தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 november 2014

மகிந்தவிடம் காணியுரிமை கேட்க முடியாதவர்கள்தான் மக்களிடம் அவருக்காக வாக்கு கேட்கிறார்கள்!- மனோ கணேசன்!

60 பவுன் தங்க நகைகளுடன் இலங்கையர் சென்னை விமான நிலையத்தில் கைது
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 05:36.40 AM GMT ]
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு 60 பவுன் தங்க நகைகளை கடத்திச் சென்ற ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை கொழும்பில் இருந்து ஒரு விமானம் சென்றது.
இதில் பயணம் செய்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த அகமது அனுப் (வயது 23) என்பவர் சுற்றுலா விசாவில் சென்றிருந்தார்.
இவர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் வெள்ளி முலாம் பூசப்பட்ட நகைகள் இருந்தன. இவை கவரிங் நகைகள் என்றும் சென்னையில் விற்க கொண்டு வருவதாக கூறினார். ஆனால் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அந்த நகைகளை பரிசோதனை செய்து பார்த்தனர்.
அப்போது தங்க நகைகள் மீது வெள்ளி முலாம் பூசப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவர் மொத்தம் 60 பவுன் தங்க நகைகள் கடத்தி வந்துள்ளார். இவற்றின் மதிப்பு இந்திய ரூ.14 லட்சத்து 50 ஆயிரம்.
இது தொடர்பாக இலங்கை வாலிபர் அகமது அனுப்பை கைது செய்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYfx5.html
தனக்குத்தானே குழிபறிக்கும் அரசாங்கம்! வடமத்திய மாகாண சபை கவிழ்ப்பு?
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 05:55.52 AM GMT ]
மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவானவர் என்ற சந்தேகத்தின் பேரில் பதவி பறிக்கப்பட்ட வடமத்திய மாகாண அமைச்சர், அந்த மாகாண சபையை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
வடமத்திய மாகாண அமைச்சர் பேசல ஜயரத்தினவின் அமைச்சுப் பதவி ஜனாதிபதியின் உத்தரவின் பேரி்ல் பறிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்தப் பதவியை தற்போதைக்கு மாகாண முதலமைச்சர் ரஞ்சித் வைத்துக் கொண்டுள்ளார்.
இது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மாகாண அமைச்சுப் பதவியை எதிர்பார்த்திருந்த பலர் கடும் ஏமாற்றத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்றைய ஊடக சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்திருந்த முன்னாள் மாகாண அமைச்சர் பேசல ஜயரத்ன, மிக விரைவில் வடமத்திய மாகாண சபை கவிழும் என்று தெரிவித்துள்ளார்.
தன்னைப் போலவே இன்னும் சில மாகாண சபை உறுப்பினர்களும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருந்தாலும், தற்போதைக்கு அவர்கள் தங்களை வெளிக்காட்டாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தகவல்களின் பிரகாரம் டிசம்பர் நடுப்பகுதியில் வரும் மாகாண சபை வரவு செலவுக் கூட்டத்தொடரில் வடமத்திய மாகாண சபை கவிழ்க்கப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தொடர்புபட்ட செய்தி
http://www.tamilwin.com/show-RUmszBRZKYfx6.html
தபால் மூல வாக்களிப்பு டிசம்பரில்- திகதி குறிக்க சோதிடர்களை சந்திக்கவில்லை: மஹிந்த
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 05:57.35 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு டிசம்பர் 23, 24ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு தற்பொழுது தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்று வருகிறது.
இதன்போதே தேர்தல்கள் ஆனையாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
திகதி குறிக்க சோதிடர்களை சந்திக்கவில்லை: மஹிந்த தேசப்பிரிய
சோதிடரின் ஆலோசனையின் பிரகாரம் தேர்தல் திகதியை தீர்மானிக்கவில்லை என்றும் அந்த குற்றச்சாட்டுடன் வெளியான அறிக்கையை மறுப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYfx7.html
மகிந்தவிடம் காணியுரிமை கேட்க முடியாதவர்கள்தான் மக்களிடம் அவருக்காக வாக்கு கேட்கிறார்கள்!- மனோ கணேசன்
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 05:57.36 AM GMT ]
மலைநாட்டில் காணி, வீட்டு உரிமையையும், நுவரேலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபை ஆட்சியுரிமையையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் பேரம் பேசி கேட்டு வாங்கி கொடுக்க முடியாதவர்கள்தான், அவருக்காக மலைநாட்டு மக்களிடம் வந்து வாக்கு கேட்கிறார்கள்  என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடத்திய, மலையக சிந்தனையாளர் எம். வாமதேவனின் "மலையகம்-சமத்துவ அபிவிருத்தியை நோக்கி" என்ற நூல் வெளியீட்டு விழாவில் கருத்துரை வழங்கிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
மலையக மண் பெற்றெடுத்துள்ள அறிவுஜீவி வாமதேவன். அவர் ஆய்வாளர். எழுத்தாளர். அத்துடன் சமூக பற்றாளர். இவர்கள் போன்றவர்களால்தான் மலையக எதிர்காலம் பற்றி கொஞ்சமாவது நம்பிக்கை ஒளி தெரிகிறது.
அவர் தனது இந்நூலில் "சமர்ப்பணம் - என் அம்மாவுக்கு" என்று குறிப்பட்டுள்ளார். அவர் தனது அறிவையும், ஆற்றலையும் சமூக உணர்வுடன் தன் தாய்க்கு மட்டுமல்ல, தன் தாய் மண்ணுக்கு, தன் தாய் இனத்துக்கு, தன் தாய் மொழிக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் என எனக்கு தோன்றுகிறது.
அபிவிருத்தி என்றால் அது அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சாரம் என்ற அனைத்து துறைகளிலும் சமச்சீராக நடைபெற வேண்டும் என்று கூறுகிறார். அதுபோல, பல இனங்கள் வாழும் நாட்டிலே அபிவிருத்தி என்பது எல்லா இனப்பிரிவுகளுக்கும் சமத்துவமாக கிடைக்க வேண்டும் என்றும், அதுதான் சமத்துவ அபிவிருத்தி என்றும் கூறுகிறார்.
இந்த நாட்டிலே மலையக தமிழருக்கு சமத்துவ அபிவிருத்தி கிடைப்பதில்லை. இந்த நாடு ஒரு தீவு. இந்த தீவுக்குள்ளே இன்னொரு தனித்தீவாக மலையகம் திகழுகிறது. இந்த நாட்டின் ஏனைய உயர் அபிவிருத்திகள் மலையகத்தை அடையாமல், அது தேசிய நீரோட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டில் ஏழாயிரம் (7,000) முதல் பத்தாயிரம் (10,000) பேருக்கு ஒரு பிரதேச சபை, பிரதேச செயலகம் என்று இருக்க, நுவரேலியாவில் மாத்திரம், அது ஏன் 140, 000 பேருக்கு ஒரு பிரதேச சபை, பிரதேச செயலகம் என்று இருக்கின்றது என்ற கேள்வியை வாமதேவன் எழுப்பியுள்ளார்.
அம்பகமுவை, நுவரேலியா ஆகிய இரண்டு நுவரேலியா மாவட்ட பிரதேச சபைகள்தான், பிரதேச செயலகங்கள்தான் இந்தநாட்டிலேயே மிகப்பெரிய பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள். ஒவ்வொன்றிலும் 150,000 பேர் வாழ்கிறார்கள்.
பொகவந்தலாவையில் இருந்து கினிகத்தேனை வரை, அம்பகமுவை பிரதேச சபை பரந்து விரிந்து இருக்கிறது. அதேபோல், ஹட்டனுக்கு மேலே இருந்து கந்தபொல எல்லை வரை நுவரேலியா பிரதேச சபை பரந்து விரிந்து இருக்கிறது. ஏன் இந்த பாரபட்சம்?
இவற்றை பிரித்து ஒவ்வொன்றிலும் குறைந்த பட்சம் ஆறு பிரதேச சபைகளை உருவாக்கி தரும்படி நீண்ட காலமாக மலையகம் கோரி வருகிறது. அதன்மூலம் வாமதேவன் சொல்வது போல பிரதிநிதித்துவ குறைப்பாட்டை நீக்குங்கள் என்கிறோம். ஆனால், ஒன்றும் நடக்க வில்லை. இதோ, அதோ என்கிறார்கள். வரும், ஆனால் வாராது என்பது போல் அது இதுவரையில் நடைபெறவில்லை.
தமிழனுக்கு அங்கே மென்மேலும் பிரதேச சபைகளும், அவற்றில் மந்திரிகளும், அதன்மூலம் ஆட்சியுரிமையும் கிடைக்கக்கூடாது என பேரினவாதம் நினைக்கின்றது. அதுதான் உண்மை.
அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் பகுதிகளை சேர்த்து ஒரு கடலோர நிர்வாக அலகு கேட்கிறது. அதுபற்றிய சரி, பிழை எனக்கு தெரியாது.
ஆனால், அதையும் பேரினவாதம் மறுக்கிறது. வடக்கு, கிழக்கு மகாணங்களை சேர்த்து தரும்படி அங்கே தமிழர்கள் கேட்கிறார்கள். அதையும் பேரினவாதம் மறுக்கிறது. ஆகவே வடக்கிலும், கிழக்கிலும் சேர்த்து கேட்டாலும் இல்லை. மலையகத்தில் இருப்பதை பிரித்து கேட்டாலும் இல்லை. இதுதான் இந்நாட்டில் இன்று தமிழ் பேசும் மக்களின் நிலைமை.
வடக்கில், கிழக்கில் தமது நிலங்களை கூட்டிணைத்து தனி நிர்வாக அலகு கோருவதைதானே மறுக்கிறீர்கள். நாங்கள் இங்கே மலையக தமிழர்களின் மிகப்பெரிய பிரதேச சபைகளை இன்னமும் சிறிய அலகுகளாக பிரித்துத்தானே கேட்கிறோம்.
அதுவும் இந்த நாட்டிலே மற்ற இடங்களில் 10,000 பேருக்கு ஒன்று என இருக்கின்றனவே. அதைதானே கேட்கிறோம். அதையேன் தர மறுக்கிறீர்கள் என ஆளுவோரிடம் தட்டி கேட்க இங்கே மலையகத்தில் எவருக்கும் திராணியில்லை.
அதுபோல் மகிந்த சிந்தனையிலும், தேர்தல் கால வாக்குறுதிகளிலும், வரவு-செலவு திட்ட உரையிலும் சொல்லப்பட்ட வீட்டு உரிமையையும், தரிசு நில காணி பகிர்ந்து அளிப்பதையும் ஏன் தர மறுக்கிறீர்கள் என ஆளுவோரிடம் தட்டி கேட்கவும் இங்கே மலையகத்தில் எவருக்கும் திராணியில்லை.
இவற்றையெல்லாம் தர்க்கரீதியாக எடுத்து கூற அறிவார்ந்த சிந்தனையும் இல்லை. தெரிந்தது எல்லாம் மகிந்த சிந்தனைதான். அங்கே இந்த காணி, வீட்டு உரிமைகள் பற்றி சொல்லப்பட்டுள்ளன. அதையும் படித்து அறிவதில்லை.
இந்த இலட்சணத்தில், ஆளுவோருக்கு மீண்டும், மீண்டும் வாக்கு கோரி மலைநாட்டு மக்களிடம் வந்து வாக்கு கேட்க மட்டும் தெம்பு, திராணி, எல்லாம் இருக்கிறது. இதென்ன கூத்து? அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.
அங்கேயே இருங்கள். அனுபவியுங்கள். கொஞ்சம் மக்களையும் பாருங்கள். அநீதிகளை சுட்டிகாட்டினால் என்னை பார்த்து அறிக்கை அரசியல் செய்கிறார் என்று குற்றஞ்சாட்டி தப்ப முயல்கிறீர்கள். இது அறிக்கை அரசியல் இல்லை. அறிவு அரசியல். உண்மை அரசியல்.
எத்துனை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நான் இந்த உண்மைகளை மூடி மறைக்க விடாமல் தடுத்து நின்று நான் எடுத்து கூறுகிறேன் என்பது எனக்குதான் தெரியும். நான் உண்மைகளை கூற வேண்டும் என இந்த நாட்டின் நாலாபுறமும் வாழும் தமிழ் பேசும் மக்கள் விரும்புகிறார்கள்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYeoy.html

Geen opmerkingen:

Een reactie posten