தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 september 2014

இராணுவத்தினரின் படங்களை எடுத்து விளம்பரம் செய்வோம்: எச்சரிக்கும் விக்னேஸ்வரன்!

மக்களுக்குப் பயனளிக்கும் பலவித செயற்திட்டங்களில் நாம் இப்பொழுது இறங்கியுள்ளோம். இதுவரை காலமும் “நாங்கள் எதைச் செய்தோம்?” என்றார்கள். இப்பொழுது “ஏன் செய்கின்றோம்?” என்கிறார்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முழங்காவில் கிராம அபிவிருத்திச் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இராணுவம் வடகிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து இருபத்து ஐந்து வருடங்களுக்கேனும் இருக்கவேண்டும் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அந்தக் காலகட்டத்தில் சிங்களவரை பெருவாரியாகக் கொண்டு வந்து இங்கு குடியிருத்தி,  இந்நாட்டில் பறங்கியர் ஒருகாலத்தில் இருந்தார்கள் என்று நாம் எவ்வாறு இப்பொழுது கூறுகின்றோமோ, அதே போல் இங்கு தமிழ்ப் பேசும் மக்கள் ஒருகாலத்தில் இருந்தார்கள் என்று கூறக் கூடிய ஒரு காலகட்டத்தை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனக்குக் கிடைத்த தகவலின் படி 2008ம் ஆண்டிலேயே அரசாங்கம் சார்ந்த உயர் அதிகாரி ஒருவர் “போர் விரைவில் முடிந்து விடும். ஆனால் எமது இராணுவம் குறைந்தது 25 வருடங்களாவது வடகிழக்கு மாகாணங்களில் நிலைநிறுத்தப்பட்டு தமிழ்ப் பேசும் மக்களைத் தலையெடுக்க விடாமல் பண்ண வேண்டும்” என்று கூறியுள்ளாராம்.
அவர் குறிப்பிட்ட கூற்றுக்கு ஏற்பவே நடவடிக்கைகள் நடந்து வருவதாகத் தென்படுகிறது. அவர்களுக்கு ஒன்று மட்டும் கூற விரும்புகிறேன் 1988ம் ஆண்டில் ஒரு இந்திய இராணுவ உயர் அதிகாரி என் நண்பர் ஒருவருக்குக் கூறினாராம் பின்வருமாறு, “நாங்கள் இங்கு வந்து விட்டோம். இனி 100 வருடங்களுக்கு இலங்கையை விட்டுப் போக மாட்டோம்”
என்றாராம்.
ஆனால் அடுத்த வருடமே பிரதமர் வீ.பீ.சிங்கின் வருகையுடன் இந்திய இராணுவம் வாபஸ் பெறப்பட்டது. Man proposes God disposes என்பார்கள் அதாவது மனிதன் முன்மொழிவான் இறைவன் முடித்து வைப்பான் என்பதின் அர்த்தத்தை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இராணுவத்தில் இருந்து சிலர் இங்கு வந்து படமெடுத்துக் கொண்டிருப்பதாக அறிகிறேன். ஏன் என்று எனக்குப் புரியவில்லை. எமது பாதுகாப்புக்கா அல்லது மக்களை அச்சுறுத்துவதற்கா படம் எடுக்கின்றீர்கள்? பாதுகாப்பென்றால் எங்கள் மக்களுக்குத் தேவையான ஒரேயொரு பாதுகாப்பு இராணுவத்தினரிடம் இருந்து தான்.
நாங்கள் இராணுவத்தினரை எங்களைப் பாதுகாருங்கள் என்று கூறவில்லை.
இராணுவம் இங்கு இருப்பதால் எம் மக்கள் தான் பாதுகாப்பின்றி பயத்திற்கு ஆளாகின்றார்கள். படம் எடுப்போர் அவ்வாறு செய்வதை உடனே நிறுத்த வேண்டும். இல்லை என்றால் எங்கள் இளைஞர் யுவதிகளைக் கொண்டு உங்களின் படங்களை நாம் எடுத்து தெற்கிலே பத்திரிகைகளில் விளம்பரம் செய்வோம்.  இவ்வாறு தான் இராணுவம் இங்கு படம் எடுக்கின்றார்கள்  என்றுசொல்லி வைப்போம்.
இதே போல்த் தான் கடந்த 7ம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வருடாந்த மகாநாட்டிற்கு கனகராயன் குளம், நெடுங்கேணி, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் இருந்து வர எத்தனித்த எம்மக்கள் இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தொட்டிலையும் ஆட்டிவிட்டு குழந்தையையும் கிள்ளிவிடும் பணியில்  அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. ஒரு புறம் எம்முள் இணக்கம் வேண்டும், நாம் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஊரறிய, உலகறிய, வாய் வழியகக் கத்துகின்றார்கள் அரசாங்கத்தவர்கள்.
மறுபுறம் இராணுவக் கட்டுப்பாட்டைக் கூட்டி மக்களை அச்சுறுத்தி அவர்களின் ஜனநாயக உரிமைகளை அவர்கள் பிரயோகிப்பதைத் தடுக்க முயல்கின்றார்கள்.
எமது தமிழ்ப் பேசும் மக்கள் தமது மத ரீதியான வேற்றுமைகளை மறந்து ஒருமித்துச் செயலாற்ற முன்வர வேண்டும். வேற்றுமைகளை நாம் விரிவடையச் செய்தால் 25 வருடமல்ல 50 வருடங்களுக்கும் இராணுவத்தை வடகிழக்கு மாகாணங்களில் இருந்து திருப்பி அனுப்ப முடியாது.
எம் மக்களிடையே கலாச்சாரச் சீரழிவுகளை ஏற்படுத்தி, பாகுபாட்டை ஏற்படுத்தி மக்கள் ஒன்று சேராமல் தடுக்கச் சதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனை நாம் எமது ஒற்றுமையால் முறியடிக்க வேண்டும் அதற்கேற்றவாறு தான் மக்களுக்குப் பயன் தரும் வேலைத்திட்டங்களை, மக்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்கும் வேலைத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
எந்தவித பாகுபாடுமின்றி இப்பேர்ப்பட்ட வேலைத்திட்டங்களில் எமது தமிழ்ப் பேசும் மக்கள் அனைவரும் ஐக்கியப்படுத்தப்படுவார்கள்.  எல்லாவிதத் தடைகளையும் நாம் தகர்த்தெறிந்து முன்னேறும் காலம் தற்பொழுது உதித்துள்ளது என முதலைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgu6.html

Geen opmerkingen:

Een reactie posten