தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 november 2014

தமிழ் மக்களுக்கு அதிகாரம் பரவலாக்க வேண்டும், அதில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் ராஜித சேனாரத்ன!

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தன்னை மலர் மாலை அணிவித்து வரவேற்றதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது,
தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நான் எனது நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றேன்.
தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்று நான் ஏற்றுக்கொள்வதன் காரணமாவே வடக்கிற்கு செல்லும் போது எனக்கு சிறந்த முறையில் வரவேற்பை வழங்குகின்றனர்.
கடந்த முறை வடக்கு மாகாணத்திற்கு சென்ற போது வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் நாள் முழுவதும் என்னுடன் இருந்து, விமானத்திலும் ஏற்றி வழியனுப்பவும் வந்தார்.
அத்துடன் நான் கலந்து கொண்ட சகல கூட்டங்களிலும் அவர் என்னுடன் கலந்து கொண்டார்.
அத்துடன் வடக்கு மாகாண முதலமைச்சர் வெற்றிலை கொடுத்து மலர் மாலை அணிவித்து பிரதான ஆசனத்தில் அமர செய்து என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
எனது நிலைப்பாட்டை அவர்கள் மதிக்கின்றனர். நான் அரசாங்கத்திற்கு வருவதற்கு முன்னரும் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்து வந்தேன்.
அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்பது எமது இரண்டு நிபந்தனைகளில் ஒன்று. அரசாங்கத்தில் உள்ள சிலர் அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருந்தாலும் எனக்கு இருப்பது கொள்கை ரீதியான பிரச்சினை மட்டுமே.
ராஜபக்ஷ குடும்பத்தினர் என்னை நன்கு உபசரிக்கின்றனர். பசிலாக இருந்தாலும் நாமலாக இருந்தாலும் அப்படித்தான். ஏனையவர்களுக்கு இருக்கும் பிரச்சினை தனிப்பட்ட ரீதியில் எனக்கு இல்லை.
நான் கொண்டுள்ள நிலைப்பாட்டை பல இடங்களில் தெரிவிக்கும் போது நான் நெருக்கடிகளை சந்தித்துள்ளேன்.
இதுதான் எனக்குள்ள பிரச்சினை. எவ்வாறாயினும் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற எனது நிபந்தனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
நான் அதற்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றேன். பதவிகள் வழங்கப்பட்டதால், அரசாங்கத்திற்கு வந்த ஏனையவர்களின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கலாம்.
எனினும் எனது நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை. முன்னர் போல் அல்ல தற்போது கொஞ்சம் பொறுமையாக இருக்கின்றேன். அமைச்சர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.
சகல அமைச்சர்கள் மீதும் ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள் இல்லை. சிலர் மீது அப்படியான குற்றச்சாட்டு உள்ளது.
இது குறித்து அரசாங்கத்தில் பெரும் பிரச்சினை உள்ளது. அமைச்சர்கள் பலர் இது பற்றி பேசுவதுண்டு. இது எமக்குள்ள பெரிய பிரச்சினை.
வெளிப்படையாக பேசாவிட்டாலும் அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்கள் இந்த ஊழல், மோசடி குறித்து வெறுப்பில் உள்ளனர்.
உலகில் சகல நாடுகளிலும் கூட்டணி ஆட்சியே நடந்து வருகிறது. தனிக்கட்சியின் ஆட்சிகள் எங்குமில்லை. பல்வேறு நிலைப்பாடுகளை கொண்டவர்கள் சேருவார்கள்.
பாரிய கொள்கை வேறுபாடுகள் உள்ளவர்களும் அதில் இருப்பார்கள். அத்துடன் பொது நோக்கத்திற்காக பணியாற்ற வேண்டும்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் பொது நோக்கமாக யுத்தம் இருந்தது. யுத்தத்திற்கு பின்பு அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது பொது நோக்கமாக உள்ளது.
மக்கள் அத்துடன் நின்று விட மாட்டார்கள். மக்களுக்கு நல்லாட்சி அவசியம். ஜனநாயகம் சுதந்திரம், ஊழல் அற்ற சமூகம், கொலை கொள்ளையற்ற சமூகம், அத்தியவசியமானது.
தற்போது அது மேலெழுந்துள்ளது. போர் முடிந்து விட்டது. பல அபிவிருத்திகள் கிடைத்து விட்டன. கடந்த காலத்தை விட சிறந்த பொருளாதாரம் உள்ளது.
தற்போது மக்களுக்கு நல்லாட்சி தேவைப்படுகிறது. லிபியாவின் கடாபி பொருளாதார ரீதியில் எப்படியான மாற்றங்களை கொண்டு வந்தார். மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார்.
எனினும் மக்கள் கடாபியை துரத்தினர். கொலை செய்வதற்கு துப்பாக்கியை நீட்டும் போது நான் உங்களுக்கு செய்த தவறு என்ன என்று கடாபி கேட்டார்.
சகலவற்றையும் கொடுத்த கடாபி மக்களுக்கு சுதந்திரத்தை கொடுக்கவில்லை. கடாபி தனது குடும்பத்தினருக்கும் தன்னை சுற்றி இருந்தவர்களுக்கு மட்டுமே சுதந்திரத்தை கொடுத்தார்.
மக்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதை கடாபி உணரவில்லை. அதேபோல் நாடு ஒன்று முன்னேற்றமடையும் போது சுதந்திரம், நல்லாட்சி, ஜனநாயகம் மக்கள் பேசுவார்கள்.
தற்போது இலங்கையிலும் அந்த கோரிக்கையே முன்வைக்கப்பட்டு வருகின்றது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXeqz.html

Geen opmerkingen:

Een reactie posten