தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 maart 2015

ஈழத் தமிழ்ப் பெண்களின் விடிவுக்காய் உலகப் பெண்களுடன் கை கோர்ப்போம்: பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற பெண் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 12:10.02 AM GMT ]
யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து விசாரணைக்குச் சென்ற பெண்ணொருவர் மூர்க்கத்தனமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பிணக்கு ஒன்றினையடுத்து குறித்த பெண் மீது மற்றொருவர் முறைப்பாடு செயதுள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண்ணை நேற்று முற்பகல் 11 மணிக்கு விசாரணைக்கு வருமாறு பொலிஸார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்த விசாரணைக்கான கடிதமும் முறைப்பாடு செய்தவரிடமே பொலிஸாரினால் கொடுக்கப்பட்டு சம்பந்தப்ட்ட பெண்ணிடம் வழங்கப்பட்டுள்ளது.
இறுதிநேரத்தில கிடைத்த அழைப்பையடுத்து குறித்த பெண் நேற்று நண்பகல் 12 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார்.
உரிய நேரத்துக்கு விசாரணைக்காக வருகை தராமை தொடர்பில் குறித்த பிணக்கை விசாரிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் பெண்ணை ஏசியுள்ளார்.
விசாரணைக்கு பொலிஸார் உரிய முறையில் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். முறைப்பாடு செய்தவரிடமே அழைப்புக்கான கடிதம் வழங்கப்பட்டமை தவறானது. அத்துடன் இறுதிநேரத்திலேயே இந்த அழைப்பு எனக்கு கிடைத்திருந்தது. இதனால்தான் வருகை தருவதற்கு காலதாமதம் சென்றது என்று இந்தப் பெண்ணும் வாதிட்டுள்ளார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கதிரையிலிருந்த பெண்ணை கிழே விழுத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரும் பெண்ணின் தலைமயிரைப் பிடித்திழுத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
கதறக்கதற தாக்குதல் நடத்திய பொலிஸார் பெண்ணை சிறைக்கூண்டுக்குள் அடைத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை பொலிஸ் நிலையத்தில் நின்ற பொதுமக்கள் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குறித்த பெண் மீது ஆண் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெண் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென நேரில் கண்ட பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDTbSUmrzI.html

இலங்கைத் தமிழர்களின் சமவுரிமைக்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 03:11.40 AM GMT ]
இலங்கையில் 13வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழர்களுக்கு சமவுரிமை வழங்க வேண்டும் என இந்திய மத்திய அரசு வலியுறுத்தும்.
மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு பெங்களூர் விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கும் இடையில் 13வது அரசியலமைப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தையே தற்போது சீர்திருத்தங்களுடன் அமுல்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களுக்கு இணையாக சமவுரிமையுடன் வாழ்வதற்கான நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஈழத் தமிழ்ப் பெண்களின் விடிவுக்காய் உலகப் பெண்களுடன் கை கோர்ப்போம்: பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 03:21.57 AM GMT ]
உலகளாவிய ரீதியில் பெண்களின் விடுதலைக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில், ஈழத்துப் பெண்களின் விடுதலையும் உள்ளடக்கப்பட வேண்டும் என பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மில்லேனியம் கடந்து 15 ஆவது ஆண்டிலும் கூட, மனித உரிமை மீறல்கள், பெண் உரிமை, பால் சமத்துவம் போன்ற விடயங்களையே மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டி தட்டிக் கேட்க வேண்டிய நிலை நீடிக்கிறது. அதிலும் பால் சமத்துவ பேதம் எங்கும் எதிலும் புரையோடிக் கிடக்கிறது.
தாய் மண்ணின் சுதந்திரக் காற்றுக்காக, தலைவன் வழியில் தம்மை இணைத்து, கருத்திலும் களத்திலும் தம்மை நிலை நிறுத்தி, புதிய பரணி படைத்த ஈழத்துப் பெண்கள், இன்று தமது சொந்த மண்ணில் இரண்டாந் தரப் பிரஜைகளாக போய்க் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலின் துயர முடிவின் பின்னான இன்று வரையான கால கட்டத்தில், ஈழத்தில் பெண் வர்க்கம் குறி வைத்து சீரழிக்கப்படுவதைக் காண முடிகிறது.
பால் ரீதியான பிறப்பு வேறுபாடே, ஒருத்தியை அடிமை கொள்ளவும், சம உரிமை மறுக்கவும், போகப் பொருளாக நோக்கவும் போதுமான காரணமாய் அமைவதென்பது, இந்த உலக மகளிர் தின நேரத்தில், மனித உரிமை பற்றிய கேள்வியையும் எழுப்ப வேண்டிய காலத்தின் தேவையாக உள்ளது.
இன்று சிறிலங்காவில் ஆட்சி அதிகார பீடத்தில் மாற்றம் ஏற்பட்டு, நல்லாட்சி தோன்றியிருப்பதாக பரப்புரைகள் செய்யப்பட்டு வரும் வேளையில், வன்னி உட்பட தாயகப் பகுதிகளில் சாதகமான என்ன மாற்றங்கள் தான் ஏற்படுத்தப்பட்டுள்ளன? மாறாக, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், வன்புணர்ச்சி, கொலை என்று அசாதாரண நிலையின் பட்டியல் தான் நீண்டு செல்கிறது.
தாயகத்தில் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக நடை பெற்று வரும் வன்முறை சம்பவங்களின் தொடர்ச்சியாக-
வன்னியில், கனகராயன் குளம் பாடசாலை மாணவியான 16 வயதேயான செல்வராசா சரணிகா என்ற சிறுமி, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு உயிரை இழந்திருக்கும் சம்பவத்தையும்
15 வருடங்களின் பின் இந்த பிரான்சு நாட்டிலிருந்து தாயகம் சென்ற பகீரதி என்ற பெண், மீண்டும் திரும்பும் வழியில் அவரது 8 வயது மகளுடன் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதையும் பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பினராகிய நாம் சுட்டிக் காட்டுகின்றோம்.
சிறுமி சரணிகா மீதான வல்லுறவுச் சம்பவமானது, போரினால் குடும்பங்களைத் தொலைத்த பெண்களின் ஆதரவற்ற நிலையையும் அவர்கள் எதிர் நோக்கும் பயங்கர அச்சுறுத்தல்களையும் காட்டும் ஒரு சுட்டியாகவே கொள்ள வேண்டும்.
அதே போன்றே நாட்டில் ஆட்சி மாற்றத்துடன், பாதுகாப்பு சூழ்நிலையும் மாறியிருப்பதால் நாட்டை விட்டு பாதுகாப்பிற்காக வெளியேறியோர் நாடு திரும்பலாம் என சிறிலங்கா அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தனது தாயாரை பார்ப்பதற்காக பிரான்சிலிருந்து தாயகம் திரும்பிய பகீரதி புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இவ்வாறு புதிய அரசின் அழைப்பை நம்பி நாடு திரும்பிய குறைந்தது 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என ஊடகவியலாளர் அமைப்பு ஒன்று அறிவித்திருக்கின்றது.
காணாமல்போன தனது மகனை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தமைக்காக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிறுமி விபூசிகாவின் தாயாரான ஜெயக்குமாரி, ஒரு வருடம் முடிந்த நிலையிலும் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளார்.விபூசிகா ஆச்சிரமம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறே இன்னும் பல முன்னாள் போராளிகள், போராட்டத்திற்கு உதவியோர் என்றும பல பெண்கள் சிறைக் கம்பிகளின் பின்னால் வாடுகின்றனர்.
கலாச்சார பிறழ்வு, பாலியல் தொழில் என்று ஏற்கெனவே சுட்டுக்காட்டப்படும் தாயக நிலை மாறுதல்களில், பாலியல் வன்புணர்வு, கொலை என மேலும் பல புதிய அச்சுறுத்தல்கள் சூழ்ந்து நிற்கின்றன.
இந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் உடனடியாகவே களத்தில் இறங்கி, பாதுகாப்பான சீரிய சமூக முறைமையை நிலை நாட்ட, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடும் பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு, இந்த சீரிய பணியில் நாங்களும் கை கோர்த்து நிற்போம் என்பதையும் இந்த தருணத்தில் பதிய விளைகிறது.
அது மட்டுமன்றி,
தாயக தமிழ் அரசியலில் பெண் பிரதிநிதுத்துவத்தை உறுதிப்படுத்தும் ஒரே பெண் உறுப்பினரான, வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் அரசியல் செயல்பாடுகளை முடக்க எடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிப்பதுடன்,
பெரும் சவால்களை எதிர்கொண்டு, போரில் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்களினதும், ஈழப் பெண்களினதும் ஒரே பிரதிநிதியாக, மீண்டும் மீண்டும் தனது இருப்பையும் குரலையும் சரியான வழியில் அஞ்சாது நிலை நாட்டி வரும் அவருக்கு - அவரது அரசியல் செயற்பாடுகளுக்கு - எமது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
இறுதியாக,
உலகளாவிய ரீதியில் பெண்களின் விடுதலைக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில், ஈழத்துப் பெண்களின் விடுதலையும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதையும், அதன் மூலம் பால் நிலை சமத்துவமும், மனித உரிமையும் ஈழத்தில் நிலை நாட்டப் பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, பெண் உரிமை கோரி நிற்கும் உலக மகளிருடன் கை கோர்த்து நிற்கின்றோம்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDTbSUmr0I.html

Geen opmerkingen:

Een reactie posten