எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் மனித உரிமை அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணை குறித்த வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த 27 ஆவது கூட்டத் தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாகவும் பல நாடுகளின் பூகோள கால மீளாய்வு நிலைமைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.
விசேடமாக ஈராக்கிலும் சிரியாவிலும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை குழுவின் ஏற்பாட்டாளர் சன்ட்ரா பெய்டா அல்லது புதிய மனித உரிமை ஆணையாளர் இந்த வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ளார்.
கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் புதிய ஆணையாளர் செயித் அல் ஹுசைன் ஆரம்ப உரையை நிகழ்த்தவுள்ளார். அந்த உரையின்போது இலங்கை விவகாரம் குறித்தும் புதிய மனித உரிமை ஆணையாளர் பிரஸ்தாபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கையின் சார்பில் இந்தக் கூட்டத் தொடரில் அதிகாரிகள் மட்ட தூதுக்குழுவே கலந்துகொள்ளவுள்ளது. அமைச்சர்கள் மட்ட தூதுக்குழு இம்முறை கலந்துகொள்ளவில்லை.
அந்த வகையில் ஜெனிவாவில் உள்ள இலங்கையின் வதிவிட பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தலைமையிலான தூதுக்குழு 27 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து இரண்டு உயர் அதிகாரிகள் ஜெனிவாவுக்கான தூதுக்குழுவில் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUiw1.html
Geen opmerkingen:
Een reactie posten