தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 maart 2015

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவது பிரித்தானியாவில் குற்றச்செயலாகும்!

100 நாட்களை விட மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளே முக்கியம்: சம்பிக்க ரணவக்க
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 12:58.54 PM GMT ]
100 நாட்கள் மிக முக்கியமானது அல்ல, அந்த நாட்களுக்குள் மேற்கொள்ளப்படுகின்ற மாற்றங்களே முக்கியம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மிஹின்தலை புனித பூமியில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை மக்கள் அதிகாரத்திற்கு நியமித்தது அரசியல் சீர்திருத்தங்களுக்காகவே என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த அரசியல் சீர்திருத்தத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவும், பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்றியமைக்கவும் விசேடமாக இலஞ்சம் மற்றும் ஊழல்களை ஒழிக்கும் ஆணைக்குழுவை அமைப்பதனை மக்கள் குறித்த 100 நாட்களில் எதிர்பார்க்கிறார்கள். அதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் யாழ்ப்பாணம் செல்கிறார் மோடி
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 02:47.45 PM GMT ] [ பி.பி.சி ]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக அடுத்த வாரம் மார்ச் மாதம் 13ம் தேதி இலங்கைக்கு செல்லும் போது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னாருக்கும் செல்வார் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
மோடியின் இலங்கை பயணத்தின் போது அவர் செல்லும் இடங்கள் தொடர்பான பயணத்திட்டத்தை இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறது.
அதன்படி, இலங்கைத் தலைநகர் கொழும்பு தவிர அநுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னாருக்கும் மோடி செல்வார் என்று கூறப்பட்டுள்ளது.
அநுராதபுரத்தில் மோடி மஹாபோதி புனிதத்தலத்துக்கு செல்வார் என்றும், யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியுடன் அமைக்கப்படவிருக்கும் யாழ்ப்பாண கலாச்சார மையத்துக்கு அவர் அடிக்கல் நாட்டுவார் என்றும் இந்திய உதவியுடன் கட்டப்பட்டிருக்கும் வீடுகளை அதற்குரிய பயனாளிகளுக்கு அவர் கையளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னாரில், தலைமன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையிலான ரயில் சேவை மீண்டும் தொடங்குவதை குறிப்புணர்த்தும் விதமாக அங்கிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் முதல் ரயிலுக்கு கொடியசைத்து மோடி தொடக்கி வைப்பார் என்றும் இலங்கை அரசின் செய்திக் குறிப்பு தெரிவித்திருக்கிறது.
இந்திய நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ரயில்பாதை புனரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக நாட்டின் வடக்குக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் சேவை மீண்டும் செயற்படத் தொடங்கும் என்றும் இலங்கை அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜாங்கப் பேச்சுவார்த்தைகளை மோடி நடத்துவார் என்றும், இலங்கை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் அவர் பேசுவார் என்றும், இலங்கையில் இருக்கும் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை இராணுவத்தினரில் அங்கே கொல்லப்பட்டவருக்கான நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைப்பார் என்றும், மஹாபோதிக்கு செல்வார் என்றும் இலங்கை அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன, தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக பெப்ரவரி மாதம் இந்தியா சென்றிருந்தார்.
அவரது நான்கு நாள் இந்தியப் பயணத்தின் போது அவர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து உரையாடியிருந்தார்.
இந்தியா இலங்கைக்கு இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல ஒப்பந்தங்களும் அப்போது கையெழுத்திடப்பட்டன. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வரும்படி மைத்ரிபால சிறிசேன அப்போது நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாக இந்திய தரப்பிலும் அப்போதே தெரிவிக்கப்பட்டிருந்த பின்னணியில் மோடியின் இலங்கை பயணத்திட்ட விவரங்கள் இன்று இலங்கை அரசால் முறைப்படி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தனது இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச்.15 ம் தேதி மோடி இந்தியா திரும்புவார் என்றும் இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக செல்லவிருக்கிறார். 1987ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக சென்று அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவுடன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அந்த பயணத்தின் முடிவில் அவர் இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் அப்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு மட்டுமான அரசுமுறைப் பயணமாகச் செல்வது இதுவே முதல்முறை.
ராஜீவ் காந்திக்குப் பிறகான காலகட்டத்தில் இந்தியப் பிரதமர்கள் சிலர் இலங்கைக்கு சென்றிருந்தாலும் இலங்கைக்கான தனிப்பட்ட அரசுமுறைப் பயணமாக அவை அமைந்திருக்கவில்லை. மாறாக, இலங்கையில் நடந்த சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்வதற்கான பயணங்களாகவே அவை அமைந்திருந்தன.
2008ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொண்டு சார்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை அப்போதைய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கையளித்தார்.
அதேசமயம், 2013ம் ஆண்டு இலங்கையில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டில் அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றும்போது கடும் பாதுகாப்பு ஏற்பாடு
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 04:11.36 PM GMT ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருப்பதை முன்னிட்டு கடும் பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனை இன்று பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அறிவித்தார்.  இதன்படி இலங்கை வரும் மோடி 13ஆம் திகதியன்று பிற்பகல் 3.15க்கு இலங்கையின் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
இதனை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள அலுமாரிகள் சோதனையிடப்படவுள்ளன.
பார்வையாளர் களறிகளில் பொதுமக்களுக்கு இடம்தரப்படமாட்டாது. பதிலாக விசேட அதிதிகள் மாத்திரமே அதில் அனுமதிக்கப்படுவர்.
அதேநேரம் நாடாளுமன்ற வாகன தரிப்பிடம் மூடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாகனங்களை சாரதிகளின் துணையின்றி, தாங்களே செலுத்தி வரவேண்டும் என்றும் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஆலோசகராக கிறிஸ் நோனிஸ் நியமனம்
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 04:33.06 PM GMT ]
பிரித்தானியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று நோனிஸிடம் கையளித்தார்.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் அமெரிக்காவில் வைத்து கிறிஸ் நோனிஸ் மீது நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன தாக்குதல் நடத்தினார்.
இதனையடுத்து நோனிஸ் தமது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவது பிரித்தானியாவில் குற்றச்செயலாகும்!
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 04:24.04 PM GMT ]
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவது பிரித்தானியாவில் குற்றமாகும் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரக பேச்சாளர் தெரிவித்துள்ளார் என இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கமாகும்.
எனவே அதற்கு ஆதரவை வெளிப்படுத்த முடியாது. அது பிரித்தானிய சட்டப்படி குற்றமாகக் கருதப்படும்.
ஐ.நா விசாரணை தாமதமானமைக்காக அண்மையில் பிரித்தானியாவில் அமெரிக்க தூதரகத்துக்கு முன்னாள் மேற்கொள்ளப்பட்ட பேரணியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் உருவப் பொம்மைகளும் எரியூட்டப்பட்டன. இவ்வாறு உருவப்பொம்மைகள் எரிப்பது சட்டத்துக்கு மீறிய செயல் என பிரித்தானிய பொலிஸாரும் தெரிவித்துள்ளனர்.
இந்த பேரணி தொடர்பிலேயே உயர்ஸ்தானிகரக பேச்சாளர் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTaSUmrzC.html

Geen opmerkingen:

Een reactie posten