தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 maart 2015

தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம் என கொக்கரிக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு வேல்முருகன் கண்டனம்

இலங்கை அரசின் நடவடிக்கைகளை வரவேற்றுள்ள உலக தமிழர் பேரவை முன்வைத்துள்ள அவசர கோரிக்கைகள்
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 01:11.36 AM GMT ]
இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வரும் நல்லெண்ண திட்டங்களை உலக தமிழர் பேரவை வரவேற்றுள்ளது. 
அதேநேரம் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வை காண முயற்சிக்க வேண்டும் என்றும் அந்தப் பேரவை கோரியுள்ளது.
இலங்கையில் பேச்சு சுதந்திரம் மற்றும் நீதித்துறையில் தற்போது உரிய முனைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அரசியல் அமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதன் ஊடாக இலங்கையின் அரசியலில் நீண்டகால நலனை எதிர்பார்க்கலாம்.
வடக்கு மாகாணத்துக்கு சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டமை முக்கியமான விடயமாக அமைந்துள்ளது.
எனினும் தமிழ் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகத்தினரின் பிரச்சினைகளுக்கான தீர்வில் தாமதம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றல், காணாமல் போனோர் விடயத்தில் நீதி கிடைக்கச் செய்கின்றமை போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கம் உரிய கவனத்தை செலுத்தவேண்டும்.
அத்துடன் வடக்கு கிழக்கில் அதிக இராணுவ பிரசன்னம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துதல் அவசியம்.
அதேநேரம் பல ஆண்டுகளால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் உலக தமிழர் பேரவை கோரியுள்ளது.
இதேவேளை கடந்த வாரம் ஜனாதிபதி வடக்குக்கு சென்றிருந்த போது அங்குள்ள மக்கள் அடைந்துள்ள துன்பங்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்.
இந்தநிலையில் குறித்த விடயங்களில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று உலக தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDTaSUmq2I.html

தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம் என கொக்கரிக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு வேல்முருகன் கண்டனம்
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 12:42.49 AM GMT ]
தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இலங்கையின் பிரதமர் சிங்களப் பேரினவாதி ரணில் விக்ரமசிங்க கொக்கரித்திருப்பது வன்மையாக கண்டனத்துக்குரியது. என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அறிக்கை:
பாக் நீரிணைப் பகுதியில் இலங்கை எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இலங்கையின் பிரதமர் சிங்களப் பேரினவாதி ரணில் விக்கிரமசிங்கே கொக்கரித்திருப்பது வன்மையாக கண்டனத்துக்குரியது.
1974 ம் ஆண்டு இந்தியா- இலங்கை இடையேயான கச்சதீவு ஒப்பந்தத்தில் பிரிவு 5 மற்றும் 6-ல் "கச்சதீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்கள் பாரம்பரிய உரிமைகளில் மீன்பிடிக்கலாம், எந்தத் தடையும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதையெல்லாம் மதிக்காத சிங்களப் பேரினவாத அரசுகள், எல்லை தாண்டினார்கள் என்ற ஒற்றை பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் உலகில் எங்குமே இல்லாத பெருங்கொடுமையாக 30 ஆண்டுகாலமாக தமிழக மீனவ உறவுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 700க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்திருக்கிறது.
இன்று வரை தமிழக மீனவர்களை நடுக்கடலில் விரட்டியடிப்பது, தாக்குவது, சித்தரவதை செய்வது; படகுகளை பறிமுதல் செய்வது என சிங்கள ராணுவம் வெறியாட்டம் போடுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.
இப்படி 700க்கும் அதிகமான தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த சிங்கள வெறியாட்டத்தை நியாயப்படுத்துகிற வகையில், இவையெல்லாம் ஆயுதக் கடத்தலின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று ரணில் விக்ரமசிங்க பேட்டியளித்திருப்பது கண்டனத்துக்குரியது. ரணில் விக்ரமசிங்கவின் இக்கருத்து தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
வாழ்வாதாரத்துக்காக நித்தம் நித்தம் செத்து பிழைத்து கடலில் தொழிலுக்குப் போகிற மீனவர்களை ஆயுதக் கடத்தல்காரர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று ரணிலைப் போன்ற சிங்கள பேரினவாதிகள் போகிற போக்கில் கொச்சைப்படுத்துவது கடுமையான கண்டனத்துக்குரியது.
பாக் நீரிணைப் பகுதியில் மீனவர்கள் எல்லை தாண்டி செல்லக் கூடாது என்று 1983ம் ஆண்டு இந்திய மத்திய அரசு ஒரு தற்காலிகத் தடை விதித்தது.
அந்தத் தடையை நீக்குவதன் மூலமாக 1974ம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி கச்சதீவு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் தமிழக மீனவர்களுக்கு பாரம்பரியமாக மீன்பிடிக்க உரிமை உண்டு என்பதை மத்திய அரசு நிலைநாட்டுவது உடனடித் தேவையாகும்.
தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமையுள்ள பகுதிகளில் மீன்பிடிப்பது என்பது எப்படி எல்லை தாண்டி வருவதாகும்? அப்படி வருபவர்களை சுட்டுததள்ள சட்டத்தில் இடம் இருக்கிறது என்று மிரட்டுகிற ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்திய மத்திய அரசு தன்னுடைய கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.
எல்லை தாண்டுவதாக கூறி காக்கை குருவிகளைப் போல 700க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த சிங்களக் கடற்படை மீது இந்திய மத்திய அரசு வழக்கு தொடர வேண்டும்.
இலங்கைக்கு செல்ல இருக்கிற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்திக்கும் போதும் தம்முடைய கண்டனத்தை பதிவு செய்வதுடன் தமிழக மீனவர்களுக்கு கச்சதீவு சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தையில் உறுதிப்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.’’
http://www.tamilwin.com/show-RUmtyDTaSUmq2G.html


Geen opmerkingen:

Een reactie posten