மாவீரர் தினம் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என்பன நிறைவடையும் வரையில் வடக்கிலே நிலைகொண்டுள்ள இராணுவத்தினரும் கடற்படையினரும் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் என நேற்று பாராளுமன்றத்தில் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தினார்.
மேற்படி காலப்பகுதிக்குள் இவ்விரு தரப்பினரும் முகாம்களை விட்டு வெளியில் வருவதற்கு அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சும் அனுமதிகளை வழங்கக்கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத் தேவைக்காகவே அழைத்து வரப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் தேசத் துரோகி எனக் குறிப்பிட்டார்.
பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கின்ற முஸ்லிம் அமைச்சர்களும் எம்.பி.க்களும் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கின்றனர் என்றும் விஜயகலா எம்.பி. சாடினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற காணி,- காணி அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
வடக்கில் இராணுவமும் கடற்படையும் அடாவடித்தனமாக செயற்பட்டு வருவதையும் இங்கு கூறி வைக்கின்றேன்.
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் தேவைக்காகவே லக்ஸ்மன் கதிர்காமர் அழைத்து வரப்பட்டு வெளிவிவகார அமைச்சராக அமர்த்தப்பட்டார். அவ்வாறு அமர்த்தப்பட்ட அவர் புலிகளால் கொல்லப்பட்டதாக இங்கு கூறப்படுகின்றது. அவருக்கு புகழாரமும் சூட்டப்படுகின்றது. ஆனால் அவர் தமிழினத்தின் துரோகியாவார். தமிழ் தேசியத்தின் துரோகியாகவே இருந்தார். அவ்வாறானவரினது காணியும் இன்று படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
யாழ்தேவி வந்தாலும், அபிவிருத்திகள் வந்தாலும், வடக்கில் இராணுவத்தினர் சிவில் அதிகாரிகளாகவே செயற்பட்டு வருகின்றனர். இதனால் எம்மக்கள் அச்சத்தின் சூழலிலேயே இருந்து வருகின்றனர். வடக்கில் இராணுவம் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது.
மாவீரர் தினம் வரவிருக்கின்ற நிலையில் அங்கு தற்போது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அங்கு சுவரொட்டிகளை ஒட்டுவதற்கான சூழலோ அல்லது தைரியமோ தமிழ் மக்களுக்குக் கிடையாது. இந்நிலையில் இராணுவமே இவ்வாறு சுவரொட்டிகளை ஒட்டி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவீரர் தினம் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என்பன நிறைவடையும் வரையில் வடக்கிலே நிலைகொண்டுள்ள இராணுவத்தினரும் கடற்படையினரும் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும்.
இக்காலப் பகுதியில் இவ்விரு தரப்பினரும் முகாம்களை விட்டு வெளியில் வருவதற்கு அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சும் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgpy.html
Geen opmerkingen:
Een reactie posten