இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு வருவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அளித்திருந்த பேட்டியில், தன்னை பதவியில் இருந்து அகற்றுவதில் இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ முக்கிய பங்காற்றியதாகத் தெரிவித்திருந்தார்.
மஹிந்த ராஜபக்ச மிகவும், சரியான நேரம் கணித்து இந்தப் பேட்டியைக் கொடுத்திருந்தார்.
“றோ” வைக் குற்றம் சாட்டும் மஹிந்த ராஜபக்சவின் பேட்டி, முதலில் வெளியானது, அவருக்கு நெருக்கமான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொங்கொங்கில் இருந்து வெளியாகும் “சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்” நாளிதழில் தான்.
சீனாவுக்கும் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தை விபரித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. அதையடுத்து, மோடியின் வருகைக்கு முதல் நாள், அவரது பேட்டி இந்தியாவின் “தி ஹிந்து” நாளிதழில் வெளியானது.
மஹிந்த ராஜபக்சவுக்கும், தி ஹிந்துவுக்கும் நெருக்கம் அதிகம் என்பதையும் இங்கு கூறவேண்டியதில்லை. தி ஹிந்துவின் ஆசிரியர் என்.ராம் பல முறை மஹிந்த ராஜபக்சவுக்கு சாதகமான வகையில் பேட்டிகளை எடுத்திருந்தவர்.
ஆனால், இம்முறை “தி ஹிந்து” சார்பில் அவரைப் பேட்டி கண்டது, சுகாசினி ஹைதர். அவர், பா.ஜ.கவின் பிரமுகர்களில் ஒருவரும், தமிழக அரசியலில் கோமாளி என்று வர்ணிக்கப்படுபவருமான சுப்பிரமணியன் சுவாமியின் மகளுமாவார்.
சுப்பிரமணியன் சுவாமிக்கும், மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலும் நெருக்கமான உறவு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மோடியின் வருகையை ஒட்டியதாக இந்தியப் புலனாய்வுத் துறையான றோவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் வகையில், பேட்டிகளை வழங்கியுள்ளார். மஹிந்த ராஜபக்ச. இந்த இரண்டு பேட்டிகளும் வெளிவந்த காலம் மற்றும், பேட்டி காணப்பட்ட ஊடகங்களை வைத்து நோக்கும் போது, மஹிந்த ராஜபக்ச நேரத்தைக் கணித்து வீசிய கல்லாகவே தோன்றுகிறது.
சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்டுக்கு வழங்கிய பேட்டியில், அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும், இந்தியப் புலனாய்வுத் துறையும் தனக்கு எதிராக செயற்பட்டதினாலேயே தோல்வியடைந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்கா மற்றும் நோர்வே போன்ற நாடுகளின் கொழும்பிலுள்ள தூதரகங்கள் தனக்கு எதிராக பகிரங்கமாக செயற்பட்டதாகவும், பதவி கவிழ்க்க திட்டமிட்டதாகவும் மஹிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.
என்றாலும், அது, றோ மீது நேரடியாக கல்லை வீசுவதற்கு முன்னதாக, ஒத்திகை பார்க்கும் வகையிலேயே அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இரண்டு நாட்கள் கழித்து அவர் தி ஹிந்துவிடம் அளித்த பேட்டியில், வெளிப்படையாகவே “றோ” மீதும், அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ மீதும், பிரித்தானியாவின் எம்16, மீதும், குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
இந்தியப் பிரதமர் மோடி வரவுள்ள சூழலில் ஒட்டுமொத்த இந்திய மற்றும் உலக ஊடகங்களின் கவனமும், இலங்கை மீது குவிந்திருந்த சூழலில் தான், மஹிந்த ராஜபக்சவின் இந்தப் பேட்டி வெளியானது.
இதன் மூலம் இந்திய அரசாங்கத்தின் கவனத்தை மட்டும் அவர் தன் மீது திருப்ப எத்தணிக்கவில்லை, ஒட்டுமொத்த இந்திய மக்களினது கவனத்தையும், உலக மக்களின் கவனத்தையும் திருப்ப எத்தணித்தார்.
இந்தப் பேட்டியில், அவர் எதிரணியைப் பலப்படுத்துவதில், இந்தியப் புலனாய்வு அமைப்பு முக்கிய பங்காற்றியிருந்ததாக, சற்று விரிவாகவே கூறியிருந்தார். அதாவது எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை முன்நிறுத்துவதில், “றோ”முக்கிய பங்காற்றியிந்தது.
றோவின் கொழும்பு அதிகாரியாக இருந்த இளங்கோ, மைத்திரிபால சிறிசேனவுடன் நெருக்கமான உறவை வைத்திருந்தார். இதையே காரணம் காட்டி, “றோ” அதிகாரி இளங்கோவை திருப்பி அழைக்குமாறு, இலங்கை அரசாங்கம் கேட்டிருந்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் கொழும்பு வந்திருந்த போது, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.
இதையடுத்து உடனடியாகவே றோ அதிகாரி இளங்கோவை புதுடில்லிக்குத் திருப்பி அழைக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. அந்தச் செய்தி ஊடகங்களில் வெளியான போது அதனை இந்தியா நிராகரித்திருந்தது.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர், மஹிந்தவைப் பதவி கவிழ்ப்பதில் “றோ” முக்கிய பங்கு வகித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. அப்போது, இந்திய அரசாங்கத்தின் சார்பில், வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் அதனை நிராகரித்ததுடன், “றோ” அதிகாரியின் இடமாற்றம் வழமையானது, என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இப்போது றோ மீது குற்றம்சாட்டியுள்ள மஹிந்த ராஜபக்ச கூட ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இது குறித்து கேட்ட போது, தனக்கெதிராக வெளிநாட்டு நிறுவனங்கள் செயற்பட்டிருக்கும் என்று நம்பவில்லை எனக் கூறியிருந்தார். ஆனால், இப்போது அவரே, றோ மீது மட்டுமின்றி, சி.ஐ.ஏ., எம்16 மீதும் குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.
இந்தியா முன்னர் இதனை நிராகரித்துள்ளதே என்று கேட்டபோது, றோ அதிகாரியை திருப்பி அழைக்குமாறு தானே கேட்டதாகவும், இந்தியாவிடமே கேட்டுப் பார்க்கும் படியும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக, இந்தியாவுடன் இணைந்து, இதனை நிராகரித்தவர் இப்போது, இவ்வாறு குற்றம்சாட்ட முனைந்துள்ளார். என்றால் அதற்குப் பின்புலம் ஒன்று இருக்கவே செய்யும்.
இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பேச்சாளர்கள் மட்டுமின்றி, றோ அதிகாரியை இலங்கை திருப்பி அழைக்குமாறு கோரியிருக்க முடியாது என்றும் அத்தகையதொரு நிலை ஏற்பட்டிருந்தால் அது இராஜதந்திர ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் என்றும் கேர்ணல் ஹரிகரன் போன்ற ஆய்வாளர்களும் கூறியிருந்தனர்.
மஹிந்த ராஜபக்சவின் பேட்டி, அந்தக் கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கி விட்டுள்ளது. இந்தியாவின் றோ மீது நேரடியாகவே கல் வீசும் துணிச்சல் மஹிந்த ராஜபக்சவுக்கு எவ்வாறு வந்தது? அதுவும், ஆட்சியில் இல்லாத போது இந்த தைரியம் அவருக்கு வந்திருக்கிறது என்பது ஆச்சரியமானதே.
ஏனென்றால், இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயற்பட்டதே, மஹிந்த ராஜபக்சவின் வீழ்ச்சிக்கு காரணமாகியது என்பது உறுதியாகி விட்ட நிலையில், அவர் “றோ” வுடன் தொடர்ந்து பகைமையை வளர்க்க முனைந்துள்ளது ஏன்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
மஹிந்த ராஜபக்ச வடக்கு, கிழக்கு வாக்குகளை தவறாக கணித்து விட்டதாக கூறியிருந்தார். அதுவே தனது தோல்விக்கு காரணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் இழந்து போன அதிகாரத்தை, அடுத்த பொது தேர்தலில் எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டியுள்ளார் போலவே தோன்றுகிறது.
அவர் இப்போது வெளியிடும் கருத்துகள், செவ்விகள் அனைத்தும், அவரது மீள் அரசியல் பிரவேசத்தை வலுவூட்டுவதாகவே தெரிகிறது. மஹிந்த மட்டுமின்றி கோத்தாபாய ராஜபக்சவும் கூட தாம் அரசியலுக்குள் பிரவேசிப்பது குறித்து ஆலோசிப்பதாக வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.
மஹிந்த ராஜபக்சவுக்கு தாம் அதிகாரத்தில் இல்லாவிட்டால், அமுக்கப்பட்டு விடுவோம் என்பது நன்றாகவே தெரியும். எனவே, அவர் மீண்டும் அரசியலில் பிரவேசித்து அதிகாரத்தைக் கையில் எடுத்து தன்னையும், தனது குடும்பத்தினரையும், தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் தற்காத்துக் கொள்ளத் திட்டமிடுகிறார்.
அதற்கு அவருக்குக் கைக்கொடுக்கும் வகையில் விரைவிலேயே பாராளுமன்றத் தேர்தலும் அறிவிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதைவிட, அவர் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு புறச்சக்கதிகளின் தூண்டுதல்களும் காரணமாக இருக்கலாம்.
குறிப்பாக, சீனா இதற்கு பின்புல ஆதரவைக் கொடுக்க முன்வந்திருந்தாலும் ஆச்சரியமில்லை. ஏனென்றால், மஹிந்த ராஜபக்சவுக்குப் பிந்திய இலங்கை அரசாங்கம், சீனாவுக்கு சற்றும் சாதகமானதொன்றாக இருக்கவில்லை.
இந்த நிலையில் சீனா தனது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, எப்படியும் மஹிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்றே விருப்பம் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. இந்தநிலையில், தான் றோ மற்றும் சி.ஐ.ஏ உள்ளிட்ட சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் மீதான மஹிந்த ராஜபக்சவின் பாய்ச்சல் வெளிப்பட்டுள்ளது.
இன்னொரு ஆட்சியதிகாரத்துக்காக முயற்சிக்கும் மஹிந்த ராஜபக்ச, சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்வது புத்திசாலிதனமானதா என்ற கேள்வி எழலாம். ஆனால், மஹிந்த ராஜபக்சவுக்கு ஒரு விடயம் நன்றாகவே தெரியும், அதாவது, சிங்கள மக்களில் பெரும்பான்மையினருக்கு தன் மீது அனுதாபம் உள்ளது என்பதை அவர் அறிவார்.
அவர்களினது ஆதரவைப் பெறுவதற்கு இது போன்ற வெளிநாட்டு சதி என்ற விவகாரம், மீள அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மிகச்சிறந்த கருவியாகவே பயன்படக் கூடும்.
சிங்கள மக்களில் அநேகர் வெளிநாட்டுத் தலையீடுகளை விரும்பாதவர்கள் என்ற கதை அவர்கள் முன் நன்றாகவே எடுபடக் கூடும். அதனைக் கருத்தில் கொண்டுதான் “றோ” மீதான கல்லை வீசியிருகக்கிறார் மஹிந்த.
“றோ” மீது கல்லை வீசினால், இந்தியா கோபம் கொள்ளாதா அதுவும் இந்தியப் பிரதமர் வரும் போது இவ்வாறு கூறுவதால், அவர் கோபம் கொள்ள மாட்டாரா என்ற கேள்வியும் உள்ளது.
ஆனால், அவரது பேட்டியிலேயே மோடியை இதில் தொடர்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட சதியே என்றும், மோடி அரசு இப்போது தான் பதவிக்கு வந்தது என்றும் கூறியுள்ளதன் மூலம், மோடி அரசாங்கத்தை பகைத்துக் கொள்ளாமல் இருக்க முயன்றிருக்கிறார் மஹிந்த.
என்றாலும், இதனை மோடி எந்தளவுக்கு ஏற்றுக் கொள்வார் என்று தெரியவில்லை. அடுத்த அரசியல் பிரவேசத்துக்காகவே, மஹிந்த ராஜபக்ச “றோ” மீதும் சி.ஐ.ஏ மீதும் தாக்குதலைத் தொடுத்துள்ளார்.
இனி வரும் நாட்களில் இத்தகைய தாக்குதல்களை, குறிப்பாக, சிங்கள மக்களைத் தனக்கு ஆதரவாகத் திருப்பிவிடக் கூடிய செவ்விகளை அவர் கொடுக்கக் கூடும். இது அவர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முதல் முயற்சி.
ஆனால் என்ன, மஹிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவதை, றோவும், சி.ஐ.ஏ.யும் விரும்புமா என்பது தான் மிகப் பெரிய சவாலுக்குரிய விடயம். மீண்டும் மஹிந்த ராஜபக்ச அதிகாரத்துக்கு வருவதைத் தடுக்க, றோவை வி சி.ஐ.ஏ. கடுமையாகவே முயற்சிக்கும்.
மஹிந்த ராஜபக்சவை ஒரு சர்வாதிகாரி போலவே அமெரிக்கா கருதுகிறது. அமெரிக்கா அதிகாரிகளின் கருத்துகளில் இது வெளிப்படையாகவே கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரது மீள்வருகை தடுப்பதற்கு சி.ஐ.ஏ போன்ற மேற்குலக புனாய்வு அமைப்புகள் முயற்சிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்தநிலையில், இதுவரை வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள் மஹிந்த ராஜபக்சவுடன் நடத்திய இரகசிய புலனாய்வுப் போர் இப்போது வெளிப்படையானதொன்றாக மாறியிருக்கிறது.
இதில், யார் வெற்றி பெறப்போகிறார் என்பதை, தீர்மானிக்கும் களமாக வரும் பாராளுமன்றத் தேர்தல் அமையக் கூடும்.
- ஹரிகரன் -
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlr7J.html
Geen opmerkingen:
Een reactie posten