[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 01:57.00 PM GMT ]
ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய சிலர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். அடுத்த சில நாட்களில் மேலும் சிலரை சட்டத்தின் பிடிக்குள் சிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தெனியாய பொலிஸ் நிலையத்தில் கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் இந்த பிரதேசத்தில் பொலிஸ் முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸாரை பொலிஸ் மா அதிபர் நிர்வாகம் செய்யவில்லை. வேறு நபர்களே பெலிஸாரை கட்டுப்படுத்தினர்.
நாம் பேசும் பொலிஸாரின் புகழ், கௌரவம் என்பன ஒரு புறம் ஒதுக்கி தள்ளப்பட்டிருந்தன.
பொலிஸாரை அரசியலுடன் சம்பந்தப்படுத்தி கொள்ள வேண்டாம் என ஜனாதிபதியும் பிரதமரும் தயவுடன் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனை அச்சொட்டாக கடைபிடிக்க நாங்கள் உத்தேசித்துள்ளோம். பொலிஸாருக்கு கடந்த காலத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டப்பட்டது.
இராணுவத்திற்கு இருந்த மதிப்பு பொலிஸாருக்கு இருக்கவில்லை. இதனால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கௌவரத்தை மீண்டும் பெற்றுக்கொடுப்போம்.
கூடிய விரைவில் அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொண்டு பொலிஸ் ஆணைக்குழுவை மீண்டும் ஸ்தாபித்து இழந்த கௌரவத்தை பெற்றுக்கொடுப்போம். அதற்கு பிறகு என்னால் கூட பொலிஸாருக்கு உத்தரவுகளை வழங்க முடியாது.
இது 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒரு வேலையாகும். அத்துடன் பிரஜைகள் பொலிஸை ஏற்படுத்தி, சிவில் பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்த எண்ணியுள்ளோம் எனவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
நரேந்திர மோடியின் வருகை யாருக்கு நன்மை?
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 02:04.30 PM GMT ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 13ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரையிலான காலப்பகுதியை கொழும்பிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் கழிப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறார்.
1987ம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் இந்தியப் பிரதமராக இருந்த, ராஜீவ் காந்தி தான், இலங்கைக்கு கடைசியாக அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்ட இந்தியப் பிரதமர். அவருக்குப் பின்னர், இந்த 28 ஆண்டு கால இடைவெளியில், இந்தியப் பிரதமராக இருந்த வி.பி.சிங், சந்திரசேகர், தேவகௌடா, ஐ.கே.குஜ்ரால், நரசிம்மராவ், அடல் பிகாரி வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்றவர்கள் பிரதமராகப் பதவியில் இருந்த போதும், அவர்கள் எவருமே இலங்கைக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டதில்லை.
ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்றவர்கள் பிரதமராக இருந்த போது, சார்க் மாநாட்டுக்காக கொழும்பு வந்திருந்தனர். ஆனால், அரசமுறைப் பயணமாக, இலங்கை அரசின் விருந்தினராக அவர்கள் இங்கு வந்து தங்கியிருக்கவில்லை.
தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கூட, கடந்த ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காது போனால், இந்தப் பயணத் திட்டத்தை செயற்படுத்தியிருப்பாரா என்பது சந்தேகம் தான். கடந்த ஆண்டு மே மாதம் பதவிக்கு வந்திருந்த அவர், சார்க் நாடுகளில் இலங்கை, பாகிஸ்தான் தவிர்ந்த எல்லா நாடுகளுக்குமே சென்று வந்திருந்தார்.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் இருந்து வந்த இடைவெளி தான் அவரது இலங்கைக்கான அரசுமுறைப் பயணத்தைப் பிற்போடச் செய்திருந்தது. ஆட்சி மாற்றம், இந்தியப் பிரதமருக்கான கதவுகளை துரிதமாகவே திறந்து விட்டிருக்கிறது.
கடந்த ஜனவரி 8ம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற மைத்திரிபால சிறிசேன, தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை கடந்த மாதம் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்தார்.
இந்தப் பயணத்தின் போது, சிவில் அணுசக்திப் பயன்பாடு குறித்த உடன்பாடு ஒன்று இருநாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது. மைத்திரிபால சிறிசேனவுடன் பல உடன்பாடுகள் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், அவ்வளவு இணக்கப்பாடுகள் ஏற்பட்டிருக்கவில்லை.
அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிடிகொடுக்காமல் நழுவியதே முக்கிய காரணம். புதிய அரசாங்கம் என்பதைக் காரணம் காட்டி அவர் பல உடன்பாடுகளை தவிர்த்துக் கொண்டார். புதுடில்லியில், சீபா எனப்படும் இந்திய - இலங்கை கூட்டு வர்த்தக ஒத்துழைப்பு உடன்பாட்டில் தாம் வேண்டுமென்றே கையெழுத்திடுவதை தவிர்த்ததாக கொழும்பில் வர்த்தகர்கள் மத்தியில் பேசிய போது மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.
இதுபோல பல உடன்பாடுகளை அவர் தட்டிக் கழித்தது இந்தியத் தரப்புக்கு ஏமாற்றமாகவே அமைந்திருந்தது. அதேவேளை, சீனாவுக்கு அவ்வளவு நெருக்கமில்லாத புதிய அரசாங்கத்தை எப்படியாவது தன் பக்கம் திருப்பி விட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இந்த வாரப் பயணத்தை அதற்காகவே பயன்படுத்திக் கொள்வார் என்று சர்வதேச ஊடகங்கள் கணிக்கின்றன. அதாவது சீனாவின் செல்வாக்கை உடைத்து உள்நுழைவதற்காக, இலங்கையுடன் பொருளாதார, பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடுகளை இந்தியப் பிரதமர் செய்து கொள்வார் என்று கருதப்படுகிறது.
இலங்கைக்கு மட்டுமல்ல, சீசெல்ஸ், மாலைதீவு, மொரீசியஸ் ஆகிய நாடுகளுக்கும் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ள போதிலும், கொழும்புக்கான பயணமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக புதுடில்லியால் கருதப்படுகிறது.
இந்தியாவின் காலுக்கு அடியில் இருக் கும் இலங்கைத் தீவில், மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், சீனாவின் செல்வாக்கு கடுமையாக உயர்ந்தது. துறைமுகங்கள், விமான நிலையம், நெடுஞ்சாலைகள் என்று கட்டுமானத் திட்டங்களில் கால் வைத்த சீனா, தனது நீர்மூழ்கிகளை கொழும்புக்கு அனுப்பியும், கொழும்புத் துறைமுக நகரத்தில் சொந்தமாக ஒரு நிலத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்தும், இந்தியாவை மிரள வைத்து விட்டது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் திணறிக் கொண்டிருந்த இந்தியாவுக்கு, ஆட்சிமாற்றம் பெரிதும் கைகொடுத்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டும், சீனாவின் திட்டங்களை மீளாய்வு செய்தும், இடைநிறுத்தியும், சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வரும், இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் மேலும் நெருக்கத்தை வலுப்படுத்திக் கொள்ளவும், இந்தியப் பிரதமர் தனது பயணத்தைப் பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது, பல உதவித் திட்டங்களை அவர் அறிவிப்பார் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. என்றாலும் அது, சீனாவுக்கு இணையானதாக இருக்க முடியாது. கொழும்பு வரும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிக கவனமாக நிகழ்ச்சி நிரல்களை வடிவமைத்துள்ளதாக புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன.
கொழும்பில் நடத்தப்போகும் இருதரப்பு பேச்சுக்கள், யாழ்ப்பாணம், அனுரா தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம், பாராளுமன்றத்தில் நிகழ்த்தப் போகும் உரை என்பன மோடியின் முக்கியமான நிகழ்ச்சி நிரல்களாகும்.
இந்தப் பயணத்தில் மிகமுக்கியமானது, இந்தியப் பிரதமர் கொழும்பில் நடத்தவுள்ள பேச்சுக்கள் தான். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும், ஏனைய அரசாங்கத் தரப்பினருடனும், நடத்தவுள்ள பேச்சுக்களில் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தலுக்கு முக்கிய இடம் அளிக்கப்படும்.
தற்போதைய நிலையில் அது ஒன்றும் மிகவும் சிக்கலான விவகாரமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், கொழும்பில் ஒப்பீட்டளவில் சீனாவுக்கு உள்ள சாதக நிலையை விடவும், கூடுதலாக இந்தியாவுக்குச் சாதகமான சூழலே உள்ளது.
எனவே இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் பேச்சுக்களில் அவ்வளவு சவால்களோ, சுவாரஷ்யமான விடயங்களோ இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால், தமிழர்களுக்கு அதிகாரங்க ளைப் பகிர்ந்தளிக்கும் விவகாரம் இந்தப் பேச்சுக்களில் முக்கிய இடத்தை வகிக்கக் கூடும்.
ஏனென்றால், 28 ஆண்டுகளுக்கு முன்னதாக, இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, அப்பாதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமைவாகவே, தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, மாகாணசபைகளை உருவாக்கும் 13வது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆனாலும், இந்த 28 ஆண்டுகளில், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது. இந்தியாவும் கூட, இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுத்து 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாகச் செயற்படுத்த வைப்பதற்குத் தவறி விட்டது.
ஆக, 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் போது, இடைப்பட்ட இந்தக் காலப்பகுதிக்குள் நிறைவேற்றப்படாமல் உள்ள 13வது திருத்தச்சட்ட வாக்குறுதி குறித்து பேச்சுக்களை நடத்த வேண்டிய நிலை ஒன்று உள்ளது.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் மாகாணசபைகள் செயற்படுகின்ற நிலையில், அதிகாரப்பகிர்வு குறித்த கோரிக்கைகள் வலுவாக எழுந்திருக்கின்றன. எனவே இந்தச் சந்தர்ப்பத்தில், 13 ஆவது திருத்தச்சட்டத்தின் எதிர்காலம் குறித்து, இந்தியப் பிரதமர் பேச்சு நடத்தாமல் தட்டிக்கழிக்க முடியாது.
அதுவும், 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக வைத்தே, தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றே இப்போதைய இந்திய அரசாங்கமும் கூறி வருகிறது.
எனவே, கொழும்பிலும் தனக்குச் சாதகமான அரசாங்கம் ஒன்று ஏற்பட்டுள்ள சூழலை இந்தியப் பிரதமர் பயன்படுத்திக் கொண்டு, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அழுத்தங்களைக் கொடுக்கலாம். ஆனால், அவை பற்றிய தகவல்கள் வெளிவருமா என்பது சந்தேகம் தான்.
இந்தியப் பிரதமரின் பயணத்தின் போது, தமிழர் பிரச்சினைக்கு நிலையான, நியாயமான தீர்வை எட்டுவதற்கு இந்தியா அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது, அதனை அவர்கள், மோடியுடனான சந்திப்பில் வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், சிங்களத் தேசியவாதிகள் இந்தியாவை கொஞ்சம் கலக்கத்துடன் தான் பார்க்கின்றனர். தமிழர்களுக்கு இந்தியா அள்ளிக் கொடுத்து விடும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. 1987ல், இந்திய - இலங்கை உடன்பாடு ஏற்பட்ட போதே, அது தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் ஒன்றாக இல்லாத போதிலும், சிங்களத் தேசியவாதிகள் அதனைக் கடுமையாகவே எதிர்த்தனர்.
அதனால், தென்னிலங்கையில் பெரும் இரத்தக்களரி ஏற்பட்டதையும் மறக்க முடியாது. அதுபோன்றதொரு நிலை மீண்டும் ஏற்படக் கூடாது என்பதிலும் இந்தியா கவனமாகவே இருக்கும். அதனால் தான், யாழ்ப்பாணத்துக்கான பயணத்துடன் கூடவே, அனுராதபுரத்திற்கான பயணத்தையும் திட்டமிட்டுள்ளார்
நரேந்திர மோடி. தமிழர்களின் கலாசாரத் தலைநகராக யாழ்ப்பாணம் எப்படி பார்க்கப்படுகிறதோ, சிங்கள பௌத்தர்களின் கலாசார தலைநகராக, அனுராதபுரம் கருதப்படுகிறது. தமிழர்களையும், சிங்கள பௌத்தர்களையும் சமநிலையில் வைத்துப் பார்ப்பதான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது மோடியின் முக்கிய இலக்காக இருக்கலாம்.
அதைவிட திருகோணமலை, கண்டி, மன்னார் ஆகிய இடங்களும் மோடியின் பயண நிகழ்ச்சி நிரலில் உள்ளன. எனினும், அவர் யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் தவிர்ந்த, வேறு எங்கெங்கு செல்லவுள்ளார் என்பது இந்தப் பத்தி எழுதப்படும் வரை முடிவாகவில்லை.
ஆனாலும் அதிகளவு இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்கின்ற ஒரு தலைவர் நரேந்திர மோடி அல்ல. எனவே பேச்சுக்கள் தவிர்ந்த நேரத்தை தனது பயணங்களுக்காக அவர் பயன்படுத்திக் கொள்ளக் கூடும். மோடியின் இலங்கைப் பயணத்தின் முக்கியமானதொரு அங்கமாக, வரும் 13ம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
முன்னாள் இந்தியப் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, மொராய்ஜி தேசாய் ஆகியோருக்குப் பின்னர், இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ள நான்காவது இந்தியப் பிரதமர் மோடி ஆவார். கடைசியாக மொராய்ஜி தேசாய் 1979 ஆம் ஆண்டு கொழும்பு வந்திருந்த போது, பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.
36 ஆண்டுகளுக்குப் பின்னர், மோடி உரையாற்றப் போகிறார். அதேவேளை, இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கே மோடி இந்தப் பயணத்தை அதிகம் பயன்படுத்திக் கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.
அதேவேளை இலங்கை அரசும் தமது நலன்களை உறுதிப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தும். தமிழர் நலன் குறித்து இந்த இருதரப்பும் எந்தளவுக்கு கரிசனை செலுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
எனினும், மோடி யாழ்ப்பாணத்துக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தை, தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்குப் பயன்படுத்தும் உத்தியாக புதுடில்லி ஊடகங்கள் கருதுகின்றன.
தமிழ்நாட்டில் காலூன்ற பா.ஜ.க. கடுமையான முயற்சிக்கின்ற நிலையில், யாழ்ப்பாணப் பயணத்தை அவர் அதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
இது, இந்திய இலங்கை அரசுகளின் தனிப்பட்ட நலன்களுக்கு அப்பால், தமிழர் தரப்புக்கும் சாதகமானதொரு வெளி தோன்றியிருப்பதை சுட்டி நிற்கிறது.
இது எந்தளவுக்கு தமிழருக்கு நன்மையளிப்பதாக அமையும் என்று ஒருபோதும் நிச்சயமாக கூற முடியாது.
சத்ரியன்
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms3F.html
Geen opmerkingen:
Een reactie posten