தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 maart 2015

காணாமற் போனவர்கள் இரகசிய முகாம்களில் உள்ளனரா? ரணிலிடம் டக்ளஸ் கேள்வி

இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்: சர்வதேசத்திடம் தென் ஆபிரிக்கா வேண்டுகோள்
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 03:42.59 AM GMT ]
இலங்கை குறித்த விவகாரங்களுக்கு அந்நாட்டு மக்கள் மாத்திரமே தீர்மானம் எடுக்க வேண்டும் என தென் ஆபிரிக்கா தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அந்நாட்டு சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கொஆனா மாஷாபனே தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பிலான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் அந்நாட்டு மக்களுக்கு மாத்திரமே உண்டு, இதில் சர்வதேச சமூகம் எந்தவித தலையீடும் செய்ய கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்துக்கு இலங்கையில் தலையிட உரிமையில்லை எனவும், சர்வதேசம் இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை மாத்திரமே வழங்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவரின் இந்த கருத்துக்கு நமீபிய அரசாங்கமும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இலங்கைக்கு தன் அரசாங்கத்தாலான முழு உதவிகளையும் வழங்கும் என அந்நாட்டு நீதி அமைச்சர் உமோனி நுஜோமா தெரிவித்துள்ளார்.

இலங்கை-இந்திய மீனவர் பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 03:54.19 AM GMT ]
இலங்கை மீனவர்களுடனான 3ம் கட்ட பேச்சுவார்த்தையை எதிர்வரும் 12ம் திகதி நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளதாக இலங்கை கடற்றொழில் அமைச்சின் செயலாளர் நிமால் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையை எதிர்வரும் 15ம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த வருடம் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
எனினும் தீர்வு எட்டப்படாத நிலையில் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் 12ம் திகதி நடத்தலாம் என இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதினால் இப்பேச்சுவார்த்தையை பிற்போடுமாறு தமிழக அரசு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக வேண்டுகொள் விடுத்துள்ளது என கடற்றொழில் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான உறவின் இடைவெளியை மூடுவதே எமது நோக்கம்: இராப்போசன விருந்தில் சுஷ்மா
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 04:32.37 AM GMT ]
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றிரவு இராப்போசன விருந்தளித்தார்.
இந்த இராப்போசன விருந்தில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர்,  இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ்,
இந்திய வெளிவிவகார அமைச்சராக முதல்முறையாக இலங்கைக்கு வந்துள்ளேன். ஆனால் இலங்கை எனக்கு புதியது அல்ல. நான் இங்கு பலமுறை வந்துள்ளேன்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கி இந்த அழகிய தீவுக்கு வந்திருக்கிறேன்.
முதலில் நான் இலங்கை அரசாங்கத்துக்கும், எனக்கும் எனது குழுவினதுக்கும் வெளிவிவகார அமைச்சர் அளித்த விருந்துக்காகவும்  எனது உண்மையான நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இன்று ஹோலி பண்டிகை. ஹோலி ஒரு நிறங்களின் விழா என்பதை அறிவீர்கள். இந்தியாவில் கொண்டாடப்படும் இந்த விழாவைக் கைவிட்டு விட்டு நாங்கள் வந்திருக்கிறோம்.
இந்த பண்டிகை வசந்த காலத்தின் வருகையின் குறியீடாகும். மகிழ்ச்சியின் முன்னறிவிப்பாகும். எமது இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலையின் பிரதிபலிப்பாக இது இருக்கும் என நம்புகிறேன்.
ஹோலி இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் பல கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. அண்மையில் இலங்கையிலும் இந்தியாவிலும், நடந்த தேர்தல்களில் மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்தது வரலாற்றில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இது இருதரப்பு உறவுகளில் புதிய ஊக்கத்தைக் கொண்டு வந்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள், வரலாறு, புவியியல்,  கலாசார ரீதியாக பின்னிப் பிணைந்துள்ளன.
இந்த உறவுகள் அயல்நாடு, நண்பர்கள் என்பதைக் கடந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.
இதேவேளை, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவின் இடைவெளியை மூடுவதே எமது நோக்கம்: சுஷ்மா சுவராஜ்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு இடைவெளியை மூடும் வகையில் தமது விஜயம் உயர்மட்ட விஜயமாக அமைந்துள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கல சமரவீர நேற்று இரவு அளித்த விருந்துபசாரத்தின் போதே சுஷ்மா இதனைக்குறிப்பிட்டார்.
ஏற்கனவே இந்தியாவுக்கு, இலங்கை ஜனாதிபதி மேற்கொண்ட விஜயம் வெற்றியுடன் முடிவடைந்ததாக சுஷ்மா தெரிவித்தார்.
இலங்கையிலும் இந்தியாவிலும் கடந்த சில வருடங்கள் முக்கியமானவையாகும்.
இரண்டு நாடுகளிலும் மாற்று அரசாங்கங்களுக்கான வாக்குகளை மக்கள் அளித்தனர் என்று சுஷ்மா கூறினார்
http://www.tamilwin.com/show-RUmtyDTbSUmr1C.html

நல்லாட்சி கைக்கூலிகளின் சதியால் கண்டி கூட்டம் நேரடி ஒளிபரப்புக்கு தடையென குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 06:35.17 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்காக கண்டியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவதற்கு நல்லாட்சியின் கைக்கூலிக்காரர்கள் சதி முயற்சி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டம் நேற்று கண்டியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு பல மணி நேரம் கடந்து சென்ற நிலையிலும் பார்வையாளர்களுக்காக இணையத்தின் ஊடாக நேரடி ஒளிபரப்பை மேற்கொள்வதற்கு முடியாமல் போனது.
நல்லாட்சியின் கைக்கூலிக்காரர்கள் ஒலிபெருக்கிகளின் கம்பிகளை வெட்டி ஒளிபரப்பிற்கு தடையேற்படுத்தியுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையினால் நல்லாட்சியின் அடிவருடிகளுக்கு மகிந்த குறித்து பலமான பீதி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்த குறித்து வெளியிடுகின்ற கருத்துக்கள் மூலம் மகிந்தவின் அரசியல் பயணத்தை யாராலும் நிறுத்த முடியாது. நேற்று கண்டிக்கு வந்த மக்கள் கூட்டமே அதற்கு சாட்சி என கூட்டத்தை ஏற்பாடு செய்தோர் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDTbSUmr2B.html

மகிந்தவை சிறையில் அடைக்க சூழ்ச்சி: உதய கம்மன்பில
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 06:44.35 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து சிறையில் அடைப்பதற்கு சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக தூய ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டியில் இடம் பெற்ற மகிந்தவுடன் நாட்டை வெற்றி கொள்வோம் என்ற பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு அவரின் பதவி காலத்தில் நடந்த செயற்பாடுகள் தொடர்பாக எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாதென உதய கமன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கும், நாடாளுமன்றிற்கும் ஆலோசனை வழங்க ராஜ்யசபை
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 06:52.54 AM GMT ]
அரசாங்கத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஆலோசனை வழங்குவதற்கான ராஜ்யசபை ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
சேதுவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பின் கீழ் ராஜ்யசபையை உருவாக்குவது தொடர்பிலான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
19வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனைகள் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், பொது தேர்தலின் பின்னர் ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையிலேயே செயற்படுவார் எனவும்,
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தல், நீதி, ஜனநாயகத்தை நிலைநாட்டுதல், உள்ளிட்டவைகளை ஜனாதிபதியே மேற்கொள்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி நினைக்கும் நேரத்தில் அமைச்சரவையை ஒன்றுகூட்டுவதற்கான அதிகாரம் உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசாங்கத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் ஆலோசனை வழங்குவதற்கான ராஜ்யசபையை அமைத்தல் புதிய யோசனை என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நாட்டில் காணப்படும் விருப்பு வாக்கு தெரிவு முறையை இரத்து செய்து தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைகளை இணைத்து புதிய தேர்தல் முறைமை உருவாக்கப்படவுள்ளது.
இது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பல யோசனைகளை முன்வைத்துள்ளார் எனவும், எதிர்வரும் 10ம் திகதி அவருடன் விசேட சந்திப்பொன்றும் இடம்பெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTbSUmr2D.html

காணாமற் போனவர்கள் இரகசிய முகாம்களில் உள்ளனரா? ரணிலிடம் டக்ளஸ் கேள்வி
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 07:09.41 AM GMT ]
காணாமற் போனவர்கள் இரகசிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்களா என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமற் போனவர்களின் உறவுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்ற கோரிக்கையொன்றை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது முன்வைக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
காணாமற் போனதாகக் கூறப்படும் தமிழ் இளைஞர், யுவதிகள் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்புவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் முன்னாள் நீதிபதியும், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ள கருத்தானது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விடயத்தில் உண்மையை காணாமற் போனவர்களின் உறவுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.
ஆகவே, இரகசிய முகாம்கள் இலங்கையில் உள்ளனவா? அவை எங்கேயுள்ளன? அங்கு எத்தனை பேர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்? என்பதை தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமையாகும் என்ற கேள்வியை காணாமற் போனவர்களின் உறவுகள் சார்பாக எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது பிரதமரிடம் முன்வைக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மீண்டும் இலங்கைக்கு வருகைதரும் போது அவர்களை விமான நிலையத்திலேயே கைது செய்வதாகவும், விசாரணைக்கு உட்படுத்துவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையானது பாதுகாப்பான தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்களிடையே அவநம்பிக்கையையும், அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளின் மூலமாக இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் விசாரணைக்குட்படுத்தப்படுபவர்கள் தொடர்பான விபரங்களையும் தெரிந்து கொள்ள தமிழ் மக்கள் ஆவலாக உள்ளனர்.
எனவே தமிழ் மக்கள் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது இவ்விரண்டு கேள்விகளையும் பிரதமரிடம் முன்வைக்கவுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTbSUmr2F.html

Geen opmerkingen:

Een reactie posten