தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

மட்டக்களப்பில் கொட்டும் மழையில் நனைந்து பெண்கள் ஆர்ப்பாட்டம்!



மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களில் யானைப் பிரச்சினை உட்பட வீடு, குடிநீர் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாகவும் அவற்றை நிவர்த்தி செய்து தர வேண்டும் என்று கோரியும் இப்பிரதேசங்களின் பெண்கள் எதிர்ப்பு பேரணியொன்றை இன்று நடத்தினர்.
கித்துள், தும்பாலஞ்சோலை, வெலிகாகண்டி, சர்வோதயநகர், கோப்பாவெளி, உறுகாமம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இக் கிராமங்களைச் சேர்ந்த மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிச்சினைகள் உள்ளதாக அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம்மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
கொட்டும் மழையில் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவில் ஒன்று கூடிய இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பேரணியாக மாவட்ட செயலகத்திற்கு வந்து அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
மறுமலர்ச்சிப் பெண்கள் அமைப்புகளின் ஏற்பாட்டிலும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒத்துழைப்புடனும் இந்த பேரணி நடைபெற்றிருந்தது.
இதன்போது மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், செல்வராஜா, மாகாண சபை உறுப்பினர்களான துரைராஜசிங்கம், பிரசன்னா, நடராஜா, வெள்ளிமலை ஆகியோர் இந்த மக்களுடன் உரையாடி, மீண்டும் அரசாங்க அதிபரிடம் மேலும் விரிவாக தங்களுக்குள்ள யானைப் பிரச்சினை, வீடுகள் இன்மை, குடிநீர்ப் பிரச்சினைகள், போக்குவரத்துப் பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து உரையாடுவதற்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.
அதன் போது மக்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகளை எடுத்துக் கூறினர்.
இப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்க அதிபருக்கு கையளிக்கப்பட்ட மகஜரில்,
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கித்துள், சர்வோதைய நகர், உறுகாமம், தும்பாலஞ்சோலை, கோப்பாவெளி, வெலிக்காண்டி, ஆகிய கிராமங்களில் குடுமு;ப தலைமைத்துவப் பெண்களை உள்ளடக்கிய மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பு செயற்பட்டு வருகின்றது.
இப் பெண்கள் அமைப்பு தலைமைத்துவ பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், இடம்பெயர்ந்த மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாகவும் செயற்பட்டு வருகிறது.
யுத்த அனர்த்தத்தினால் எமது உறவுகளையும் உடமைகளையும் இழந்து (கித்துள், தும்பாலஞ்சோலை, வெலிகாகண்டி, சர்வோதயநகர், கோப்பாவெளி, உறுகாமம் )போன்ற கிராமங்களை விட்டு இடம்பெயர்ந்து 2007ம் ஆண்டு எமது கிராமங்களில் மீண்டும் குடியமர்த்தப்பட்டோம்.
மீளக் குடியமர்த்தப்பட்டு அன்றிலிருந்து இன்றுவரை, யானைப் பிரச்சினை, குடிநீர்ப்பிரச்சினை, வீட்டு வசதியின்மை, வீதி சீரின்மை, மலசலகூட வசதியின்மை, காணி அனுமதிப் பத்திரமின்மை எனப் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறோம். இப்பிரச்சினைகளைத் தீர்த்துத் தருவதற்கு ஆவன செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் மகஜரின் பிரதிகள் , மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
காட்டு யானையில் தாக்குதலில் பெரும் இன்னலுக்குள்ளாகும் மட்டு.மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்கள் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதுடன் விலைமதிப்பற்ற உயிர்களும் காவுகொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
இன்று காலையில் காட்டு யானை ஒன்று பட்டிப்பளை பிரதச செயலகப்பிரிவிற்குட்பட்ட தாந்தாமலைக்கு 500 மீற்றருக்கு அருகாமையில் உள்ள 40ஆம் வட்டைக்கிராமத்தில் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றது.
அங்கு சென்று இறந்த யானையை பார்வையிட்டதுடன் காட்டு யானைகளினால் ஏற்பட்டு வரும் பாதிப்புக்கள் பற்றியும் மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
யானைகளின் தாக்குதலினால் எல்லைக்கிராமங்களில் உள்ள பல குடும்பங்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள் தாங்கள் இரவு பகலாக கடின உழைப்பின் மத்தியில் செய்யும் விவசாயத்தினை ஒரு நொடிப்பொழுதில் அனைத்தையும் நாசம் செய்யும் யானைகளினால் மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள்.
தாங்கள் தங்களுடைய வீடுகளில் நிம்மதியாக தூங்குவதற்குக்கூட முடியாத சந்தர்ப்பங்களும் இந்த மக்களுக்கு ஏற்படுவது வழமை அவ்வாறு தங்கிய பலர் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி இறந்து சந்தர்ப்பங்களும் உண்டு எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRaKZnoz.html

Geen opmerkingen:

Een reactie posten