தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 juni 2014

தமிழ்-முஸ்லிம் மக்கள் சேர்ந்து உரிமைகளுக்காகப் போராடும் காலம் வெகுதூரத்தில் இல்லை!- சீ.வி.விக்னேஸ்வரன்!



ஈ.பி.டி.பி அரசியல்வாதியின் காலடியில் கொள்கை தவறிய இலங்கை செஞ்சிலுவை சங்கம்
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 03:00.21 PM GMT ]
கிளிநொச்சியில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைந்த சமுக மீள் எழுச்சித்திட்ட அறிமுகவிழா அரச செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதை கிளிநொச்சி அரசாங்க அதிபர் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த அறிமுக நிகழ்விற்கு ஈ.பி.டி.பியின் பா.உறுப்பினர் சந்திரகுமார் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு இலங்கை செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகளுக்கு போதனைகள் பல செய்திருந்தார்.
அதில் குறிப்பாக செய்த போதனை இலங்கை செஞ்சிலுவை சங்கம் அரசியல் தலையீடுகள் இன்றி செயற்பட வேண்டுமாம்.
இந்த தத்துவத்தை மனிதாபிமானம் பாரபட்சமின்மை நடுவுநிலமை என்பவற்றை கொள்கையெனக்கொண்டு செயற்படும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகம் அரசியல் காலடியில் அமர்ந்திருந்து செஞ்சிலுவை அமைப்பின் கொள்கையை காற்றில் பறக்கவிட்டு வந்திருக்கின்றனர்.
ஆட்டில் மாட்டில் கை வைத்து மனுசனில் கைவைத்த கதையாக இதுவரை மக்களுக்கு பல சேவைகளை பல ஆண்டுகளாக நடுவுநிலைமையோடு ஆற்றிவரும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் ஈ.பி.டி.பி கைவைத்திருக்கின்றது.
இனி நாம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளையிடமிருந்து மனிதாபிமானம் பாரபட்சமின்மை நடுவுநிலைமை என்பதை எதிர்பார்க்காமல் இருப்போமாக!
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmu2.html
கண்ணிவெடியில் சிக்கி நபரொருவர் படுகாயம்
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 03:31.16 PM GMT ]
யாழ்ப்பாணம் முகமாலைப் பகுதியில் கண்ணிவெடியில் சிக்கி நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த துணுக்காய் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த மகாலிங்கம் நகுலேஸ்வரன் (வயது 35) என்பவரே சம்பவத்தில் படுகாயமடைந்தவராவார்.
இன்று நண்பகல் 10.45 மணியளவில் வழமைபோன்று முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தவறுதலாக வெடித்ததில் காயமடைந்தார்.
ஹலோ ட்ரஸ்ட் என்ற நிறுவனத்தின் பணியாளரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
குறித்த நபர் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmu4.html
ஜெனிவாவில் ஐநா முன்பாக புலம்பெயர் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 03:25.34 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையின் தென்பகுதியில் அளுத்கம உள்ளிட்ட நகரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்குமுகமாக சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு முன்பாக ஐரோப்பிய முஸ்லிம்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் என்ற அமைப்பினால் அந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு கூடிய நூற்றுக்கணக்கான இலங்கையின் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள், வன்செயலுக்கு எதிராகவும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள்.
அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது, இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து ஐநா விசாரணைக்குழு விசாரணை நடத்தும் பொழுது, இலங்கையில் அண்மையில் சிங்கள கடும்போக்குவாத பொதுபல சேனா அமைப்பினரால் அளுத்கம மற்றும் பேருவளை நகரங்களில் நடத்தப்பட்ட வன்செயல்கள் குறித்தும் விசாரணை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmu3.html
தமிழ்-முஸ்லிம் மக்கள் சேர்ந்து உரிமைகளுக்காகப் போராடும் காலம் வெகுதூரத்தில் இல்லை!- சீ.வி.விக்னேஸ்வரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 01:20.38 AM GMT ]
தமிழ் - முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்காக நீங்கள் உங்களால் ஆன மட்டிற்கு ஒத்தாசை வழங்குங்கள். அதுவும் மன்னாரில் தமிழ்ப் பேசும் கிறிஸ்தவ மக்களின் நலன்களைப் பாதுகாப்பீர்களாக! நாங்கள் சேர்ந்து ஆனால் எமது தனித்தனியான உரிமைகளுக்காகப் போராடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என வடமாகாண முதலவர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மாந்தை மேற்கு பிரதேச சபையின் சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நேற்று சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு அடம்பன் மாந்தை மேற்கு பிரதேச சபை பிரகாரத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் இணை பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் ஆற்றிய உரையின் முழுவடிவம் வருமாறு,
தலைவரவர்களே, கௌரவ அமைச்சர் அவர்களே, கௌரவ அதிதிகளே, சிறப்பு அதிதிகளே, சிறப்பு விருந்தினர்களே, எனதருமைச் சகோதர சகோதரிகளே!
மாந்தை மேற்கு பிரதேச சபை, மற்றைய பிரதேச சபைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இன்று நடந்து கொண்டுள்ளது. சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம் ஆனவை எமது இளம் பிராயத்தினருக்குப்; பயன் உள்ளவை என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. ஆனால் அவற்றைப் பராமரிக்க ஆவன செய்ய வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். அழகாகப் பல இடங்களைத் திறந்து வைத்து விட்டு பராமரிக்காமல் பல தாபனங்கள், திணைக்களங்கள் இருந்து வருவதை நான் கண்டுள்ளேன். அதனால்த் தான் இவற்றை கரிசனையுடன் பராமரித்து வாருங்கள் என்று கூறி வைக்கின்றேன்.
இந்த விழாவில் சகோதரர் றிசாத் பதியுதீன் அவர்களுடன் சேர்ந்து பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அரசாங்க அமைச்சருடன் மாகாண அரசு இணைந்து இவ்விழாவில் ஈடுபட்டுள்ளது என்பதிலும் பார்க்க தமிழ் - முஸ்லிம் ஒத்துழைப்புக்கு இது வழிவகுத்துள்ளது என்பதே எனது மகிழ்ச்சிக்குக் காரணம்.
இவ்வாறு நான் கூறுவதற்குச் சிலர் ஆட்சேபணை தெரிவிக்கக் கூடும். அதாவது பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் ஏன் முதலமைச்சர்; இரு இனங்களின் ஒத்துழைப்பை மட்டும் வலியுறுத்துகின்றார். இது இன ரீதியான பாகுபாடு அல்லவா என்று அவர்கள் கேட்கக் கூடும். வரவேற்கப்பட வேண்டிய வார்த்தைப் பிரயோகம் அது. ஆனால் அதற்குக் காரணம் உண்டு.
இது வரை காலமும் தமிழரில்ச் சிலரும், முஸ்லீம்களில் பெரும்பான்மையினரும் “சேர்ந்து வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற கூற்றுக்கு அமைவாக வாழ்ந்து வந்தார்கள். நாம் பெரும்பான்மையினரின் மொழியில் தேர்ச்சி பெற்று எமது சமயத்தையும் வாழ்க்கை முறையையும் கைவிடாது அவர்களுடன் நல்லுறவுடன் ஒழுகி வந்தோமானால் எமக்குப் பிரச்சினைகள் எழ மாட்டா என்று முஸ்லீம் சகோதரர்கள் இதுகாறும் நினைத்து வாழ்ந்து வந்தார்கள்.
ஏன் இந்தத் தமிழ்ப் பேசும் மக்களும் எங்களைப் போல் நல்லுறவுடன் வாழாமல் முரண்டு பிடிக்கின்றார்கள் என்றும் கேள்வி கேட்டு வந்தார்கள். ஆனால் அண்மையில் நடந்திருக்கும் அனர்த்தங்கள் அவர்களைச் சற்று சிந்திக்க வைத்துள்ளன. சகோதரர் ரிஷாட் அவர்களை ஜனாதிபதியுடன் நேருக்கு நேர் மோதவும் இடமளித்துள்ளது.
இந்த உறவு முறைகளின் தாற்பரியம் என்ன என்று பார்த்தோமானால் ஒரு சிறுபான்மையினர் அவர்களின் கைக்கு அடங்கும் விதத்தில் வாழ முற்பட்டால்த் தான் பெரும்பான்மையினர் அதனைப் பொறுத்துக் கொள்கின்றார்கள். சிறுபான்மையினர் தம் கண்கள் முன் அபிவிருத்தி அடைந்து நல்ல நிலையை அடைவதைப் பார்த்தார்களானால் உடனே மனவெதும்பலுக்கு ஆளாகின்றார்கள். எங்களையும் பார்க்க விரைவில் முன்னேற இவர்களுக்கு என்ன உரித்து இருக்கின்றது என்று சிந்திக்கத் தொடங்கி விடுகின்றார்கள். பின்னர் அதைத் தடை செய்ய முற்படுகின்றார்கள்.
ஆகவே அவர்களின் மொழியைப் படித்து அவர்களின் வாழ்க்கை முறைக்கு ஒப்பான விதத்தில் நாங்கள் வாழ முற்பட்டாலும் இந்த மனோநிலையில் மாற்றம் வரப்போவதில்லை என்பதை அண்மைக்கால நடவடிக்கைகளால் நாங்கள் புரிந்து வைத்துள்ளோம்.
தமிழ் மக்கள் தமது தனித்துவத்தை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்ததின் காரணம் இது தான். எவ்வளவு தான் நாங்கள் சிங்களவர் போல் நடந்து கொண்டாலும், அவர்களின் நடை உடை பாவனைகளை எமதாக்கிக் கொண்டாலும் எங்களைத் “தம்பியோ” என்றும் “உன் தெமளுன்” என்றுந் தான் பெரும்பான்மையினர் ஒரு வித வெறுப்புடன் அழைக்கத் தலைப்படுகின்றனர்.
“சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் சேராது” என்றார்கள் எமது தமிழ் மக்கள். “இல்லை சேருவன” என்றார்கள் பெரும்பான்மை முஸ்லிம் மக்கள். இன்று சேராது என்ற உண்மை வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதற்கு நாங்கள் முஸ்லிம் மக்களைக் குறை கூறுவதாக நினைக்கக் கூடாது. குறை கூறுவதானால் மந்தைக் கூட்டத்தில் இருந்து ஒரு ஆடு வெளியே சென்று திரும்பவும் ஆட்டு மந்தையுடன் வந்து கூட்டுச் சேர்ந்ததைத் தான் நாங்கள் சுட்டிக் காட்ட வேண்டும்.
வட கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் முஸ்லிம் மக்களின் தாய் மொழி தமிழ். அவர்கள் மற்றைய தமிழ் மொழி பேசும் மக்களுடன் மிகவும் அன்னியோன்யமாகவே வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அந்தப் பாரம்பரிய உறவை பரிகசித்துத் தூக்கி எறிந்ததே எமக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது.
கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழ்ப் பேசும் அலகு ஆட்சிக்கு வரவேண்டும் என்று எவ்வளவோ மன்றாடியும் அதனை உதாசீனம் செய்தது எமக்கு மனவருத்தத்தைக் கொடுத்தது. என் நண்பர் திரு.ஆ.ர்.ஆ.அஷ்ரப் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் அவர் தமிழ் - முஸ்லிம் உறவைப் பேணிப் பாதுகாக்கவே முடிவு எடுத்திருப்பார் என்பது எனது கணிப்பு.
பெரும்பான்மையினருடன் சேர்ந்து காரியங்கள் இயற்றுவதில் பிழையில்லை. ஆனால் எமது தனித்துவத்தை மறந்து சுயநல காரணங்களுக்காகப் பெரும்பான்மையினருடன் சேர முற்பட்டால் எம் மீதான மரியாதை குறைந்து விடும்.
இன்று கூட திரு.சம்பந்தன் பற்றியும் அரசாங்கத்துடன் சேர்ந்து அரசியல் நடத்தும் தமிழ்த் தலைவர்கள் பற்றியும் பெரும்பான்மை சமூகத்தினரிடையே இருக்கும் கருத்தைக் கணித்தால் அவர்களுக்குத் திரு.சம்பந்தன் மீது இருக்கும் மட்டு மரியாதை மற்றவர்கள் மீது இல்லை என்பது தெரியவரும்.
இதனை நான் அரசியலுக்கு வர முன்பே தெரிந்து வைத்திருந்தேன். எப்பொழுதுமே நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அரசியல் செய்வதே சாலப் பொருந்தும் என்று நம்புகின்றேன்.
இன்று அமைச்சர் அவர்கள் எம்முடன் ஒரே மேடையை அலங்கரிப்பதால் அவரிடம் ஒரு கோரிக்கை விடுக்கின்றேன். தயவு செய்து தமிழ் - முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்காக நீங்கள் உங்களால் ஆன மட்டிற்கு ஒத்தாசை வழங்குங்கள். அதுவும் மன்னாரில் தமிழ்ப் பேசும் கிறிஸ்தவ மக்களின் நலன்களைப் பாதுகாப்பீர்களாக!
நாங்கள் சேர்ந்து ஆனால் எமது தனித்தனியான உரிமைகளுக்காகப் போராடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று கூறி என்னை இன்று அழைத்தமைக்காக நன்றி கூறி அமர்கின்றேன்.
நன்றி. வணக்கம்.
நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmvz.html

அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடர முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 02:54.48 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளது.
அளுத்கம சம்பவம் தெடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமையவில்லை என தெரிவித்துள்ளது.
எனவே, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய கட்சி தீர்மானித்துள்ளது.
வழக்குத் தொடர்வதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டியது கட்சியின் தலையாய பொறுப்பாகும். இந்த நோக்கத்தின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட உள்ளது.
அளுத்கம சம்பவம் குறித்து பொலிஸார் நடத்தி வரும் விசாரணைகளி;ல் நம்பிக்கை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிறு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmv1.html

Geen opmerkingen:

Een reactie posten