[ புதன்கிழமை, 21 மே 2014, 06:55.07 AM GMT ]
இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்கான அழைப்பு புதுடெல்லியிலிருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
அயல் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அயல்நாட்டுடன் எப்போதுமே சுமுக உறவை விரும்பும் இலங்கை, அந்த உறவையும் நட்பையும் பலப்படுத்துவதையே விரும்புகிறது.
இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்குபற்றுவதன் மூலம் இந்தியாவின் புதிய ஆட்சிப் பீடத்துடன் ஒரு நெருக்கமான உறவைத் தொடர்வதற்கும், இருதரப்பு ஊடாட்டத்தைப் பலப்படுத்துவதற்கு முடியும் என கொழும்பு கருதுகின்றது என இவ்விடயங்களுடன் சம்பந்தப்பட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
திங்களன்று மாலையில் புதுடெல்லியின் குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தப் பதவியேற்பு நிகழ்வு நடைபெறுகின்றது.
தற்சமயம் சீனாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி, அங்கிருந்து திரும்பிய பின்னர், புதிய இந்தியப் பிரதமரின் பதவியேற்பு வைபவத்தில் பங்குபற்றுவதற்காகப் புதுடெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்குபற்றுமாறு இலங்கை உட்பட அனைத்துத் தென்னாசிய நாடுகளின் தலைவர்களுக்கும் புதுடெல்லி அழைப்பு அனுப்பியிருப்பதாக அறியவந்திருக்கிறது.
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் திங்கட்கிழமை(26.5.14) பிரதமராகப் பொறுப்பேற்கிறார்.
அந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதை ஏற்றுக் கொண்டு பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் என, புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் பாகிஸ்தான் பிரதமர் அதில் கலந்து கொள்வாரா என்று இதுவரை தகவல்கள் ஏதும் இல்லை.
நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்ச பங்கேற்க அனுமதிக்கக் கூடாது!- வைகோ அறிக்கை
[ புதன்கிழமை, 21 மே 2014, 03:13.03 PM GMT ]
நரேந்திர மோடி அவர்களின் தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி ஏற்கும் விழாவிற்கு, சிங்கள அதிபர் மாபாவி ராஜபக்சவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், ராஜபக்ச கலந்து கொள்ள இருப்பதாகவும் வந்த தகவல் பேரிடியாகத் தாக்குகிறது.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, நரேந்திர மோடி அவர்கள் பிரதமராகப் பொறுப்பு ஏற்க இருக்கின்ற விழா, இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக, தலைநகர் டில்லியில் நடைபெற இருக்கிறது.
தாய்த் தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி மீள முடியாத படுதோல்வியைச் சந்தித்தது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மக்கள் முற்றாக உதறி எறிந்து உள்ளனர்.
இலங்கையின் சிங்கள அரசு இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை நடத்த, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தியாவின் முப்படைகளையும் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கொடுத்து, தமிழ் இனப்படுகொலைக்கு முழுக்காரணம் ஆயிற்று.
தமிழக மீனவர்கள் 578 பேருக்கு மேல் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டனர்.
எனவே, சிங்கள அரசுக்கு எதிராக, தாய்த் தமிழகத்திலும் உலகெங்கிலும் உள்ள கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சில் ஆறாத ரணம் ஏற்பட்டு உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், நரேந்திர மோடி அவர்களின் தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி ஏற்கும் விழாவிற்கு, சிங்கள அதிபர் மாபாவி ராஜபக்சவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், ராஜபக்ச கலந்து கொள்ள இருப்பதாகவும் வந்த தகவல் பேரிடியாகத் தாக்குகிறது.
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் இரத்தக்கறை படிந்த கரங்களோடு, இந்திய நாட்டுக்குள் ராஜபக்ச நுழைவதை எந்தவிதத்திலும் தமிழர்களால் சகித்துக் கொள்ள இயலாது.
ராஜீய சம்பிரதாயங்கள் என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை. தங்கள் நாட்டுக் குடிமக்கள், இன்னொரு நாட்டு இராணுவத்தால் கொல்லப்பட்டால், உடனே அந்த நாட்டுடன் ராஜீய உறவுகளை, பாதிக்கப்பட்ட நாடு துண்டித்துக் கொள்கிறது.
எனவே, சார்க் நாடுகளுக்கு அழைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
1998-99 ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது, 2004,09 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோதும் சிங்கள அதிபர் அழைக்கப்படவில்லை என்பதை, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.
எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழ் மக்களை ஈவு இரக்கம் இன்றி, வதை செய்து கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச, புதுடில்லி பதவி ஏற்பு விழாவுக்கு வர அனுமதிக்கப்பட்டால், அந்த நிகழ்ச்சி தமிழ் இன மக்களுக்கு துக்கத்திற்கும், வேதனைக்கும் உரிய நிகழ்ச்சியாகவே அமையும்.
எனவே, தமிழகத்திலும், தரணியெங்கும் வாழும் தமிழ் இன மக்களின் மனதில் சோகத்தை மூட்டி விட்டு, ராஜபக்ச கூட்டம் கும்மாளம் போடுவதற்கு வாய்ப்பாக, சிங்கள அதிபரை பதவி ஏற்பு விழாவில் பங்கு ஏற்க, அனுமதிக்க வேண்டாம் என்று, தாங்க இயலாத மனவேதனையுடன், பிரதமர் ஆகப் போகின்ற பொறுப்பு ஏற்க இருக்கின்ற நரேந்திர மோடி அவர்களையும், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் அவர்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
21.05.2014 மறுமலர்ச்சி தி.மு.க
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
21.05.2014 மறுமலர்ச்சி தி.மு.க
http://www.tamilwin.com/show-RUmsyFRVLZmt1.html
Geen opmerkingen:
Een reactie posten