தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 november 2014

காதல் விவகாரம்! யுவதியை கத்தியால் குத்திய இளைஞன் கைது!

மகிந்தவின் 3-வது தவணை: உச்சநீதிமன்றம் வழங்குவது வெறும் ஆலோசனையே!
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 04:16.26 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் மூன்றாவது தவணைக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியுமா என்பதற்கான சட்டவிளக்கத்தை அளிக்குமாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் உச்சநீதிமன்றம் எந்தவொரு தீர்மானத்தை வழங்கினாலும் தேர்தல்கள் ஆணையாளர் அதற்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் ஏற்படமாட்டாது என்று ஜனநாயகத்துக்கான வழக்கறிஞர்கள் சங்கம் கூறியுள்ளது.
அரசியலமைப்பின் பிரிவு- 129இன்படி, ஜனாதிபதி உச்சநீதிமன்றத்திடமிருந்து ஆலோசனையை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனநாயகத்துக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் லால் விஜேநாயக்க கூறினார்.
இது, உச்சநீதிமன்றத்தினால் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் தனிப்பட்ட ஆலோசனை மட்டுமே என்று தெரிவித்த லால் விஜேநாயக்க, அந்த ஆலோசனையை மீறும் நபருக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, ஜனாதிபதிக்கு வழங்கப்படும் ஒரு தனிப்பட்ட ஆலோசனைக்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டிய கடமை தேர்தல்கள் ஆணையாளருக்கோ அல்லது எந்தவொரு அரச அதிகாரிக்கோ இல்லை என்றும் அவர் கூறினார்.
எனினும், இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதிபா மகாநாம ஹேவா, உச்சநீதிமன்றத்தினால் வழங்கப்படும் ஆலோசனைக்கு அமைய செயற்படுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறினார்.
'ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது': மனித உரிமை ஆணையர்
அரசியலமைப்பின் பிரிவு- 129இன்படி, உச்சநீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்மானம் ஓர் ஆலோசனையாக இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் உள்ளது என்றும் மகாநாம ஹேவா தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலை நடத்தினால், அதற்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தேர்தல்கள் ஆணையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யமுடியும் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் கூறினார்.
ஜனாதிபதி பதவியை ஒருவர் இரண்டு தவணைகள் மட்டுமே வகிக்க முடியும் என்று அரசியலமைப்பில் இருந்த கட்டுப்பாட்டை, 2010-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 18ம் யாப்புத் திருத்தம் நீக்கிவிட்டது.
எனினும், 18 வது திருத்தம் அமலுக்கு வந்தபோது மகிந்த ராஜபக்ச ஏற்கனவே இரண்டாவது தவணைக்கும் பதவிப் பிரமாணம் செய்துவிட்டபடியால், அவருக்கு மூன்றாவது தவணைக்கும் போட்டியிட முடியாது என்று முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என். சில்வா உள்ளிட்ட தரப்பினர் கூறிவருகின்றனர்.
அவ்வாறே, முதல் தடவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும் நபர் ஒருவர், தனது பதவிக் காலத்தின் நான்கு ஆண்டுகள் முடிவடைந்தவுடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கமுடியும் என்று அரசியலமைப்பில் முன்னர் ஏற்பாடு இருந்தது.
எனினும், 18-வது திருத்தத்தில் அது தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படாத காரணத்தினால் மகிந்த ராஜபக்ச முன்கூட்டியே தற்போது தேர்தல் நடத்தமுடியாது என்றும் சில சட்டவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் எழுந்துள்ள சட்டரீதியான சந்தேகங்களை தெளிவுபடுத்துமாறு கோரியே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியலமைப்பின் 129-ம் பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgw2.html
காதல் விவகாரம்! யுவதியை கத்தியால் குத்திய இளைஞன் கைது
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 04:22.06 PM GMT ]
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கியூ தோட்டத்தில் யுவதி ஒருவர் கத்திக் குத்துக்கு உள்ளாகியுள்ளார்.
தோட்டத்தில் குமாஸ்தராக பணி புரியும் 22 வயதுடைய ஜெயரட்ணம் குகன்யா என்ற யுவதியே கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த யுவதி தனது பணிகளை முடித்து இன்று மாலை வீட்டுக்கு திரும்பும் வேளையில், வழியை மறித்த இளைஞன் ஒருவர் அவரை கத்தியால் குத்தியுள்ளார்.
கத்தி குத்துக்கு இலக்கான யுவதி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த பெண்ணின் கைகளிலும், முதுகிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காதல் விவகாரமே இதற்கு காரணமாக இருக்கும் என நோர்வூட் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபரான இளைஞனை நோர்வூட் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgw3.html

Geen opmerkingen:

Een reactie posten