தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 13 november 2014

தமிழ் முஸ்லிம் மக்கள் சர்வதேசத்திடம் முறையிடக்கூடாது!- விக்கிரமபாகு!

கொஸ்லாந்தையில் மீண்டும் மண்சரிவு அபாயம்: பலர் இடம்பெயர்வு
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 03:02.04 PM GMT ]
மீண்டும் மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதன் காரணமாக கொஸ்லாந்த தோட்டத்தை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை இலங்கையின் மத்திய மாகாண பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.
102 குடும்பங்களை சேர்ந்த 408 பேர் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த பிரதேசத்தில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவக அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொஸ்லாந்த, மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் பலர் கொல்லப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கானோர் அகதிகளாகினர்.
இந்தநிலையில் அருகில் உள்ள கொஸ்லாந்த தோட்ட மக்களும் தமக்கு மண்சரிவு அபாயம் உள்ளதாக கூறி அகதி முகாம்களில் தங்கியிருந்தனர்.
எனினும் நேற்றுடன் அனைவரும் தமது இருப்பிடங்களுக்கு திரும்பலாம் என்றும் ஆபத்து இல்லை என்றும் இலங்கை அரசாங்கம் அறிவித்தது.
இதனையடுத்து அங்கு சென்ற மக்கள் இன்று காலை தமது தோட்டப் புறத்தின் மலைப் பகுதியில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளமையை அடுத்து மீண்டும் இடம்பெயர்ந்தனர்.
இந்தநிலையிலேயே அவர்கள் தேவாலயம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmv7.html
பொது எதிரணிக் கூட்டணியில் ததேகூ இன்னும் பங்குபெறவில்லை!- இரா. சம்பந்தன்!
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 03:06.13 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிடுவதற்கான பொதுக் கூட்டணியில், 'தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்கவில்லை' என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார். 
குறித்த பொதுக் கூட்டணிக்குள்ளேயே இன்னும் சில விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட வேண்டியிருப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.
பெரும்பாலும் எதிரணியினரை உள்ளடக்கிய பொதுக் கூட்டணியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியிருப்பதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
இதனிடையே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அரசாங்கத் தரப்பிலிருந்து வந்திருக்கின்ற அழைப்பை பரிசீலிக்காமல் நிராகரிக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.
அவர்களுடைய செயற்பாட்டில் எமக்கு திருப்தி இல்லாமல் இருந்தாலும் கூட, அவர்கள் ஓர் அழைப்பை விடுக்கின்ற போது நாங்கள் அதுபற்றி சிந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது என்றார் சம்பந்தன்.
ஜனாதிபதி தேர்தல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூடி ஆராய்ந்து யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் முடிவொன்றை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் வேட்பாளரை தீர்மானிக்கின்ற போது, தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்கு நியாயமான, நிரந்தரமான, நடைமுறைப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வு பற்றியும் மக்களின் அன்றாட தேவைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் பற்றியும் கருத்தில் கொள்ளப்படும் என்றும் இரா. சம்பந்தன் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmwy.html
தமிழ் முஸ்லிம் மக்கள் சர்வதேசத்திடம் முறையிடக்கூடாது!- விக்கிரமபாகு
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 03:12.46 PM GMT ]
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமக்கு நீதியான தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் இலங்கையின் தெற்கில் உள்ள ஜனநாயக மற்றும் இடதுசாரி சக்திகளுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று நவசமாஜ கட்சியின் பிரதான செயலாளர் விக்ரமபாகு கருணாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம் பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
இதற்காக தெற்கில் உள்ள ஜனநாயக மற்றும் இடதுசாரி சக்திகளுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இதனை விடுத்து, இந்தியாவிடமோ, சர்வதேசத்திடம் சென்று முறையிடுவதனாலே எந்தவித பயனும் ஏற்பட போவதில்லை என்று விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmwz.html

Geen opmerkingen:

Een reactie posten