[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 07:57.02 AM GMT ]
பொதுவில் இந்தியப் பிரதமர்கள் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தாலும் தமிழர் தாயகப் பகுதிகளுக்கான அவர்களின் விஜயம் மட்டுப்பாடாகவே இருந்தது. அந்த வகையில் பிரதமர் மோடியின் யாழ்ப்பாணம், மன்னார் விஜயம் வரலாற்றுப் பதிவுக்குரியது.
2009ம் ஆண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த பேரழிவுகளால் தமிழ் மக்கள் தாங்கொணாத் துன்பத்தை தாங்கி நிற்கும் வேளையில் பிரதமர் மோடியின் வடக்கு விஜயம் தமிழர்களுக்கு நன்மை தருவதாக அமைவதற்கு ஏற்றால் போல், தமிழ் அரசியல் தலைமைகள் வியூகம் அமைக்க வேண்டும்.
இந்தியப் பிரதமர் மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது எத்தகைய விடயங்களை அவருடன் பேசுவது என்பதில் தெளிவான வரையறைகள் அவசியமாகும்.
எழுந்தமானமாகக் கதைப்பது, முக்கியமான விடயங்களுடன் முக்கியத்துவம் அற்ற விடயங்களையும் உள்ளடக்குவது என்பன தவிர்க்கப்பட வேண்டும்.
தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, அந்தத் தீர்வு எந்த வகையில் அமையவேண்டும்; அதற்கான காலவரையறை என்பன பிரதமர் மோடியிடம் வலியுறுத்தப்பட வேண்டிய முக்கிய விடயங்களாக அமையும். எதுவாயினும் பிரதமர் மோடியின் யாழ்ப்பாண விஜயத்தை பெறுமதி உள்ளதாக்குவது எங்களின் கைளில் உள்ளது.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு பெறுமதி வாய்ந்த சந்தர்ப்பமாக பிரதமர் மோடியின் யாழ்ப்பாண விஜயத்தை ஆக்கிக் கொள்வது தமிழ் அரசியல் தலைமைகளினதும் புத்திஜீவிகளினதும் கடமையாகும்.
இந்தியப் பொதுத் தேர்தல் காலத்தில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற பிரதமர் மோடி; பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் எனத் தெளிவுபடக் கூறியிருந்தார்.
தமிழகத்தில் அவர் கூறியதை யாழ்ப்பாணத்தில் ஞாபகப்படுத்துவதும் மோடி ஆற்றிய அந்த உரையில் ஈழத்தமிழ் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் எடுத்துரைப்பது பொருத்தமானதாகும்.
இந்தியாவில் பிரதமர் மோடி; இலங்கையில் ஜனாதிபதி மைத்திரி என்ற இரு நாட்டு ஆட்சித் தலைமைகளிடமும் நல்லதொரு ஒற்றுமையும் புரிந்துணர்வும் உள்ளது.
இந்த ஒற்றுமையும் புரிந்துணர்வும் கூடியவேளையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் பிரதமர் மோடியிடம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உதவுமாறு நாம் வலியுறுத்த வேண்டும்.
அந்த வலியுறுத்தல் என்பது ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்வு காண்பதற்கான உத்தரவாதத்தை மோடியிடம் இருந்து பெற்றுக் கொள்வதாக இருக்கும்.
எது எப்படியாக இருப்பினும் பிரதமர் மோடியின் யாழ்ப்பாண விஜயம் தமிழ் மக்கள் தங்கள் பிரச்சினையை எடுத்துக் கூறுவதற்கான நல்லதொரு சந்தர்ப்பம். அச்சந்தர்ப்பத்தை நல்லமுறையில் பயன்படுத்துவோம்.
இதற்காக எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து ஓரணியில் திரண்டு பிரதமர் மோடியிடம் ஒன்றாகக் குரல் கொடுப்போம். எங்கள் உரிமையைப் பெற்றுத் தாருங்கள் என்று கேட்போம்.
http://www.tamilwin.com/show-RUmtyDTbSUmr3B.html
தடையற்ற வர்த்தகம் தொடர்பாக இலங்கை- இந்தியாவிற்கிடையில் பேச்சுவார்த்தை!
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 07:47.01 AM GMT ]
குறித்த பேச்சுவார்த்தை தொடர்பாக நேற்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் கருத்து வெளியிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்திய வர்த்தகத்துறைச் செயலாளர் ராஜீவ் கெர் தலைமையிலான இந்திய வர்த்தகப் பிரதிநிதிகள் குழு, இலங்கை வந்துள்ளதுடன், இலங்கையின் வர்த்தகப் பிரதிநிதிகளுடன் இந்திய வர்த்தகப் பிரதிநிதிகள் குழு பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையின் ஏற்றுமதித் திறனை அதிகரிப்பதற்காக இந்திய முதலீடுகளை அதிகரித்தல், இந்தியச் சந்தையில் உற்பத்தி, வழங்கல் தொடர்பான இணைப்புகளை அதிகரித்தல், 1998ஆம் ஆண்டு தடையற்ற வர்த்தக ஒப்பந்த அமுலாக்கம், வர்த்தகம், முதலீடுகள், பொருளாதார உறவுகள் தொடர்பான பிரச்சினைகள், இலங்கையுடனான வர்த்தகம் மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட பொருளாதார ஒப்பந்தங்களை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான அனுகூலமான சாத்தியக்கூறுகள் மூலம் இரு நாட்டு வர்த்தகச் செயற்பாடுகளை அதிகரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே, வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்வது, மருந்துகள், ஆடை உற்பத்தி துறை, பொறியியல் பாகங்களை உற்பத்தி செய்வது ஆகியவற்றில் இந்திய முதலீடுகளை இலங்கை அரசு கோரியிருந்தது.
சமீபத்திய சந்திப்பின்போது, இந்திய அதிகாரிகள் அதை நினைவூட்டியுள்ளனர். மரபு சாரா எரிசக்தி உட்பட எரிசக்தித் துறை உறவுகள் குறித்தும் இப்பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் சுற்றுலாத் துறையில் ஊக்குவிப்புக்களை ஏற்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விடயங்களும் குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டது என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDTbSUmr2I.html
ரணிலின் சர்சைக்குரிய கருத்து! கேள்வி எழுப்புவாரா சுஷ்மா
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 07:25.22 AM GMT ]
எல்லை தண்டும் மீனவர்களை சுடுவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்புவார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழக தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எல்லை தாண்டி வரும் மீனவர்களை சுடுவோம் என தெரிவித்தார். எல்லை தாண்டி வரும் மீனவர்களை சுடுவதில் எந்த மனிதஉரிமை மீறலும் இல்லை இதற்கு சட்டத்தில் முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இது தொடர்பாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கை பிரதமரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசுவார் என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் சையது அக்பரூதின் கூறுகையில், மீனவர்கள் பிரச்சினை மனிதாபிமானம் மற்றும் வாழ்வாதார பிரச்சினை. இந்த விவகாரத்தில் இலங்கையுடன் இணைந்தே தீர்வு காண விரும்புகிறோம்.
அமைதியாகவும் நட்பு ரீதியாகவும் இந்த விவகாரம் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கும் போது சுஷ்மா சுவராஜ் மீனவர்கள் விவகாரம் குறித்து பேசுவார்” என்று தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை பிரதமரின் இந்தக் கருத்து பற்றி இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடனான சந்திப்பின் போது சுஷ்மா சுவராஜ் எழுப்புவார் என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyDTbSUmr2H.html
Geen opmerkingen:
Een reactie posten