தன்னிடம் இருந்த கல்விமான்களை, புத்தி ஜீவிகளை எல்லாம் வெளிநாட்டில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்கவே பயன்படுத்தினாரே தவிர, உள்ளூரில் அவர்கள் எவரையும் களமிறக்கவில்லை. அதாவது எவரும் மகிந்தருக்கோ இல்லை அவர் கட்சி சார்பாகவே எந்த ஒரு பெரிய, பரப்புரைகளையும் இதுவரை செய்யவில்லை. கடந்த 2012ம் ஆண்டு, முதன் முதலாக அமெரிக்கா ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அந்த நாள் முதல் மகிந்தரின் பரிவாரங்கள் அனைத்தும், அதனையும் புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்கள் கொடுக்கும் நெருக்கடிகளையும் சமாளிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆனால் உள்ளூரில் ஒரு பிரச்சாரத்தையும் அவர்கள் செய்யவில்லை. ஊர் ஊராகச் சென்று மகிந்தரோ இல்லை அரது சகோதரர்களோ எந்த ஒரு பிரச்சார நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. முழுக்க முழுக்க வெளிநாடுகளில் இருந்து வரும் அழுத்ததை இவர்களும், இவர்களது அரசும் கவனித்து வந்துள்ளது. தமது வளங்கள், அனைத்தையும் திரட்டி, எதிர்ப்பை எப்படி சமாளிப்பது என்று திட்டம் தீட்டி வந்துள்ளார்கள்.
இதனால் சிங்கள மக்களுக்கு மத்தியில் அவர் செல்வாக்கு வெகுவாக குறைந்துவிட்டதை அவர் அவதானிக்க தவறிவிட்டார். இதுவே ஊவா மாகாணத் தேர்தலிலும் பிரதிபலித்தது என்று கூறலாம். தற்போது நடக்கவுள்ள தேர்தலில் தான் வெற்றிபெறுவேனா மாட்டேனா ? தோற்றுப் போனால் எவ்வளவு பெரிய அவமானம் நேரும் ? என்று எல்லாம் எண்ணி, தன்னை சந்திக்கவரும் கட்சித் தலைவர்களோடும் முக்கியஸ்தர்களோடும் இவர் புலம்பி வருகிறாராம். இதனால் மகிந்தரை பார்த்துப் பேசிவிட்டுச் செல்லும் அனைவரும் ஒன்றைத்தான் சொல்கிறார்கள். அது என்னவென்றால் மகிந்தர் குழம்பிப்போயுள்ளார் என்பது தான். ஒரு அரசியல்வாதியின் செல்வாக்கு நாட்டில் நிலைத்திருக்கவேண்டும் என்றால், அவர் அடிக்கடி தனது தொகுதிக்குச் செல்லவேண்டும். மக்கள் சந்திப்பில் இருக்கவேண்டும். இல்லையென்றால் கூட நாட்டு மக்களுக்கு ஏதாவது நல்ல திட்டங்களை அமுல்படுத்தி இருக்கவேண்டும் அல்லவா.ஆனால் மகிந்தரோ கடந்த 2012ம் ஆண்டு முதல் தன்னையும், தனது பரிவாரங்களையும் காப்பாற்றவே செயல்திட்டங்களை தீட்டி வந்துள்ளார்.
மக்கள் சந்திப்பில் ஈடுபடவில்லை. கட்சி தொடர்பாக எதனையும் செய்யவில்லை. இதனால் மக்கள் மத்தியில் அவர் செல்வாக்கு வெகுவாக சரிந்துவிட்டது. புலிகளை வென்றார் என்று சிங்களவர்கள் மகிந்தரை என்னதான் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடினாலும், அது எல்லாம் எத்தனை வருடம் நீடிக்கும் ? காலப்போக்கில்மக்கள் இயல்பாகவே அதனை எல்லாம் மறந்துபோய்விடுவார்கள் அல்லவா ? அது தான் தற்போது நடக்க ஆரம்பித்துள்ளது. இனி புலிகளை வைத்து மகிந்தர் போட்ட பாச்சா எல்லாம் பலிக்காது. அது பயனற்றுப்போய்விட்டது. இதனை உணர்ந்த மகிந்தர் தற்போது, ரணில் புலிகளுக்கு உதவினார். நோர்வே புலிகளுக்கு நிதிகொடுத்தது என்று எல்லாம் சொல்லி தூசி தட்டி, மீண்டும் புலிகள் புராணம் பாடலாம் என்று கனவு காண்கிறார். இது பலிக்காது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். இம்முறை நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சியினர் சரியான ஒரு ஆளை நிறுத்தினால் வெற்றி நிச்சயம் கிட்ட வாய்ப்புகள் உள்ளது. இதுவரை காலமும் நாம் போராடி என்னத்தைக் கண்டோம் என்று சலித்துக்கொள்ளும் தமிழர்களுக்கு இப்போது புரியும், நீங்கள் எதனை சாதித்து இருக்கிறீர்கள் என்று. ஒரு நாட்டின் அதிபர் தனது சொந்த நாட்டில் அரசியலில் ஈடுபடாமல், வெளிநாட்டில் இருந்து வரும் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தால், அவர் தனது சொந்த நாட்டில் அரசியல் பலத்தை இழக்க நேரிடும் என்ற சூத்திரம் இப்போது உங்களுக்கு புரியும் என நான் நினைக்கிறேன்.
அதிர்வுக்காக,
வல்லிபுரத்தான்
http://www.athirvu.com/newsdetail/1455.html
Geen opmerkingen:
Een reactie posten