தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 14 november 2014

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர் கொலை தனிப்பட்ட குரோதம் ! அரசாங்கம் தெரிவிப்பு!

திருகோணமலையில் நாளை ஆட்பதிவுத் திணைக்கள நடமாடும் சேவை
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 02:30.42 PM GMT ]
ஆட்பதிவுத் திணைக்களத்தின் நடமாடும் சேவை நாளை திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என்ற தகவல் அண்மையில் வெளிவந்திருந்தது. இதன் காரணமாக எதிர்வரும் தேசிய தேர்தல்களின் போது அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படும் அபாயம் எதிர்நோக்கப்பட்டிருந்தது.
இந்நிலையைக் கருத்திற் கொண்டு சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல்களுக்கான அமைப்பு (கபே) தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கான கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. மனித உரிமைகள் ஆணையத்திடமும் இது தொடர்பில் முறையிட்டிருந்தது.
இதன் பயனாக கபே அமைப்புடன் இணைந்து நாளை திருகோணமலையில் நடமாடும் சேவை ஒன்றை நடத்த ஆட்பதிவுத் திணைக்களம் முன்வந்துள்ளது.
இதில் கலந்து கொள்பவர்களுக்கு புகைப்படம், முத்திரைச் செலவு உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. மேலும் இரண்டு வாரத்திற்குள் அவர்களுக்கான ஆளடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான நிதியுதவி கபே அமைப்பின் கோரிக்கையின் பேரில் யூஎஸ் எயிட் நிறுவனம் வழங்கவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlt0.html

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர் கொலை தனிப்பட்ட குரோதம் ! அரசாங்கம் தெரிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 03:02.59 PM GMT ]
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரின் கொலைச் சம்பவம் தனிப்பட்ட பகை காரணமாக நிகழ்ந்திருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த விடுதலைப் புலி உறுப்பினர் முன்னர் நடந்த கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்றும் , அதன் காரணமாக ஏற்பட்டிருந்த பகையினால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக கலந்து கொண்டு கருத்து வெளியிட்டிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தரப்புகள் குற்றம் சாட்டுவது போன்று முன்னாள் புலி உறுப்பினரின் கொலையில் எதுவித மர்மங்களும் இல்லை.
அவர் தனிப்பட்ட பழிவாங்கலின் காரணமாகவே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மன்னார் ஆயர் கண்டனம்
மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் போராளியான, கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
கொடிய போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த ஆயுததாரிகள் முயற்சிப்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளரான நகுலேஸ்வரன் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நாட்டில் இன்று நீதி தோற்றுப் போய்விட்டது. நீதிக்குப் புறம்பான செயல்கள் தான் தற்போதைய ஆட்சியில் நடைபெறுகின்றன.
இந்நிலையில், ஆயுததாரிகளும் தமது அராஜகங்களை சுதந்திரமாக அரங்கேற்றி வருகின்றனர்.
எனவே, சர்வதேச சமூகம்தான் இந்த அராஜகங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
தமிழருக்கு நீதியை, விடுதலையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையும், தமிழீழக் காவல்துறையில் பணியாற்றி, இலங்கைப் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டவருமான நகுலேஸ்வரன் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு தனது வீட்டில் கல் அரிந்து கொண்டிருந்த போது, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் போராளி சுட்டுக் கொலை! இராணுவமே பொறுப்பு என்கிறது கூட்டமைப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும் த.தே.கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளருமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மன்னாரில் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டமையை கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், 
மன்னார் - வெள்ளாங்குளம் இராணுவத்தினரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பிரதேசத்தில் எமது கட்சியின் தீவிர ஆதரவாளரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் இனந்தெரியாத நபர்கள் என்று கூறப்படுவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
எனவே, இந்தச் சம்பவத்துக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும். குற்றவாளிகளை அரசு உடன் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தவேண்டும். ஆனால், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே.
இந்தக் கொடூர சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நகுலேஸ்வரனின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நகுலேஸ்வரனின் படுகொலையால் முன்னாள் போராளிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. விசாரணை இடம்பெற்று வருகின்ற நிலையில், வடக்கில் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
எனவே, இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கூட்டமைப்பின் எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற வீடமைப்பு, பொறியியல் - நிர்மாணத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியுள்ளார்.
அரசால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர் எனவும், நேற்றுமுன்தினம் மன்னாரில் ஒரு முன்னாள் போராளி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அரசால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு இருக்கின்றது என்றும் சபையில் ஆளுந்தரப்பினரைப் பார்த்து செல்வம் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlt1.html

Geen opmerkingen:

Een reactie posten