தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juni 2014

கிளிநொச்சியில் ஒரு ஏழையின் மரணமும் இதயம் வலிக்கும் சேதிகளும்!

மங்கள சமரவீர கைது? பாதுகாப்பு அமைச்சு உத்தரவு- மங்களவின் அரச துரோக செயலுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்: ஹெல உறுமய
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 10:19.32 AM GMT ]
புலனாய்வுப் பிரிவினரின் இனவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய மங்கள சமரவீரவை கைது செய்வதற்கு மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் காரணமாக அண்மைக்காலமாக நாட்டில் இனவாத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் புலனாய்வுப் பிரிவினரே இச்செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இயங்கும் விசேட புலனாய்வுப் பிரிவு தொடர்பான தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.
பொதுபல சேனா அமைப்பினருடன் அரசாங்கத்துக்குள்ள தொடர்பு வெளிப்பட்டுள்ள நிலையில், சிறுபான்மையின மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களும் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக அரசாங்கம் தற்போது கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இதனையடுத்து பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச கடும் சினமடைந்துள்ளார்.
நேற்று இரவு அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சந்திரா வாகிஷ்ட, சட்டமா அதிபர் ஆகியோரை அழைத்து திட்டித்தீர்த்துள்ளார்.
மங்கள சமரவீரவை உடனடியாக தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யுமாறு அவர் சீறியுள்ளார்.
தற்போதைய நிலையில் அரசமைப்புச் சட்டத்தின் தேசிய பாதுகாப்பு இரகசியங்கள் தொடர்பான 1955/32 பிரிவின் கீழ் மங்கள சமரவீரவைக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பான இறுதிக்கட்ட ஆலோசனை தற்போது பாதுகாப்பு அமைச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர வெளியிட்ட தகவல் நாட்டை வீழ்த்தும் சதித்திட்டத்திற்கு பக்கபலம் வழங்குவது என ஜாதிக ஹெல உறுமய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண சபை உறுப்பினரும், அதன் ஊடகப் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக நடவடிக்கை குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர, கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், புலனாய்வுப் பிரிவின் தலைவர்களின் பெயர்களை வெளியிட்டமையானது நாட்டுக்கும் நாட்டின் தேசிய பாதுகாக்கும் செய்த பாரிய துரோக செயல் என நாங்கள் வலியுறுத்தி கூறுகிறோம்.
மங்களவின் அரச துரோக செயலுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் - ஜாதிக ஹெல உறுமய
நாட்டின் தேசிய பாதுகாப்பை நோக்கமாக கொண்டு செயற்படும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளின் பெயர்களை வெளியிட்டு, அளுத்கமவில் ஏற்பட்ட மோதலான நிலைமை குறித்து தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் திசை திருப்ப மங்கள சமரவீர நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தெளிவான பச்சை துரோக செயல் என்று கருதும் ஜாதிக ஹெல உறுமய அவரது செயலை வன்மையாக கண்டிக்கின்றது.
மங்கள தனது தகவல் மூலமாக நாட்டுக்கு எதிரான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில், அந்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சர்வதேச சக்திகளுக்கு பக்கபலத்தையும் ஊக்கத்தையும் வழங்கியுள்ளார்.
இலங்கை அரச பாதுகாப்பு பிரிவுகளின் புலனாய்வு அதிகாரிகள் இனவாத, மதவாத மோதல்களை உருவாக்கும் பின்னணியில் இருப்பதாகவும் பல்வேறு பௌத்த அமைப்புகள் ஊடாக பாதுகாப்பு தரப்பு சிறுபான்மை இனங்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து, அதனை திட்டமிட்டு, வழிநடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சுமத்தியுள்ள இந்த குற்றச்சாட்டின் ஊடாக மங்கள சமரவீர, நாட்டை சர்வதேச ரீதியில் மேலும் இறுக்கி, சிக்க வைத்துள்ளார்.
அளுத்கம சம்பவங்களுக்கு புதிய தோற்றத்தை ஏற்படுத்தி, சர்வதேச ரீதியில் நாட்டையும் அரசாங்கத்தையும் அசௌகரியத்திற்கு உள்ளாகி, மங்கள சமரவீர மேற்கொண்டு வரும் துரோத்தனமாக செயல்களுக்கு எதிராக சகல தேசப்பற்றுள்ள சக்திகளும் அணித்திரள வேண்டும்.
போர் நிறுத்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட காட்டிக் கொடுப்பு மீண்டும் எம் நினைவுக்கு வருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அந்த காட்டிக் கொடுப்பு காரணமாக புலனாவுப் பிரிவினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளை நாம் இன்னும் மறக்கவில்லை.
இதனால், இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக தகவல் மற்றும் அரச இரகசியங்களை வெளியிட்டமை குறித்து விசாரணை ஒன்றை நடத்தி, மங்கள சமரவீரவின் அரச துரோக தகவல் வெளியீட்டு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்துமாறு அரசாங்கத்தையும் இந்த விடயம் சம்பந்தமாக பொறுப்புக் கூறவேண்டியவர்களையும் வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnr1.html

கிளிநொச்சியில் ஒரு ஏழையின் மரணமும் இதயம் வலிக்கும் சேதிகளும்
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 05:03.01 PM GMT ]
இந்த மாதத்தின் நடுப்பகுதியில் கிளிநொச்சி செல்வா நகரில், ஒரு காலைப் பொழுதில் ஏழைத்தொழிலாளி தன் மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் பட்டினியின் பிடியில் இருந்து காத்துக் கொள்ள தன் கந்தல் வீட்டில் இருந்து புறப்பட்டு கனகபுரம் வீதிக்கு ஏறும் ஒரு சந்தியில் மயங்கி வீழ்ந்தார்.
அயலில் உள்ளவர்கள் தெருவில் வந்தவர்கள் அந்த மனிதனை தூக்கியபோது அவரின் உயிர் பிரிந்திருந்தது. அந்த ஏழை மனிதனின் மரணமும் மரண வீடும் அந்த கிராமத்தின் குறித்த சிலரின்  உதவிகளுடன் இடுகாடுபோய் முடிந்துபோயிற்று.
அந்த ஏழை மனிதனின் பெயர் வைத்திலிங்கம் விக்னேஸ்வரன். 55வயது மதிக்கத்தக்க அந்த மனிதரின் மனைவி புவனேஸ்வரி. விரல்விட்டு எண்ணுகின்றவர்கள் மட்டும் சுற்றியிருக்க தன் பிரிவு ஆற்றாமையைக்கூட அழ சக்தி அற்றவளாய் இருந்தாள்.
விக்னேஸ்வரன் புவனேஸ்வரி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள், டிலக்சன் பிறப்பிலேயே சித்த சுவாதீனமற்றவனாய் ஆகியிருக்கிறான். அடுத்தவள் லாயினி, கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் படிக்கும் சிறுமி.
அந்தப்பாடசாலைக்கும் லாயினியின் வீட்டுக்கும் நெடுந்தூரம் நடந்தே அந்த ஏழைச் சிறுமியின் கால்கள் தேய்ந்துபோயிருக்கிறது.
மரண வீடு நடந்து இரண்டு வாரங்கள் கழித்து லாயினியை சந்திக்கநேர்ந்தபோது லாயினி இறந்துபோன தன் தந்தையின் பழைய கறள் பிடித்த சைக்கிளில் பாறுக்கு கீழாக கால்களை நுழைத்த கெந்தி கெந்தி சைக்கிளோட கற்றுக்கொண்டிருந்தாள்.
ஏழை தொழிலாளி விக்னேஸ்வரனின் மரண வீடு பலருக்கும் மனச்சாட்சி உள்ளவர்களுக்கும் இதயத்தை நெருடுவது. ஏனெனில் வடக்கின் வசந்தத்தை பற்றியும் மேதகு ஜனாதிபதியின்  அபிவிருத்தி பற்றி அடிவருடி புராணங்கள் பாடுகின்றவர்களுக்கும் சில இடங்களில் ஆட்களே நடமாடாத வீதிகளுக்கும் குச்சொழுங்கைளுக்கும் கொங்கிறீட் போடுகின்றவர்களுக்கும் கிளிநொச்சி செல்வாநகரின் விக்னேஸ்வரனின் மரணத்துக்கு முன்னாக அவரது மிகவும் ஏழ்மையின் அடையாளத்தை காட்டும் கந்தல் வீடு.
அந்த வீட்டுக்கு தண்ணீர் இல்லை.மலசல கூடம் இல்லை. வேலி இல்லை. அவர்கள் அன்றாடம் சாப்பிடுகின்றார்களா, இல்லையா என்ற சேதி யாருக்கும் தெரியவில்லையே என்பதுதான்.
ஒன்றுக்கு பல வீடுகள், காணிகள், சொத்துச் சேர்ப்புக்கள். வாய்கிழிய அரசியல் பேச்சு. தேர்தல் காலங்களில் மட்டும் ஏழைகளின் படலைகளை திறந்து வாக்குப்பிச்சை எடுக்கும் இந்தச் சமுகத்தின் புல்லுருவிகள் என்று நிறம்மாறி நிறைந்து வழியும் இந்தச்சமுகத்தில் ஒரேஒரு வீடு அதற்கு ஒரு சிறுகிணறு.
ஒரு தற்காலிக மலசல கூட வசதியேனும் பிள்ளைகளுக்கு போசாக்கான உணவு, வீட்டுக்கு வேலி என்று எதுவுமே இல்லாமல் ஏன் முகவரியே இல்லாமல் பல குடும்பங்கள் சீரழிகின்றன என்பதற்கு கிளிநொச்சி செல்வாநகரின் வைத்திலிங்கம் விக்னேஸ்வரன் என்ற ஏழைத் தொழிலாளியின் மரணமும் அவர்களின் குடும்பத்தின் ஏழ்மையும் அந்த மரண வீட்டுக்காட்சியும் சாட்சி.
இந்த குடும்பத்துக்காக அயலுள்ள மற்றைய ஏழைகள் மிகுந்த கவலைப்படுகின்றார்கள். ஆனால் அவர்களிடம் கொடுக்கின்ற மனம் மட்டுமே உண்டு கொடுப்பதற்கு ஏதுமில்லை.
இந்த ஏழைக் குடும்பத்தில் தமிழ்மதி என்ற அழகான பெயருடன் கடைசிச்சிறுமி இருக்கிறாள். அவள் முதலாம் ஆண்டு படிக்கின்றாள். லாயினி ஆறாம் ஆண்டு படிக்கின்றாள். டிலக்சன் சித்தசுவாதீனமுற்றவன். அம்மா எலும்பும் தோலுமான தாய் புவனேஸ்வரியால் என்ன செய்யமுடியும்.
தன் கணவன் தங்களுக்கு சாப்பாட்டுக்கு குறைவைக்கவில்லை என்று புவனேஸ்வரி சொல்கிறாள். உண்மைதான். ஏழைகளின் சாப்பாடு மூன்று வேளையா? இரண்டு வேளையா? ஒரு வேளையா?
கிளிநொச்சி செல்வாநகரில் தன் கணவனை இழந்து மூன்று பிள்ளைகளுடன் நிர்க்கதியாகி நிற்கும் புவனேஸ்வரிக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு பா.உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக ஒரு தொகுதி பண உதவியை வழங்கியிருக்கின்றது.
அதை பா.உறுப்பினர் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் பாலாசிங்கசேதுபதி தனது செயலாளரும் கட்சியின் மாவட்டத்தின் உப தலைவருமான பொன்.காந்தன் ஆகியோருடன் சென்று கையளித்துள்ளார்.
அத்தோடு இக்குடும்பத்தின் பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் சிறக்க கருணை உள்ளம் படைத்தவர்கள் உதவ வேண்டுமென அவர் கோரிக்கையும் விடுத்துள்ளார்.
செல்வாநகரின் இதயம் வலிக்கும் சேதிகள் இன்னும்........
செல்வாநகர் பிரதான வீதியில் இறங்கி குறுகிய தூரத்தில் மரணித்துப்போன வைத்திலிங்கம் விக்னேஸ்வரன் என்ற ஏழைத் தொழிலாளியின் வீட்டின் அயலில் கிட்டத்தட்ட இந்தக்குடும்பத்தின் நிலையை ஒட்டியே இன்னும் ஏழெட்டுக் குடும்பங்களின் நிலையும் விரிகின்றது.
இவர்களை பா.உறுப்பினர் சி.சிறீதரன் சந்தித்தபோது அவர்கள் கூறிய கதைகள் அதிர்ச்சி தருகின்றவைதான்.
இன்னமும் இவர்களுக்கு வீட்டுவசதிகள், வீட்டுத்திட்டங்கள் எதுவுமில்லை. மலசலகூட வசதியில்லை. கிட்டத்தட்ட இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் வாழந்து வருதாகவும் தமது வாழ்கையில் எந்த விடியலும் இல்லை என்கிறார்கள்.
வீதியில் உள்ள ஒரு குழாய்க்கிணறுதான் ஒரு அட்சய பாத்திரமாக ஏதோ கொஞ்ச தண்ணீர் கொடுக்கின்றது. குளிப்பதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.
தண்ணீர் பிரச்சினை செல்வாநகரில் உள்ள குடும்பங்களையும் வாட்டாமல் இல்லை. இந்த வாழ்;க்கையும் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் காணி வீட்டுவசதிகள் பொதுவசதிகளை திட்டமிடுகின்றவர்களின் அசமந்த போக்கு பாரபட்சம் மனச்சாட்சி இன்மை என்பவற்றால் சீரழிந்து போகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnt4.html

Geen opmerkingen:

Een reactie posten