தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 december 2014

அடிமைத்தனத்தால் நாம் பெறும் நன்மைகள் நிரந்தரமானவை அல்ல!- வடமாகாண முதலமைச்சர்

கூட்டமைப்பு விளைவுகளைப் பற்றி சிந்திக்கவில்லை: வி.ஆனந்தசங்கரி
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 04:20.07 PM GMT ]
ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விடுத்திருக்கும் அறிவித்தல் விளைவுகளைப் பற்றி சிந்திக்காது விடுக்கப்பட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தல் நியமனப் பத்திரம் தாக்கல் செய்த தினத்திலிருந்து மூன்று வாரங்கள் கழித்தே தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது.
வைத்திய பரிசோதனைக்காக இந்தியாவுக்கு சென்றிருந்த திரு. இரா.சம்பந்தன் அவர்கள் நாடு திரும்பும்வரை காத்திருப்பதாக காரணம் கூறினார்கள்.
வைத்திய பரிசோதனைக்காக மூன்று வாரங்கள் தேவையில்லை. என்பதோடு அவருடன் தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து அல்லது அவரது கருத்தை தொலைபேசி மூலம் கேட்டு செயற்பட்டிருக்கலாம்.
பல சபைகளின் உறுப்பினர்களுடனும், முக்கிய பிரமுகர்களுடனும் கலந்து ஆலோசித்ததாக கூறியது ஒரு பொருத்தமான காரணம் அல்ல.
நியமனத் தாக்கல் தினம் தொடக்கம் இன்றுவரை த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களுடைய அறிக்கைகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேட்பாளர் யார் என்பதை அடையாளப்படுத்தியதோடு, ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால்மூலம் வாக்களித்தும் விட்டார்கள்.
மக்களை ஏமாற்றுவது ஓரளவோடு இருக்க வேண்டும். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்தமையானது, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்த்ததற்கு மாறான விளைவையே ஏற்படுத்தும்.
ஏனெனில் பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், தமிழர்கள், சிங்களவர்கள்  சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்ததோடு பல உறவுகளையும் இழந்துள்ளனர்.
சில குடும்பத்தினர் கண்ணீருடனும் போதிய உணவின்றியும் வாழ்கின்றனர். எனது குடும்ப வட்டத்தில் தன் இரு குழந்தைகள், கணவர் ஆகியோரை எண்ணி தினமும் கண்ணீரும் கம்பலையுமாக போதிய உணவின்றி வாழ்கின்றனர்.
விடுதலைப் புலிகளை தமிழ் தேசியத்தின் தலைமையாகவும், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாகவும் ஏற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பில் அநேகர் எதுவித இழப்புக்களை கொண்டிராதவர்களும் சிலர் நிதியுதவி உட்பட விசேட சலுகைகளை பெற்றவர்களாகவும் உள்ளனர்.
ஆனால் ஏனைய பாதிப்புக்குள்ளானவர்கள் பல்வேறு துன்பங்களுடன் வாழ்கின்றனர். இக்குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் இவ்வாறான நிகழ்வில் மனநிறைவோடு கலந்துகொள்ள மாட்டார்கள்.
ஆகவேதான் நான் தமிழ் தேசிய கூட்டமைப்பு நேரத்துடனேயே கவனமாகவும் இவர்களை விழிப்படைய செய்யாமலும் அவர்களையே தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வாய்ப்பை அவர்களிடமே விட்டுவிடும்படி முன்னெச்சரிக்கையாக கோரியிருந்தேன்.
சிலருக்கு எனது கோரிக்கை வேடிக்கையாக இருந்தாலும் பலர் அதிலுள்ள நியாயங்களை புரிந்து கொள்வர். இதை விழிப்படைய செய்தால் விளைவுகள் பாராதூரமாக அமையும்.
பாதிப்படைந்தவர்களை சாந்தப்படுத்துவதற்கு த.தே.கூ க்கு உள்ள ஒரேவழி தமக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தற்போது ஒரு தொடர்பும் இல்லையென்றும், விடுதலைப் புலிகள் முற்றாக இல்லாம் ஆக்கப்பட்டுவிட்டார்கள் என்றும் பிரகடனப்படுத்துவதே.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காண்பது என்பது புதிதாக எவராலும் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றல்ல.
ஈழக்கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலிருந்தே பொருத்தமான ஓர் தீர்வை முன்வைத்தால் அதை பரிசீலிக்க தயார் என தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களால் என்றோ தெரியப்படுத்தப்பட்ட விடயமாகும்.
எனது உறுதியான கருத்து என்னவெனில் திருவாளர்கள். சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரால் மட்டும் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாதென்பதையும் கூட்டமைப்பில் இணைந்துள்ள ஏனைய கட்சி தலைவர்களும் கலந்து முடிவுகளை மேற்கொள்வதே சிறந்ததாகும்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnu6.html

அடிமைத்தனத்தால் நாம் பெறும் நன்மைகள் நிரந்தரமானவை அல்ல!- வடமாகாண முதலமைச்சர்
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 04:07.01 PM GMT ]
வடமாகாணசபையினர் நாங்கள் ஆளுநரை அண்டிச்சென்று, ஜனாதிபதியை நாடிச்சென்று, அவர்தம் சகோதரர்களுக்குப் பல்லிளித்துப் பல நன்மைகளை நாம் பெற்றுக் கொள்ளலாம் என்பது உண்மைதான். ஆனால் அப்பேர்ப்பட்ட அடிமைத்தனத்தால் நாம் பெறும் நன்மைகள் நிரந்தரமானவை அல்ல.
பல் இளிக்கும் வரை தான் பலன் கிடைக்கும். நாடும் வரையில்தான் நன்மை கிட்டும் என்றென்றும். அண்டி வாழ்ந்தால்தான் அதிக நன்மை அடையலாம். வடகிழக்கு மாகாண மக்கள் அதற்காகப் போராடவில்லை.
மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண ச பையின் குறுங்கால, இடைக்கால சவால்கள் எனும் பொருளில் இன்றைய தினம் மாலை யாழ்.பொது நூலகத்தின் கருத்தரங்கு மண்டபத்தில் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அமைச்சு செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
பழையது போகின்றது. நாளை புதியது பிறக்கப் போகின்றது! நாம் சேர்ந்து நன்றாக மகிழ்வடைய வழி அமைக்காமல் “இது என்ன இந்த நேரத்தில் ஒரு கருத்தரங்கம்? இது அவசியமா?” என்ற கேள்விதான் ஒவ்வோர் சகோதர சகோதரியர் மனதிலும் எழும் கேள்வியாக இருக்கும். ஆனால் இக் கருத்துப் பரிமாற்றக் கூட்டமானது எனக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
முதலாவது உங்கள் ஒவ்வொருவரையும் ஒருமித்து இருத்தி வைத்து நீங்கள் எப்பேர்ப்பட்ட மனோநிலையுடன் சென்ற ஒரு வருடத்திற்கு சற்று அதிகமான காலகட்டத்தில் சேவையில் ஈடுபட்டிருந்தாலும் அக் காலகட்ட உங்கள் சேவைக்கும் உங்கள் ஒத்துழைப்புக்கும் எனதும் எனது அமைச்சர்களதும் மனமார்ந்த நன்றியை உங்களுக்குத் தெரிவிக்க இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என்பது.
இரண்டாவது கருத்தரங்கம் ஒன்று நடத்தினால்தான் கருவில் இருக்கும் காசை கடைக்குச் செலுத்தப் பயன்படுத்தலாம் என்று திரு.திருவாகரன் அவர்கள் தனது பிறந்த நாளான நேற்று எமக்குக் கூறியதை நடைமுறைப்படுத்த இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என்பது.
மூன்றாவது இதுவரை காலமும் சற்றுத் தட்டித் தடுமாறி நடந்து வந்த நாங்கள் இனியாவது அத் தடுமாற்றத்திற்கு விடைகொடுத்து விட்டு சற்றுக் கூடிய வலுவுடன் ஒன்று சேர்ந்து ஐக்கியத்துடன் முன்னோக்கிப் பயணிக்கலாமா என்பதை உங்கள் ஒவ்வொருவர் இடமும் கேட்கக் கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பம் இது என்பது.
எனவே உங்கள் மகிழ்ச்சியில் மண்போடாமல் மனதில்ப் பிறந்த சில எண்ணங்களை உங்கள் முன் மனம் விட்டுப் பேசலாம் என்றும் அது பற்றிய உங்கள் கருத்துக்களை ஒரு சினேகபூர்வமான சுற்றாடலில் நீங்கள் எம்முடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில்த் தான் திரு.திருவாகரன் அவர்களை இந்த கூட்டத்திற்கு உரியதைச் செய்து ஒழுங்கு படுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.
எனவே கூறவந்தவற்றை நான் உங்கள் முன் சுருக்கமாகக் கூறிவைக்கின்றேன்.
முதலில் எமது தோற்றுவாய் பற்றிக் குறிப்பிட்டு விட்டு அதன் பின் இதுகாறும் எமது அனுபவங்கள் எவ்வாறு இருந்தன என்று ஆராய்ந்து விட்டு கடைசியில் எமது குறுங்கால இடைக்காலச் சவால்கள் என்னென்ன என்று கண்டு அவற்றிற்கு நாம் எவ்வழிகளில் பரிகாரங்கள் தேடலாம் என்பதை உங்களுடன் கலந்துறவாடி அறிந்து கொள்வதே எனது தலைமையுரையின் நோக்கம்.
எமது ஆரம்பம்
எமது நாட்டின் அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு அலகே எமது வட மாகாண சபை. 1987ம் ஆண்டில் இலங்கை - இந்திய உடன்படிக்கையின் விளைவாக வெளியானதே இந்த 13வது திருத்தச் சட்டம். தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வழிவகுப்பதாகக் கூறியே இந்தத் திருத்தம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
எங்கே அந்தச் சட்டத்தை தமிழ்ப்பேசும் மக்கள் சார்பாகக் கொண்டு வந்தால் சிங்களமக்கள் தன்னைத் துரோகியாகக் கணிப்பார்களோ என்ற பயத்தில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்கள் நாடு முழுவதற்குந் தான் அதிகாரப் பரவலாக்கத்தைத் தரப்போவதாகக் கூறி 13வது திருத்தச் சட்டத்தையும் அதன் வழிவந்த 1987ம் ஆண்டின் 42ம் இலக்கச் சட்டமான மாகாண சபைகள் சட்டத்தையும் கொண்டுவந்தார்.
அவற்றில் அவர் ஒரு கையால் கொடுத்து மறுகையால் திருப்பி எடுக்குந் தமது கைவந்த நரிக்கலையை உட்புகுத்தியிருந்தார். கொடுப்பது போல் கொடுத்து அதற்கு ஆளுநரின் அனுமதி பெற வேண்டும் என்ற சரத்தை உள்ளடக்கி எதையும் கொடுக்காது அதிகாரத்தை ஆளுநர் ஊடாக மத்திய அரசாங்கம் வசம் வைத்துக் கொள்ள வழி வகுத்தார்.
சென்ற 25 வருட காலத்திற்கு மேலாக அச் சட்டம் மற்றைய மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பினும் மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் மனதறிந்த முரண்பாடுகள் இல்லாத போது மத்தியின் உள்ளீடல்கள் மாகாணங்களுக்கு மலைப்பைக் கொடுக்கவில்லை. மனவருத்தத்தையும் அளிக்கவில்லை.
பிள்ளையான் மட்டும் மட்டுநகரில் இருந்து ஒரு முறை குரல் கொடுத்தார். மாகாண மருத்துவமனையில் ஒரு மருத்துவத் தாதியைச் சுயமாக நியமிக்கும் அதிகாரங் கூட எனக்கில்லையே என்றார். மத்தி மாகாணத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய விதத்தில்த்தான் இந்தத் திருத்தச் சட்டம் அமைந்திருந்தது.
அதன் பின் திவிநகும சட்டம், 18வது திருத்தச் சட்டம், மகாவலிச் சட்டம் மேலும் வட கிழக்கைப் பிரித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்று பல விதங்களில் முன்னர் 13வது திருத்தச் சட்டத்தில் கொடுத்த அதிகாரங்களைக் கூடத் திருப்பி மத்திய அரசாங்கந் தன் வசப்படுத்தக் கூடிய விதத்தில் சட்டங்கள் ஆக்கப்பட்டுள்ளன.
ஆளுநருடன் முரண்படாதவிடத்து இவையெல்லாவற்றையுஞ் சர்வ சாதாரணமாக நடைமுறைப் படுத்தி விடலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் போன்றோர் கூறியதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இதிலே ஒரு விடயத்தை நீங்கள் மனதில் வைத்திருக்க வேண்டும்.
1956ம் ஆண்டில் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்த போது “இரு மொழிகள் ஒரு நாடு; ஒரு மொழி இரு நாடுகள்” என்று கூறிய அதே கலாநிதி கொல்வின்.ஆர்.டி சில்வா என்ற சிரேஷ்ட அரசியல்வாதியும் சட்டத்தரணியும் சரித்திராசிரியருமான அவர் நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி என்ற பதவியை ஜே.ஆர் அவர்கள் உருவாக்கிய போது கூறினார்
“டிக்கி! (கல்லூரிக் காலத்தில் ஜே.ஆரை அவ்வாறு தான் அழைத்தார்கள்!) உன் காலத்தில் இந்தச் சட்டத்தை வேண்டுமானால் நீ நடைமுறைப்படுத்து. ஆனால் நீ போகும் போது இச்சட்டத்தை இரத்துச் செய்து பாராளுமன்ற அதிகாரம் நிலைக்க வழி வகுத்து விட்டு செல். உனக்குப் பின் வரும் ஒருவன் உன்னைப் போல் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டான். கொடூரமாக அவன் இதனை நடைமுறைப் படுத்தக்கூடும்” என்றாராம்.
அதாவது அதிகாரம் என்பது ஒருவர் வசம் இருந்து அந்த அதிகாரத்தைப் பாவிக்கும் போது சட்டதிட்டங்களுக்கு அமைவாக, மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கும் விதத்தில், மனிதாபிமான முறையில் பாவிக்கத் தலைப்பட்டால் சட்டம் எவ்வாறு அமைந்திருந்த போதும் அங்கு நல்லாட்சியும் நீதியும் நிலைக்கலாம்.
ஆனால் தான்தோன்றித்தனமாக, ஒருதலைப்பட்சமாகச் சிந்திக்கும் வண்ணம் நடைமுறைப்படுத்த எத்தனித்தால் அங்கு வல்லாட்சி நிலைக்கும். அதனால்த்தான் சட்டம் எமது உரித்துக்களை இன்னொருவரின் தன்னிச்சைக்கு ஆட்படுத்தி அமைந்திருப்பதை நாம் எதிர்க்கின்றோம்.
அண்டிவாழ நாம் ஆசைப்படாதிருப்பது இந்தக் காரணத்தினால்த்தான். ஆளுநரை அண்டிச்சென்று, ஜனாதிபதியை நாடிச்சென்று, அவர்தம் சகோதரர்களுக்குப் பல்லிளித்துப் பல நன்மைகளை நாம் பெற்றுக்கொள்ளலாம் என்பது உண்மைதான்.
ஆனால் அப்பேர்ப்பட்ட அடிமைத்தனத்தால் நாம் பெறும் நன்மைகள் நிரந்தரமானவை அல்ல. பல் இளிக்கும் வரை தான் பலன் கிடைக்கும். நாடும் வரையில்த்தான் நன்மை கிட்டும் என்றென்றும். அண்டி வாழ்ந்தால்த்தான் அதிக நன்மை அடையலாம்.
வடகிழக்கு மாகாண மக்கள் அதற்காகப் போராடவில்லை. அதற்காக உயிர்த் தியாகங்கள் செய்யவில்லை. அதற்காக உடல் ஊனம் அடையவில்லை. அதற்காகக் காணிகளைப் பறிகொடுக்கவில்லை. அதற்காக எம் பெண்கள் தம் வாழ்வை இழக்கவில்லை. அதற்காக எம் இளைஞர்கள் இன்றும் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டு நிற்கவில்லை.
ஆகவே உண்மையான அதிகாரப் பகிர்வை எதிர்பார்த்தே நிற்கின்றனர் எம்மக்கள்;. அதனால்த்தான் நாங்கள் சலுகை அரசியலுக்கு சரிந்து விடாமல் சட்டவாக்க நிவர்த்தியை நாடி நிற்கின்றோம்.
13வது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் பற்றி 1987ம் ஆண்டிலேயே, அதாவது நாம் இன்று அனுபவித்து அறிவித்துக் கொண்டிருக்கும் எமது அபிப்பிராயங்களுக்கு முன்னரேயே, திரு அமிர்தலிங்கம் அவர்கள், திரு சிவசிதம்பரம், திரு.சம்பந்தன் ஆகியோர் சகிதம் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் பற்றிக் கூறியிருந்தார். அக் குறைபாடுகளுக்கு நாம் இப்பொழுது முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். அன்று கொள்கை ரீதியாகக் கூறப்பட்டது இன்று அனுபவ ரீதியாகக் எடுத்துக் கூறப்பட்டு வருகிறது.
ஆகவே எங்கள் தோற்றுவாய் தொடக்கத்தில் இருந்தே தொய்வுற்றே இருந்து வருகின்றது. மேற்கு மாகாண ஆளுநர்கள் பலர் என் நண்பர்களாக இருந்தவர்கள். பிரதம நீதியரசர் சர்வானந்தா அவர்கள், நீதியரசர் விக்னராஜா அவர்கள் தற்போதைய ஆளுநர் அலவி மௌலானா அவர்கள் - எல்லோருமே மேல் மாகாண அன்றாட நிர்வாக விடயங்களில் தலையிடாது தமது கடமையை ஆற்றி வந்தவர்கள்; வருபவர்கள்.
இங்கும் கிழக்கிலும் மட்டும் படைப்பிரிவில் பதவி வகித்தவர்களைப் பாவித்து மத்திக்குச் சார்பான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது தற்போதைய அரசாங்கம்.
அடுத்து அனுபவங்கள் பற்றி ஆராய்வோம்.
இந்தப் பதினான்கு மாத அனுபவங்கள் எமக்கு எந்தளவுக்கு மத்தியானது மாகாணத்தை மடக்கி ஆள முடியும் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது. உதாரணத்திற்கு அண்மையில் நடைபெற்ற வன்செயல்களைக் குறிப்பிடலாம்.
வடமாகாண மக்கள் ஒதுக்கித் தள்ளிய ஒரு கட்சியின் தலைவர் மத்தியின் மதிப்பு தன்பால் இருப்பதால் தொடர்பில்லாதவரைக் கூட்டத்திற்குக் கொண்டு வந்து ஒவ்வாத நடவடிக்கைகள் இடம்பெற இடமளித்தார். இவை யாவும் “கருடா சௌக்கியமா?” என்ற கலாசாரத்தையே முன்னிறுத்துகின்றது.
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமானது மாகாண நடவடிக்கைகளுள் மத்தி மூக்கை நுழைக்கவென்றே நடைமுறைப்படுத்தப் பட்டு வரும் ஒரு கூட்டம். 2013ம் ஆண்டு நொவெம்பர் 18ந் திகதிய தமது கடிதத்தால் ஜனாதிபதி அவர்கள் தமது மகிந்த சிந்தனையை அமுல்படுத்தவே இக் கூட்டத்திற்கு என்னை இணைத்தலைவராக நியமிப்பதாகக் கூறியிருந்தார்.
மகிந்த சிந்தனையை மறுத்து எமது மக்களின் மாகாண சபை மலர்ந்த பின்னரே அவர் இந்த மடலை எனக்கு அனுப்பியிருந்தார். எனது எதிர்ப்பை அது சம்பந்தமாகத் தெரிவித்து விட்டுத்தான் நான் எனது கடமையைப் பொறுப்பேற்றேன். மகிந்த சிந்தனையை விட எம் மக்கள் சிந்தனை மலர வேண்டும் என்பது தான் எமது எதிர்பார்ப்பு.
இந்த ஒரு வருடத்திற்கு மேலான வடமாகாண சபை அனுபவம் எமக்கு பின்வருவனவற்றை உணர்த்தியுள்ளன-
1. இருவாறான நிர்வாகங்கள் நடைமுறையில் உள்ளன. அதாவது மக்கள் ஆணையைப் பெற்றவர்களின் நிர்வாகம் ஒன்று. அரசியல் செல்வாக்கின் நிமித்தமும் 13வது திருத்தச் சட்டம் ஆளுநருக்கு அளித்த தன்னிச்சை அதிகாரத்தின் அடிப்படையிலும் நடாத்தப்படும் நிர்வாகம் மற்றையது.
2. மாகாண நிர்வாகக் கட்டமைப்பில் மத்தியின் உள்ளீடல் செறிந்து காணப்படுகின்றது. அதாவது அரசாங்க அதிபர் ஃ மாவட்டச் செயலாளர் ஆகியோரின் பிரத்தியேக நிர்வாக முறைமை, திவிநெகும திட்டம் போன்றவற்றால் மத்தியின் உள்ளீடல், மேலும் நிதியங்கள் சம்பந்தமாக மத்திக்கிருக்குங் கட்டுப்பாட்டு அதிகாரங்கள் போன்ற பலதும் மாகாணத்தைச் சுயமாக நடக்கவிடாமல், மத்தியானது தன்னை நாம் நாடிவரச் செய்வதாய் அமைந்துள்ளது. நாடிச் சென்றால்க் கூட பரவாயில்i. ஆனால் நாடிச் சென்ற பின் அவர்களின் நாற்றமெடுக்கும் அரசியலிலும் நாம் கலந்து கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கின்றார்கள்.
3. மூன்றாவதாக எம்மை வாட்டுவது அளவுக்கதிகமான படையினரின் தொடர் பிரசன்னம். எமது மக்கள் வாழ்வு, வாழ்வாதாரம், மாண்பு, மனித உரிமைகள் யாவும் பாதிக்கப்படுவதாகவே அவர்களின் பிரசன்னம் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்து எமக்குத் தெரியாமலே வெளியார்களைக் கொண்டு வந்து குடியமர்த்துந் திட்டமும் அரசாங்கத்தால் அமுல் படுத்தப்பட்டு வருகின்றது. இராணுவத்தினருக்காக பத்தாயிரம் வீடுகள் கிளிநொச்சியில் கட்டப்பட்டுள்ளன. இவை யாவும் இம் மாகாண மக்களை அடிமைகளாக வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் வடமாகாண மக்கள் பரம்பலை மாற்றி அமைக்கும் நோக்கிலும் மத்தி நடாத்தும் மமகாரச் செயல்கள் என்று தெரிகின்றது.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வெளியில் இருந்து கொண்டு வந்து வவுனியா பிரதேசத்தில் படையினர் குடியேற்றிய நபர்கள் பற்றி கேள்வியொன்று மாவட்ட அதிபரிடம் கேட்டிருந்தேன். இன்று வரையில் அதற்குப் பதில் இல்லை. இரு முறைகள் நினைவூட்டுக் கடிதங்களும் அனுப்பியாகிவிட்டது.
உத்தியோகப் பற்றற்ற முறையில் அவர் கூறியதாக அறியவருவது “படையினர் மீது தமக்கு அதிகாரம் இல்லை” என்பதே. ஆகவே மாகாண சபையானது எப்பேர்ப்பட்ட வலுவற்ற, பலமற்ற, அதிகாரம் குறைந்த அலகாக இப்பொழுது வடமாகாணத்தில் இயங்கி வருகின்றது என்பதை நான் கூறி நீங்கள் தெரியவேண்டியதில்லை.
பணிந்து போனால் என்ன?” என்று பலர் தெற்கிலும் இங்கும் கூறுவதைக் கேட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த மலையக மக்கள் சிலர் வத்தளையில் பல வருடங்களுக்கு முன்னர் வந்து குடியேறினர். தமிழில் போதிக்கும் நல்ல கல்லூரிகள் அங்கு இல்லாததால் சிங்கள மொழியில் அவர்களின் குழந்தைகள் கல்வி கற்றார்கள்.
பின்னர் தமது பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றிக் கொண்டார்கள். சிங்களப் படப் பாட்டுக்களையே ரேடியோவில் போட்டுக் கேட்டார்கள். இன்று அந்தத் தமிழ்ப் பேசிய குடும்பங்கள் சிங்கள மக்களாகவே மாறியுள்ளார்கள். உயிரோடிருக்கும் பாட்டன் - பாட்டிகள் மட்டும் தமிழில் பேசுகின்றார்கள்.
இதனை இன அழிப்பு என்று கூறலாமோ தெரியாது. தமிழில் கல்வி கற்க வசதி அளிக்காதது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படலாம். ஆனால் முன்னர் அங்குவந்து குடியேறிய தமிழ்ப்பேசும் குடும்பங்களின் அடையாளம் 60, 70 வருடங்களுக்குப் பிறகு முற்றாக மாற்றமடைந்துள்ளது என்பது உண்மை.
 இதையே வடகிழக்கு மாகாணங்களில் மத்திய அரசாங்கம் வேறுவிதத்தில் செய்ய நினைக்கின்றது. அதாவது சிங்கள மக்களை, இராணுவத்தினரைப் பெருவாரியாக எமது மக்களிடையே குடியமர்த்தி அவர்கள் வாழ்க்கை முறையை மாற்ற எத்தனிக்கின்றார்கள.
இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தில் செய்து கொண்டிருப்பதை இவர்கள் இங்கு செயற்படுத்தி வருகின்றார்கள். மேலும் புத்த சிலைகள் இதன் பொருட்டு கட்டப்படுகின்றன. இவற்றிற்கு இடமளிக்க எம் மக்கள் முன் வந்தார்களானால் மற்றைய மாகாணங்களில் நடைபெறும் மாகாண ஆட்சி, எமக்கும் நல்லதாக, நலம் தருவதாக அமையும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் எமது தனித்துவம் பறிபோய் விடும். நாம் எல்லோரும் பௌத்த சிங்களவரே என்ற கோஷத்திற்கு அடி பணிய நேரிடும். இவ்வாறு இல்லை என்றால் நாம் முட்டி மோதி முரண்படுவதில் பிழையில்லை என்றே கொள்ள வேண்டும்.
இறுதியாக எமது சவால்களைப் பற்றியும் அதற்கான நிவாரணங்கள் பற்றியும் ஆராய்வோம்.
எமது நிர்வாகம் பற்றிய சவால்களை நீங்கள் தான் எனக்கெடுத்து இயம்ப வேண்டும். அவை பற்றி நான் கூறமாட்டேன். பொது சவால்களையும் அது பற்றி என்ன செய்யவேண்டும் என்றும் சுருக்கமாகக் கூறிவிடுகிறேன்.
முதலாவது பொது மக்கள் வாழ்க்கையில் இராணுவம் உள் நுழைவதை உடனே நிறுத்த வேண்டும். மக்கள் சுதந்திரத்துடனும் பயப்பீதி இல்லாமலும் தமது மண்ணில் நடமாட இடமளிக்க வேண்டும். போர் முடிந்தும் போர் வீரர்கள் தொடர்ந்திங்கிருப்பது எப்பொழுதேனும் வன் செயல்களில் அவர்களோ மற்றவர்களோ ஈடுபடக் கூடும் என்பதை எடுத்துக் காட்டும்.
உண்மையில் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மக்கள் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு போன்றவை பொலிசினாலேயே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் சுதந்திரமான பொலிஸ் ஆணைக் குழுவை நியமிக்க முடியாமல் செய்துள்ளது 18வது திருத்தச் சட்டம்.
பொலிசார் இங்கு பெருமளவில் கொண்டு வரப்பட்டு இராணுவத்தினர் படிப்படியாகக் குறைக்கப்பட்டாலும் பொலிசார் இடையே தமிழ்ப் பேசும் பொலிஸ் அதிகாரிகள், அலுவலர்கள் இருப்பது மிக அவசியமாகும். அவ்வாறு இருந்தால்த்தான் அவர்கள் மக்கள் மனமறிந்து, தேவைகள் அறிந்து செயற்பட முடியும்.
மக்களின் காணிகளை மக்களுக்கே இராணுவம் மீளக் கையளிக்காது இருப்பது ஒரு மிகப் பெரிய சவாலாக இருக்கின்றது. ஒவ்வொரு குடிமகனும் தன் சொந்தக் காணியில்ப் போய் திரும்பவும் குடியிருக்க வழி அமைத்துக் கொடுக்க வேண்டும். எமது காணிகளை அரசாங்கமும், அரசியல்வாதிகளும், இராணுவமும் கையேற்பதை அடியோடு நிறுத்த வேண்டும்.
மில்ரோய் பெர்ணாண்டோ என்ற ஒரு தெற்கத்தைய அரசியல் வாதி வவுனியாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குடியிருக்கும் மக்களை வெளியேற்றிக் காணியைத் தனக்குத் தருமாறு நிர்ப்பந்தித்துக் கொண்டு வருகின்றார் என்று கேள்விப்படுகின்றேன். ஆகவே காணி சம்பந்தமான சவாலை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.
எமது வடமாகாணத்தைக் கட்டி எழுப்புவதாகில் நாம் என்ன செய்ய வேண்டும்? எமது வடமாகாணத்தை அபிவிருத்தி செய்ய, வலுப்படுத்த நாம் விஞ்ஞான ப+ர்வமாகக் காலடி எடுத்து வைப்பது உசிதமெனக் கருதுகின்றேன். 2002ஃ2003ம் ஆண்டுகளில் எமது தேவைகள் சம்பந்தமான ஒரு முழுமையான பல்தரப்பட்ட தேவைக் கணிப்பு வடமாகாணத்தில் நடாத்தப்பட்டது.
போரின் பின்னரான மக்கள் நிலை, அவர்களின் வாழ்வுநிலை அபிவிருத்தி போன்றன எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிய இந்தக் கணிப்பானது நடத்தப்பட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதைப் போல் மீண்டும் ஒரு முறை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியிடம் கோரினேன்.
ஆனால் அரசாங்க அமைச்சர் ஒருவருடன் சேர்ந்து நாம் கோரியதன் ஒரு சிறு பகுதியை மட்டும் ஆராய அவர் நடவடிக்கை எடுத்து வருகின்றார். அதாவது மனிதவளங்கள் பற்றி மட்டும் பரிசீலிக்கபட்டு வருகின்றது. வடமாகாணத்தின் முன்னேற்றமும் அபிவிருத்தியும் எம் கைவசம் இல்லாமல் வேறெங்கோ இருந்து கொள்கைகள் வகுத்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
உதாரணத்திற்கு ஜனாதிபதி செயலணி (Pவுகு) 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உருவாக்கப்பட்டது. அது பாதுகாப்பு அமைச்சின் தேவைக்கேற்பவே அதன் நோக்குக்கு அமையவே செயலாற்றி வந்துள்ளது. அண்மையில் அது நீக்கப்பட்டாலும் மத்தியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட திணைக்களம் அதன் வேலைகளைத் தற்போது கண்காணித்துக் கொண்டு வருகின்றது.
சுருக்கமாக எமது மாகாண சபையைச் சுதந்திரமாக இயங்க வைக்க மத்திய அரசாங்கம் தடைகளை உருவாக்கி வருகின்றது. எமக்கு ஆளணி பற்றாக்குறை, தகைமை பொருந்திய அலுவலர் பற்றாக்குறை என்று பல பற்றாக் குறைகள் உள்ளன. இது சம்பந்தமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள எமது வடமாகாண சபை பல விதங்களில் ஆராய்ந்து வருகின்றது.
நிதிப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய அலுவலர்களுடன் ஆராய்ந்து வருகின்றோம். வீட்டுத் திட்டங்களில் உள்நுழைந்திருக்கும் ஊழல்களை நீக்கி உரியவாறு தேவையுள்ளவர்களுக்கு வீடுகள் கிடைக்க வழிகள் வகுத்துக் கொண்டு இருக்கின்றோம். அநியாயமாக சிறையில் வாடும் கைதிகளின் நலம் நாடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.
பல சவால்கள் எம்மை நோக்கியுள்ளன. அவற்றை வருங்காலத்தில் நாம் யாவரும் சேர்ந்தே தடுத்து நிறுத்த வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். மேலும் பல சவால்களை நாளாந்தம் நீங்கள் முகம் கொடுக்க வேண்டிய கட்டத்தில் நீங்கள் இருக்கக் கூடும். அவற்றை எல்லாம் கலந்துறவாடி அவற்றிற்கான உரிய தீர்மானங்களைக் கண்டறிவதே இன்றைய கூட்டத்தின் குறிக்கோள்.
நான் சற்று நோயுற்ற நிலையில் இருக்கின்றேன். இப்பொழுதும் மருந்து எடுத்துக் கொண்டு இருப்பதால் நான் அதிக நேரத்திற்கு உங்களுடன் உறவாட முடியாததையிட்டு வருந்துகின்றேன். வரும் வருடம் எங்கள் யாவரையும் ஒன்று சேர்த்;து எங்கள் வடமாகாணத் தமிழ்ப் பேசும் மக்களின் நலம் நாடி எங்கள் யாவரையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வழி அமைப்பதாக!
இவ் வருடத்தைய பிரிவுகள், பிரிவினைகள், ஒளிவு மறைவுகள், எரிச்சல் புகைச்சல்கள் வரும் வருடத்தில் மறைந்து அன்பும் புரிந்துணர்வும் மலர்வதாக என்று கூறி என் இந்தச் சிற்றுரையை முடித்துக் கொள்கின்றேன். 
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnu5.html

Geen opmerkingen:

Een reactie posten