தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 maart 2015

போலி கடவுச்சீட்டில் இத்தாலி செல்ல முயன்ற பெண்ணொருவர் கட்டுநாயக்கவில் கைது!

மைத்திரியின் மக்கள் தொகையினை கொள்ளையடித்து பிரதமரானார் ரணில்: ஜாதிக ஹெல உறுமய
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 09:00.55 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைத்த மக்கள் தொகையினை கொள்ளையடித்தே ரணில் பிரதமராகியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
மேலும் ரணில் 100 நாள் வாக்குறுதிகளை மறந்துவிட்டு மீண்டும் ஒரு தேர்தலில் போட்டியிட முயற்சிக்க வேண்டாம் என ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்று அரசாங்கத்தில் பிரதமர் பதவியையும் அமைச்சர் பதவிகளையும் ஐக்கிய தேசிய கட்சியினர் பெற்றுக்கொள்ள தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவும் நல்லாட்சியை எதிர்பார்த்தே மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்தார்கள்.
நாடு கேட்கின்ற அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தாமல் ஏப்ரல் 23ஆம் திகதி தேர்தல் இடம் பெறவேண்டும் என கூறும் அதிகாரம் யாருக்கும் இல்லை என நிஷாந்த வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.


எனது அரசியல் பிரவேசம்,சமயத்துக்கு முரணானதாக இருந்தால் அரசியலை விட்டுவிலக தயார்: யோகேஸ்வரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 09:12.18 AM GMT ]
எனது அரசியற் பிரவேசம் எனது சமயத்துக்கு முரணானதாக இருந்தால் நான் அரசியலிலிருந்து விலகுவதற்கு தயாராக இருக்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான இரண்டு நாட்கள் கொண்ட வதிவிடப் பயிற்சிநெறி சனிக்கிழமை மட்டக்களப்பு இந்து கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
அறநெறிப் பாடசாலைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே உருவாக்கப்பட்டன. தற்போது இந்து கலாசார திணைக்களம் அறநெறிப் பாடசாலைகளை வளப்படுத்தி வருகின்றது. அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் முற்பிறப்பில் செய்த புண்ணியத்தினால்தான் தற்போது மகத்தான ஆசிரியர் சேவை செய்து வருகின்றார்கள். இந்த புனிதமான பணியைச் செய்கின்றவர்கள் அனைவரும் புனிதர்களாக மாறவேண்டும். தமிழுக்கும் சைவத்துக்கும் பாரம்பரிய பண்பாடுகள் இருக்கின்றன.
இந்தப் பண்பாடுகளைப் நாங்கள் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். வெளிநாடுகளிலும்,வட மாகாணத்திலும் தமிழ், சைவ கலாசாரம் நன்கு பேணப்பட்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. ஆனால், நமது கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான கலாசாரம் மாறுபட்டு நிற்கின்றது. அறநெறிப்பாடசாலை நேரத்தில் ஏனைய பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம்.
தேசிய ரீதியில் இவற்றுக்குரிய சட்டம் கொண்டு வராவிட்டாலும் பிரதேச சபை, நகரசபை, மாநகர சபை, மாகாணசபை போன்றவற்றில் சட்டம் கொண்டு வருவதற்கு உரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுப்பதற்கு மிக விரைவில் நடவடிக்கை எடுப்பேன். மிக நீண்டகாலமாக இருந்துவரும் இப்பிரச்சனைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.
இந்து கலாசார திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகுந்த சேவையாற்றி வருகின்றது. ஆனால், அதன் பலாபலன்களை எமது மாவட்டம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் இருப்பதெல்லம் இந்து சமயம் பேணப்பட வேண்டும், இந்து சமயம் வளர்க்கப்பட வேண்டும், எங்கள் மக்கள் உண்மையான இந்துக்களாக வாழவேண்டும் என்பதற்காகவே தான் என அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms1D.html

போலி கடவுச்சீட்டில் இத்தாலி செல்ல முயன்ற பெண்ணொருவர் கட்டுநாயக்கவில் கைது!
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 09:23.53 AM GMT ]
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்த பெண்ணொருவரை விமானநிலைய குற்றப்புலானய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொத்துவிலைச் சேர்ந்த 32 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர், தனது உண்மையான கடவுச்சீட்டு மற்றும் மாலைத்தீவுக்கு செல்வதற்கான பயணச்சீட்டு ஆகியவற்றை கருமபீடத்தில் கையளித்து பயணிப்பதற்கு தேவையான ஆவணங்களை பெற்று குடிவரவு, குடியகல்வு பிரிவுக்குச் சென்று மாலைதீவுக்கு செல்வதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளார்.
எனினும், விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் இருக்கின்ற கடைசி கருமபீடத்தில், தான் டுபாய் ஊடாக இத்தாலி செல்வதற்கு வருகை தந்ததாக தெரிவித்து அதற்கான ஆவணங்களையும் பிறிதொரு கடவுச்சீட்டையும் காண்பித்துள்ளார்.
அதன்பிரகாரம் அவர், எமிரேட்ஸ் விமானசேவைக்கு சொந்தமான ரி.கே.653 இலக்க விமானத்திலேயே டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்கு முயற்சித்துள்ளார்.
இதன்போதே, அதிகாரிகள் சந்தேகம் ஏற்பட்டு அப்பெண்ணை கைதுசெய்துள்ளனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இத்தாலியில் வசிக்கின்ற இலங்கைப் பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்த பெண்ணின் படத்தை பயன்படுத்தி போலியான கடவுச்சீட்டு மற்றும் தேவையான ஆவணங்களை தயாரித்து அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
போலியான ஆவணங்களை தயாரிப்பதற்காக சந்தேகநபரான அந்த பெண், கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேகநபரான அந்த பெண்ணை, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms1F.html

Geen opmerkingen:

Een reactie posten