தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 9 september 2014

ஐ.நா. அமைதிப்படையில் இலங்கை விமானப்படை!



ஐ. நா. அமைதிப் படையினருடன் இணைந்து பணியாற்றுவதற்காக இலங்கை விமானப்படை மத்திய ஆபிரிக்க குடியரசிற்கும் தென்சூடானுக்கும் பயணமாகவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார்மார்ஷல் கோலித்த குணதிலக்க தெரிவித்தார்.
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டருடன் 120பேர் கொண்ட குழு இன்று மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு புறப்பட்டுச் சென்றது. இரண்டாவது குழு வெகு விரைவில் தெற்கு சூடான் நோக்கி பயணமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை விமானப்படை வரலாற்றில் ஐ.நா. அமைதிகாக்கும் படையுடன் இணைந்து கடமையாற்றுவதற்காக விமானப்படை ஹெலிகொப்டர்களும், விமானப்படை வீரர்களும் புறப்பட்டுச் சென்றமை இதுவே முதற்தடவையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை விமானப்படை ஐ.நா. அமைதிகாக்கும் படையுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம ளிக்கும் விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள விமானப்படை தலைமையகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் பாது காப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளரும் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ருவண் வணிகசூரிய, விமானப்படையின் பதில் ஊடகப் பேச்சாளர் வின்ங் கொமாண்டர் பத்மன் கொஸ்தா, ஐ.நா. அமைதிகாக்கும் குழுவுக்கு பொறுப்பாக செல்லவுள்ள விமானப் படையைச் சேர்ந்த பின்ங் கொமாண்டர் விஸ்வ சாமன்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு விமானப்படைத் தளபதி மேலும் விபரிக்கையில்,
இலங்கையின் பாதுகாப்பு படையினர் 1962ம் ஆண்டு முதல் ஐ.நா. பாதுகாப்பு படையுடன் இணைந்து சேவையாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கு விமானப்படையின் எம். ஐ. 17 ஹெலிகொப்டர்களையும், விமானப் படை வீரர்களையும் அனுப்பி வைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரியிருந்தது.
எனினும், இலங்கையில் அப்போதிருந்த நிலைமையை கருத்திற்கொண்டு அந்த நடவடிக்கையில் விமானப்படையினருக்கு பங்கு கொள்ள முடியாது போனது.
யுத்தம் முடிவுற்றுள்ள தற்போதைய நிலைமையில் விமானப் படை ஹெலிகொப்டர்களை ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியதை அடுத்து தற்போது முதலாவது குழுவினர் இன்று புறப்பட்டு சென்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த முதலாவது குழுவில் எம்.ஐ. 17 ரக ஹெலிகொப்டர்கள் மூன்றுடன், 17 விமானப்படை அதிகாரிகள் உட்பட 122 விமானப்படை வீரர்கள் முதற் குழுவில் மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு சென்றுள்ளனர்.
இவர்களில் தொழில் ரீதியில் அனுபவம் வாய்ந்த விமானிகளும், விமானப் படையின் பொறியியலாளர்களும் ஏனைய உதவிப் படையினரும் அடங்குவர்.
இன்று புறப்பட்டு சென்ற இந்தக் குழுவினர் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மத்திய ஆபிரிக்கா குடியரசிற்கு சென்றடைந்து அதற்கடுத்த இரண்டு வாரங்களில் தமக்கு வழங்கப்பட்டுள்ள பிரதேசத்தில் நிலைகொண்டு தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளனர்.
படை வீரர்களை அழைத்துச் செல்லல், காயமடைந்தவர்களை கொண்டு செல்லல், ஹெலிகொப்டரில் இருந்து கண்காணிப்புகளை மேற்கொள்ளல், விசேட பிரமுகர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லல் போன்ற நடவடிக்கைகளில் இந்தக் குழுவினர் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு தேவையான மூன்று ஹெலிகொப்டர்களுடன் சகல அத்தியாவசிய உபகரணங்களும் விமானம் மற்றும் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தெற்கு சூடானில் கடமையாற்றும் பொருட்டு விமானப் படையினர் இரண்டாவது குழுவினர் வெகுவிரைவில் அங்கு செல்லவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இங்கு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விமானப்படைத் தளபதி, இலங்கை விமானப்படையினரிடம் எம்.ஐ.17 ரக ஹெலிகொப்டர்கள் 21 உள்ளன. நாட்டின் தற்போதைய நிலைமையில் அவ்வப்போது தேவைப்படும் நட வடிக்கைகளுக்கு மாத்திரமே இந்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 6 ஹெலி கொப்டர்களை ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைப்பதன் மூலம் விமானப் படையின் நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.
இன்னுமொரு ஊடகவியலாளர் எழு ப்பிய கேள்விக்கு பதிலளித்த விமானப்படைத் தளபதி ருவன் வணிகசூரிய, ஐ.நா. அமைதிகாக்கும் படையில் விமானப்படையினர் இணைந்து செயற்படுவதன் மூலம் எமது நாட்டுக்கு பாரிய வருமானம் கிடைக்கப் பெற உள்ளது.
ஹெலிகொப்டர்கள் விமானப்படை வீரர்களுக்கான காப்புறுதி நடவடிக்கைகளுக்கும் அவர்களது பாதுகாப்புக்கும் ஐக்கிய நாடுகள் சபை உத்தரவாதம் வழங்கியுள்ளதென்றும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhv6.html

Geen opmerkingen:

Een reactie posten