளிடம் மீட்ட 2184 நகை பொதிகள் அடையாளம்! டிச.4ல் அலரிமாளிகையில் கையளிப்பு!- இராணுவத்தளபதி!

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் மீட்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங் களில் மேலும் 2184 பொதிகள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். 
அடையாளங் காணப்பட்ட 1962 உரிமையாளர்களின் தங்க ஆபரணங்களை டிசம்பர் மாதம் 4 ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் அலரி மாளிகையில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எஞ்சியுள்ள பொதிகளின் உரிமையாளர்களை தேடி அடையாளங் காணும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த இராணுவத் தளபதி, அவைகளும் உரிய முறையில் அடையாளங் காணப்பட்டு பின்னர் கையளிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு ஊடக மையத்தில் இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து  இராணுவத் தளபதி மேலும் விளக்கமளிக்கையில்:
புலிகளின் சட்டவிரோத வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் மாத்திரமன்றி ஆவணங்கள், ஆயிரக்கணக்கான கால்நடைகள், பூனை மற்றும் நாய்க்குட்டிகளையும் கூட மீட்டெடுத்து முடியுமான அளவு அடையாளங் கண்டு உரிமையாளர்களிடம் கையளித்தோம்.
 இவ்வாறு மீட்டெடுக்கப்பட்டவைகளில் சில பொதிகளில் உரிமையாளர்களின் விபரங்கள், பற்றுச்சீட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தன.  என்றாலும், உரிமையாளர்களை அடையாளங் காண்பது என்பது மிகவும் இலகுவான ஒன்றல்ல. என்றாலும் வீடு வீடாக சென்று விபரங்களை திரட்டியும் பொருட்களை காண்பித்தும் அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொண்டோம்.
இதன் முதற் கட்டமாக வட மாகாணத்தைச் சேர்ந்த 25 பேருக்கு தங்களது பெறுமதி வாய்ந்த நகைகளை கடந்த ஒக்டோபர் மாதம் 12ம் திகதி கிளிநொச்சியில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர் வமாக கையளித்தார்.
இவ்வாறு தற்பொழுது அடையாளங் காணப்பட்ட 1962 உரிமையாளர்களுக்கே அடுத்த மாதம் தங்க நகைகள் கையளிக்கப்படவுள்ளன.
இவர்களில் மன்னாரைச் சேர்ந்த 223 பேரும், வவுனியா 319, கிளிநொச்சி 1152, முல்லைத்தீவு 186, யாழ்ப்பாணம் 45 பேரும் அடங்குவர்.
இராணுவத்தினர் தங்க ஆபரணங்களை அடையாளங் காண்பதற்காக தாய் ஒருவரிடம் சென்றிருந்தனர். அந்த தாய் தனது ஏழு பிள்ளைகளின் ஆபரணங்களையும் அடகு வைத்திருந்தார். உங்களது தங்கம் எம்மிடம் உள்ளது என்று கூறியும் அந்த தாய் நம்பவில்லை. இந்நிலையில் அதனை காண்பித்ததும் அந்த தாய் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். ஏனெனில் இந்த தங்கம் என்றாவது திரும்பி கிடைக்கும் என்று தான் நம்பவில்லை என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKZno5.html

Geen opmerkingen:

Een reactie posten