பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடிய குற்றத்துக்காக சென்னையில் திராவிட விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த உமாபதி என்பவர் பொலிஸாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் உமாபதி கூறியதாவது,
கடந்த 26-ம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளுக்காக மந்தைவெளியில் விளம்பரப் பலகை வைத்திருந்தோம்.
அங்கே வந்த பொலிஸார் பேனரை அகற்றுகிறோம் என்ற பெயரில் பிரபாகரன் படத்தைக் கிழித்துள்ளனர்.
இதற்கு அங்கிருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களிடம் அபிராமபுரம் எஸ்.ஐ இளையராஜா தரக்குறைவாகப் பேசியுள்ளார்.
அந்த சமயத்தில் அங்கே சென்ற நான் எஸ்.ஐயிடம், 'எதற்காக இப்படி மோசமாக நடந்து கொள்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.
உன்னைத்தாண்டா முதல்ல அடிக்கணும்’ என்று என்னை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றார்.
அங்கே எஸ்.ஐ கலைச்செல்வி, கான்ஸ்டபிள் வடிவேல் ஆகியோர் என்னோட டிரெஸ்ஸை கழட்டிட்டு லத்தியால அடிச்சாங்க.
எஸ்.ஐ கலைச்செல்வி, 'உனக்கு கல்யாணம் ஆகிடுச்சாடா...’னு கேட்டுட்டே என்னோட ஆண் குறியில உதைச்சாங்க.
என்னால முடியலைங்க... அங்கேயே வலி தாங்க முடியாம சுருண்டு விழுந்துட்டேன்' என்றவரால் மேற்கொண்டு பேச முடியவில்லை.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிபதி ராமசுப்ரமணியம், 'இப்படியா ஒரு மனிதரை மூர்க்கத்தனமாக அடிப்பார்கள்? ராஜீவ் காந்தி மருத்துவமனை டீனை தலைவராகக்கொண்டு ஒரு மருத்துவக்குழு அமைக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு தக்க சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவும், இதற்கான அனைத்து செலவையும் அரசே ஏற்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
எஸ்.ஐ. கலைச்செல்வியிடம் கேட்டபோது, ''சம்பவம் நடந்தபோது நான் ஸ்டேஷனில் இல்லை. சிலர் என்னை வேண்டும் என்றே இந்த விவகாரத்தில் சிக்க வைத்துள்ளனர். விசாரணையை எதிர்கொள்வேன்' என்றார்.
கான்ஸ்டபிள் வடிவேல், 'ஏதோ எமோஷனில் நடந்துவிட்டது. வருந்துகிறேன்' என்றார்.
மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், 'பொலிஸ் செய்தது சரிதான் என்று நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZku2.html
Geen opmerkingen:
Een reactie posten