தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 december 2014

கடற்படையினரின் மத்தியில், மக்களின் உணர்வுக் கொந்தளிப்புடன் எழுவைதீவு மீனவரின் உடல் நல்லடக்கம்!

இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகராக டோரிஸ் நியமனம்
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 03:50.18 PM GMT ]
இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராக ஜேம்ஸ் டோரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இலங்கையிலும், மாலைதீவிலும் செயற்படவுள்ளார்.
தற்போதைய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீன் தமது பதவிக்காலம் முடிவடைந்து செல்லும் நிலையிலேயே டோரிஸின் நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1995ம் ஆண்டு இராஜதந்திர சேவையில் இணைந்தார்.
இதன்பின்னர் பெருவில் தூதுவராக செயற்பட்டார்.
அத்துடன் ரஸ்யா, கொலம்பியா போன்ற நாடுகளிலும் சேவையாற்றியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRWKaio7.html
சிவாஜிலிங்கம் - அனந்தி ஆகியோரின் புகைப்படங்களை பிரசுரித்து ஜனாதிபதிக்கு ஆதரவான பொய்ப்பிரசாரங்கள்
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 04:07.34 PM GMT ]
வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியேரின் புகைப்படங்களை பிரசுரித்து ஜனாதிபதிக்கு ஆதரவான தேர்தல் பிரசாரங்கள் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம்- திருகோணமலை பகுதியில் வீரபுரம் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதிக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மைத்திரி ஆட்சிக்கு வந்தால் வடக்கிலுள்ள விகாரைகளை உடைப்பேன் என சிவாஜிலிங்கம் கூறியதாகவும்,
மைத்திரி ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதி மஹிந்தவை மின்சாரக் கதிரையில் ஏற்றுவேன் என திருமதி அனந்தி சசிதரன் கூறியதாகவும் அவர்களுடைய புகைப்படங்களை பிரசுரித்து அதில் சிங்கள மொழியில் குறித்த வாசகங்களை எழுதியே, பிரச்சாரத்திற்கான பிரசுரங்கள் உருவாக்ப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தாங்கள் அவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களை வெளிப்படையாக எங்கும் பேசியதில்லை. என தெரிவித்ததுடன். ஜனாதிபதி இனவாதத்தை தூண்டிவிட்டு மீண்டும் தனது காட்டாட்சியை நிலைத்திருக்கச் செய்வதற்கு முயற்சிக்கின்றார் என தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRWKaipy.html

கடற்படையினரின் மத்தியில், மக்களின் உணர்வுக் கொந்தளிப்புடன் எழுவைதீவு மீனவரின் உடல் நல்லடக்கம்!
[ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014, 04:09.33 PM GMT ]
கடற்படைப் படகினால் மோதிப்படுகொலை செய்யப்பட்ட மீனவரான, எழுவைதீவு புனித தோமையார் கடற்றொழிலாளர் சங்கத்தின் உபதலைவருமான அலெக்ஸாண்டர் அன்ரனி ஜேசுதாசனின் உடல் கடற்படையினரின் உச்ச கண்காணிப்பின் மத்தியில், மக்களின் உணர்வுக் கொந்தளிப்புடனும், கண்ணீருடனும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனும் கலந்து கொணடார்.
மரணமான மீனவரின் இறுதிக் கிரியைகள் இன்று 22.12.2014 திங்கட்கிழமை ஊர்காவற்றுறை, எழுவைதீவில் இடம்பெற்றன.
இதில் கலந்துகொண்டு மாகாணசபை உறுப்பினரான பா.கஜதீபன் இரங்கலுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தெரிவிக்கையில்
பெரிய குடும்பமொன்றின் தலைவரான அன்ரனி ஜேசுதாசன் அவர்கள் கடற்றொழிலை மேற்கொண்டே தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறார். வழமை போல தொழிலுக்குச் சென்ற அவரின் படகை கடற்படையினரின் அதிவேகப் படகினால் மோதி விட்டு, அவர் கடலில் வீழ்ந்து தத்தளிக்கும் போது காப்பாற்றாமல் சென்றுள்ளனர்.
சுமார் முக்கால் மணி நேரத்தின் பின்னரே ஜேசுதாசன் அவர்கள் தனது நிலையை உறவினர்களுக்கு அறிவித்த போது அவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமாகியுள்ளார்.
கடற்படையினர் தம்மால் மோதப்பட்டவரை, மனிதாபிமானத்துடன் உடனே காப்பாற்றியிருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்க முடிந்திருக்கும். ஆனால் அவரைக் காப்பாற்றாமல் ஓர் கொலைக்கு சமமான மரணத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
தம்மில் ஒருவரான தமது உறவு அநியாயமாக கொலை செய்யப்பட்டதற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என மக்கள் கொந்தளிக்கின்ற சூழ்நிலையில், மக்களின் உணர்வுகளை மதிக்காமல், இன்று இங்கு வந்துள்ள கடற்படை உயரதிகாரிகள், இவ்விடயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாமெனவும், இழப்பீடுகளும், வேலைவாய்ப்பும் தருவதாகவும், இவ்விடயத்தை அப்படியே விட்டுவிடுமாறும் கூறியுள்ளனர்.
ஆனால் இதை ஏற்காத மக்கள் அதை எழுத்தில் தருமாறு கேட்டவுடன் அதிகாரிகள் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் நடந்துகொண்டுள்ளனர்.
எமது உறவுகளை எதுவும் செய்யலாம், யாரும் எதுவும் கேட்க முடியாது எனும் எதேச்சதிகார சிந்தனை இங்கும் நிலவியுள்ளது.
இதைக் கண்டித்து மக்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கும் மனநிலையில் காணப்பட்ட போதும், காலச்சூழ்நிலை கருதியும், இறுதி அடக்க நிகழ்வு கருதியும் பின்னர் அது கைவிடப்பட்டுள்ளது.
பெரிய குடும்பமொன்றின் குடும்பஸ்தரான ஜேசுதாசன் அவர்களின் கொலைக்கு சட்டரீதியாக அரசினால் வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகள் உரிய விதத்தில் உடனே வழங்கப்படுவதுடன், கொலைக்கான நீதியும் வழங்கப்பட வேண்டும் என இவ்விடத்தில் நான் கோரிக்கையொன்றை விடுக்க விரும்புவதுடன், வழமைபோல இவ்விடயம் அரசினாலும்,படையினராலும் ஏமாற்றப்படுமானால், நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக எமது மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் போது, அதில் நானும் கலந்து கொண்டு போராடுவேன். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பின்னர் மக்களின் கடற்படைனருக்கு எதிரான மனக்கொந்தளிப்பின் மத்தியிலும், கடற்படையினர் மற்றும் புலனாய்வுப்பிரிவினரின் கடும் கண்காணிப்பிலும் அன்ரனி ஜேசுதாசனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மாகாணசபை உறுப்பினருடன் வல்வெட்டித்துறை நகரசபை உப தலைவர் க.சதீஷும் உடன் சென்றிருந்தார்.
கடற்படையின் விபரீத செயலே மீனவரின் உயிரைப் பறித்தது! எழுவைதீவு மீனவர்கள் விசனம்
கடந்த 19ம் திகதி அதிகாலை இனிய கனவுகளோடு முதுமையையும் பாராமல் கடலின் மடியில் தவழ்ந்து நித்தம் உழைத்தவரும்  கடற்படையின் விபரீத செயலுக்கு இரையான எழுவைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் அமரர் அலெக்சாந்தர் அன்ரனி யேசுதாசன் (61 வயது) அவரின் பூதவுடலுக்கு சி.சிறீதரன் எம்.பி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினருடன் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினமும் நேரடியாக எழுவைதீவுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் உயிர் நீத்த மீனவரின் மரணக் கிரியைகளுக்காக ஒரு தொகை நிதியுதவியினையும் குடும்பத்தாரிடம் வழங்கி வைத்தனர்.
பின்னர் மரணம் சம்பவிப்பு தொடர்பாக மீனவர்கள் தெரிவித்த கூற்றுக்களின் பிரகாரம், உயிரிழந்த அலெக்சாந்தர் அன்ரனி யேசுதாசன் மனைவியை இழந்த நிலையிலும்  தன் பிள்ளைகள் அறுவரையும் கடின உழைப்பால் அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்து வந்துள்ளார்.
அது மட்டுமல்ல இவருடைய சகோதரர்களில் ஒருவர் எழுவைதீவில் 22 பேர் கடலில் கொல்லப்பட்டபோது  அதில் கொலையுண்டார்.
மற்றவர் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். அதன் பின்னர் தான் பெற்ற பெண் பிள்ளைகள் நால்வருக்குமான வரனைத் தேடுவதற்காக தன் முதுமையை பொருட்படுத்தாமல் அயராது பனியிலும் மழையிலும் புயலிலும் கடலன்னையையே தொடர்ச்சியாக வலம் வந்த பொறுப்பு வாய்ந்த சுயநலமற்ற, சோர்வடையா ஓர் கடற்றொழிலாளராக எழுவைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் அமரர் அலெக்சாந்தர் அன்ரனி யேசுதாசனைப் பார்க்கிறோம்.
சம்பவம் நடந்த 19ம் திகதி அதிகாலை 5 மணியளவில் காரைநகருக்கும் எழுவைதீவுக்கும் இடையில் இருக்கும் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் வேளையில் கடற்படையின்    படகு மோதியதில் கடுமையான    காயங்களுக்குள்ளாகியிருந்தார்.
அவரை மோதிய கடற்படைப் படகும் தப்பிச் சென்று விட்டது. கடுமையான காயங்களோடு படகும் சேதமடைந்த நிலையில் தன் கழுத்திலே தொங்கவிடப்பட்ட கைத்தொலைபேசி வாயிலாக தன் நிலைமையை தன்னுடைய பிள்ளைகளுக்குத் தெரிவித்த வேளை, சக மீனவர்களின் துணையோடு கரையேற்றப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட போது அவரின் ஆத்மா தன் பெண் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு பற்றிய சிந்தனையோடு அவர் உடலை விட்டு நீங்கியது.
கடற்றொழிலையே ஜீவாதாரமாக கொண்டு வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ளும் தீவக வாழ் மீனவர் சமூகத்துக்கு அலெக்சாந்தர் அன்ரனி யேசுதாசனின் இழப்பு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
யுத்தம் முடிவுற்று  6 வருடங்களைக் கடந்த நிலையில் கூட மீனவர்கள் பயமின்றி தொழில் செய்ய முடியாத நிலமை தோன்றியிருக்கின்றது. இதற்கு சான்றாக அப்பாவி மீனவரின் மரணம் சான்றாக அமைகிறது.
முறையற்ற விதத்தில் தம் சாகசங்களை நிகழ்த்த கடலில் தம் உடலை வருத்தி பிழைக்கும் ஏழை மீனவர்களா? கடற்படையினர்க்கு கிடைத்தது.
சம்பவம் நடந்த சமயத்தில் காயமடைந்த அலெக்சாந்தர் அன்ரனி யேசுதாசனை கடற்படையினர் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லத்தவறி விட்டனர். என்பதும் எமக்கு மன வேதனையைத் தருகின்றது.
அபிவிருத்தி எனும் கோசம் போடுபவர்கள் தீவகத்தின் அபிவிருத்தியில் எதைச் செய்தார்கள். ஒழுங்கான முறையில் போக்குவரத்து சீராக இருந்திருந்தால் நாமே அலெக்சாந்தர் அன்ரனி யேசுதாசனின் இழப்பைத் தவிர்த்திருப்போம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஆகியோரை கடற்படையினர் பின்தொடர்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRWKaipz.html

Geen opmerkingen:

Een reactie posten